தவெக கூட்டணியில் குழப்பம்?.. “வார்த்தைகளில் விளையாட வேண்டாம்!”.. திருமாவளவனுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி!!
கூட்டணி மற்றும் ஆட்சி ஆதரவு விவகாரங்களில் வார்த்தைகளை வைத்து விளையாட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். அரசியல் நிலைப்பாடு என்பது மிகத் தெளிவானது என்று சுட்டிக்காட்டிய அவர், ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மாற்றுக்கட்சியின் முதலமைச்சர் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவாகச் சட்டப்பேரவையில் வாக்களித்துவிட்டாலே, அங்கு தோழமை நிலை உருவாகிவிடுகிறது என்றார்.
சென்னை, ஜூலை 08: தமிழக அரசியல் களத்தில் புதிய கூட்டணிகள் மற்றும் அமைச்சரவை பங்கீடுகள் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ள சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையேயான உறவு குறித்து புதிய சர்ச்சை வெடித்துள்ளது. கூட்டணி குறித்து அமைச்சரவையில் இடம்பெற்றது மட்டுமே தவெக கூட்டணியில் முழுமையாக இணைந்துவிட்டதாக அர்த்தமாகாது என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறி சர்ச்சை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில், அரசியல் நிலைப்பாடுகளில் தேவையற்ற குழப்பங்களை விளைவிக்க வேண்டாம் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் திருமாவளவனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதையும் படிக்க : டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு, இஎஸ்ஐ வசதி – அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு
திருமாவளவன் விசித்திர விளக்கம்:
சமீபத்தில் நடைபெற்ற ஆட்சி அமைக்கும் நிகழ்வுகள் குறித்து நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், புதிய ஆட்சி அமைப்பதற்கு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பற்றாக்குறையாக இருந்ததாகக் குறிப்பிட்டார். அந்த இக்கட்டான சமயத்தில், விசிகவின் ஆதரவை நேரடியாகக் கோரி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் தரப்பில் இருந்து தங்களுக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பப்பட்டது.
அந்தக் கடிதத்தின் அடிப்படையிலேயே, விசிக தொடக்கத்தில் தவெக அரசுக்கு வெளியிலிருந்து மட்டுமே ஆதரவளிப்பதாக முடிவு செய்து அறிவித்தது. அதன் பின்னர் சுமார் பத்து நாட்கள் கழித்தே, அரசுக்குள்ளே சென்று அமைச்சரவையில் பங்கெடுப்பது என்ற இறுதி முடிவை விசிக எடுத்தது. எனவே, தாங்கள் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தாலும் கூட, தவெக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துவிட்டோம் என்று சொல்வதற்கு இதுவரை எந்த ஒரு அரசியல் நிகழ்வோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்போ வெளியாகவில்லை. குறிப்பாக அண்மையில் நடந்த தோழமைக் கட்சி கூட்டத்திலும் எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை என்று திருமாவளவன் ஒரு புதிய விளக்கத்தை முன்வைத்திருந்தார்.
கூட்டணியில் ஒரு பகுதிதான் – மாணிக்கம் தாகூர் பதிலடி:
திருமாவளவனின் இந்த கருத்துக்கு உடனடியாக மறுப்புத் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், கூட்டணி மற்றும் ஆட்சி ஆதரவு விவகாரங்களில் வார்த்தைகளை வைத்து விளையாட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். அரசியல் நிலைப்பாடு என்பது மிகத் தெளிவானது என்று சுட்டிக்காட்டிய அவர், ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மாற்றுக்கட்சியின் முதலமைச்சர் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவாகச் சட்டப்பேரவையில் வாக்களித்துவிட்டாலே, அங்கு தோழமை நிலை உருவாகிவிடுகிறது என்றார்.
இதையும் படிக்க : போக்குவரத்துத்துறையில் திமுக ஆட்சியில் போடப்பட்ட 5 டெண்டர்கள் ரத்து – பரபரப்பு தகவல்
அதுமட்டுமன்றி, அந்த ஆட்சியின் அமைச்சரவையிலேயே நேரடியாகப் பங்கு பெற்றுவிட்ட பிறகு, தாங்கள் கூட்டணியில் இல்லை என்று கூறுவது ஏற்புடையதல்ல என்றும், அமைச்சரவையில் சேர்ந்த உடனே அவர்கள் அந்த ஆட்சியின் ஒரு அங்கமாக மாறிவிடுகிறார்கள் என்றும் விளக்கினார். எனவே, இந்த விவகாரத்தில் மக்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என அவர் திருமாவளவனுக்குத் திட்டவட்டமாகப் பதிலளித்துள்ளார்.
அமைச்சரவை பங்கீட்டிற்குப் பிறகும் விசிக மற்றும் தவெக கூட்டணி குறித்துத் தலைவர்கள் மாற்றி மாற்றிப் பேசி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.