Covid 19: அதிகரிக்கும் கொரோனா.. கர்ப்பிணிகள் மாஸ்க் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என ஏற்கனவே தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்து மாநில அரசுகளும் தீவிரமாக களம் கண்டுள்ளது.

தமிழ்நாடு, ஜூன் 6: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று (Covid Virus) அதிகரித்து வரும் நிலையில் கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் காய்ச்சல், இருமல், தலைவலி இருந்தால் மகப்பேறு காலத்திற்கு முன்பாகவே சிகிச்சைக்கு செல்ல வேண்டும் எனவும், கூட்ட நெரிசல், மக்கள் அதிகம் கூடும் இடங்களை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்து மாநில அரசுகளும் தீவிரமாக களம் கண்டுள்ளது. இப்படியான நிலையில் அவ்வப்போது வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
கொரோனா அச்சுறுத்தல்
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகம் முழுவதிலும் 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பரவத் தொடங்கி மிகப்பெரிய பேரழிவை உண்டாக்கியது. இந்த நோய் தாக்குதலில் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் இன்னுயிரை நீத்தனர். பல குடும்பங்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை, உறவினர்களை இழந்து தவித்தனர். கொரோனாவால் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் முழு ஊரடங்கு, பின்னர் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு என கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் இந்தியா ஸ்தம்பித்து போனது. இதனால் ஏராளமான பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டது.
பலர் தங்கள் வாழ்க்கையையும், வாழ்வாதாரங்களையும் தொலைத்தனர். இதனிடையே 2021 ஆம் ஆண்டு உருமாற்றப்பட்ட கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியதால் மறுபடியும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இம்முறை நோய்த்தொற்றை கையாளுவதற்கான சரியான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டதால் விரைவில் ஊரடங்கு முடிவுக்கு வந்தது. மேலும் அதற்கான தடுப்பூசிகளும் இந்த காலகட்டத்தில் கண்டறியப்பட்டது.




மீண்டும் பரவும் கொரோனா
இதற்கிடையில் கொரோனா முழுவதுமாக அளிக்கப்படவில்லை. அது உருமாற்றம் அடைந்து கொண்டே இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதும் பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் 2025 ஜூன் 6-ம் தேதி காலை 8:00 மணி நிலவரப்படி 5364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 4724 பேர் நோய் பாதிப்பில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என அதிகாரப்பூர்வ மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2025 ஜனவரி 1ம் தேதியிலிருந்து 330 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 2025 ஜூன் ஐந்தாம் தேதி 8 பேர் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 39 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், நான்கு பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.