“இடதுசாரிகளை ஒடுக்க நினைக்கிறதா தமிழக அரசு?”.. சிபிஎம் சண்முகம் சரமாரி கேள்வி!
CPM Shanmugam Slams TN Govt: கல்லூரி சுற்றறிக்கை விவகாரத்தில் இடதுசாரிகளை ஒடுக்கத் தமிழ்நாடு அரசு நினைக்கிறதா என சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். சிபிஎம், சிபிஐ கட்சிகள் தடை செய்யப்பட்டவையா எனக் கேட்ட அவர், அதிகாரிகள் அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் இயங்குகிறார்களா அல்லது தானடித்த மூப்பாகச் செயல்படுகிறார்களா என்றும் சாடியுள்ளார்.
சென்னை, ஆகஸ்ட் 21: கல்லூரி சுற்றறிக்கை மற்றும் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியரின் உத்தரவைச் சுட்டிக்காட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பி. சண்முகம் தமிழ்நாடு அரசை நோக்கிப் பல்வேறு காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளார். “சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகள் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா?” என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், இடதுசாரி சிந்தனைகளைக் கொண்ட மாணவர்களையும் ஜனநாயக இயக்கங்களையும் ஒடுக்கும் நோக்குடனேயே இத்தகைய சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டினார்.
இதையும் படிக்க: அமித் ஷா வருகைக்கு கருப்புக்கொடியா? காங்கிரஸை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்!
கொந்தளிப்பை ஏற்படுத்திய வாட்டாட்சியர் உத்தரவு:
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி, தங்கள் தாலுகாவிற்குட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சி உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகளைச் சேகரித்து அனுப்ப உத்தரவிட்ட விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது சட்டவிரோதமானது என்றும், குற்றப் பரம்பரை சட்டம் அமலில் இருந்த காலத்தில் கூட இது போன்ற சுற்றறிக்கைகள் வெளியிடப்படவில்லை என்றும் அக்கட்சியினர் சுட்டிக்காட்டினர். இந்த விவகாரத்தில் வட்டாட்சியரை உடனடியாகப் பணி விடுவிப்பு செய்தது மட்டும் போதாது; தவறிழைத்த அதிகாரிகளின் மீது கடுமையான வருவாய்த்துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் சண்முகம் வலியுறுத்தினார்.
மாணவர்கள் போராட்டத்தை தடுக்க உத்தரவு:
அதேபோல, உயர்கல்வித் துறை ஆணையர் சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், இடதுசாரி கட்சிகள் நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்ததற்குச் சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்தார். “இதற்கு எந்த உள்நோக்கமும் இல்லை” என்று அமைச்சர் தரப்பில் கூறுவது ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல. தலைமைச் செயலாளர் எஸ்சி. சாய்குமார் பங்கேற்ற சட்ட ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, மாணவர்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பதாகும்.
இதையும் படிக்க: அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயர் கைவிட்டது சரிதான்… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
யார் கட்டுபாட்டில் அதிகாரிகள்?
கல்லூரி கல்வி ஆணையர் அந்தச் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றுக்கொண்ட போதிலும், அதிகாரிகள் அமைச்சர்கள் அல்லது முதலமைச்சரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்களா அல்லது தானடித்த மூப்பாகச் செயல்படுகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. இடதுசாரிகளையும் ஜனநாயக இயக்கங்களையும் குறிவைத்து ஒடுக்கும் இத்தகைய நடவடிக்கைகள் இனிவருங் காலங்களில் நிகழாமல் இருப்பதைத் தமிழ்நாடு அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என சண்முகம் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.