நீதிமன்ற தீர்ப்பை மீறும் கர்நாடகா – மேகதாது அணை விவகாரத்தில் பிரதமருக்கு முதல்வர் கடிதம்
Mekedatu Dam Issue : கர்நாடக அரசால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை தொடர்பாக பூமிபூஜை நிகழ்வு திட்டமிடப்பட்டு வருவதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் , பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கர்நாடக அரசின் முடிவு உச்சநீதிமன்ற தீர்ப்பில் தலையிடுவதற்குச் சமமானதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை, மே 26 : காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயன்று வரும் நிலையில் அதற்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் மே 25, 2026 அன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் கர்நாடக அரசால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை தொடர்பாக பூமிபூஜை நிகழ்வைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் , பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, உச்சநீதிமன்ற தீர்ப்பையும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையையும் அப்பட்டமாக மீறும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது நீர்த்தேக்கத்திற்கான ‘பூமி பூஜை’ நடைபெறும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளதை கனிவான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாகவும், கர்நாடக மாநில துணை முதல்வர் இது தொடர்பாக பொது வெளியில் தெரிவித்திருப்பது தங்கள் வாழ்வாதாரத்திற்காக காவிரி ஆற்றையே நம்பியிருக்கும் தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான விவசாயிகளிடையே, மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.




இதையும் படிக்க : விவசாய கடன் தள்ளுபடி.. தில்லுமுல்லு வேலை; திசைத்திருப்பவே இந்த அறிவிப்பு – எடப்பாடி பழனிசாமி சாடல்..
மேகதாது விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
கர்நாடக அரசால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை தொடர்பாக உத்தேசிக்கப்பட்டுள்ள பூமிபூஜை நிகழ்வைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிடவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், மாண்புமிகு இந்தியப் பிரதமர்… pic.twitter.com/wRGCgeXrf8
— TN DIPR (@TNDIPRNEWS) May 26, 2026
மேலும், காவிரி நதிநீர் பிரச்சினை என்பது மிகவும் முக்கியமானது. இந்த பிரச்னைக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின்னரே தீர்வு காணப்பட்டது என்பது இந்தியப் பிரதமர் அறிந்தது தான். கடந்த 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தற்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது, மேகதாது திட்டம், காவிரி நடுவர் மன்றம் அனுமதித்த திட்டங்களின் பட்டியலில் இடம்பெறவில்லை. , இதனை மேற்கண்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பும் உறுதிப்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், காவிரிப் படுகையானது நீர்ப் பற்றாக்குறை உள்ள படுகை என்பதைக் கருத்தில் கொண்டு, 50 சதவிகித நம்பகத்தன்மை அடிப்படையில் கிடைக்கக்கூடிய நீர் ஏற்கனவே சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் கூடுதல் நீரைப் பயன்படுத்துவதற்கோ அல்லது புதிய பெரிய நீர்த்தேக்கத்தை உருவாக்குவதற்கோ எவ்வித வாய்ப்பும் இல்லை என்பதாலும் கடந்த பிப்ரவரி 16, 2018 தேதியிட்ட தீர்ப்பின் மூலம் உச்சநீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்ட, தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பாக அனுமதிக்கப்பட்டுள்ள திட்டங்களைத் தவிர்த்து, காவிரி ஆறு அல்லது அதன் துணை நதிகளின் குறுக்கே வேறு ஏதேனும் புதிய திட்டத்தைத் திட்டமிடுவது, மேற்குறிப்பிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பில் தலையிடுவதற்குச் சமமானதாகும்.
இதையும் படிக்க : ‘நியாயப்படுத்த முடியாது.. குதிரபேர அரசியல் செய்யும் தவெக’.. காங்கிரஸ் கட்சி ஜோதிமணி கண்டனம்
உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் திருத்தப்பட்ட இறுதித் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்கு உறுதி செய்யப்பட வேண்டிய நீர்வரத்துக்கான மூன்று கூறுகளில் ஒன்றான கட்டுப்பாடற்ற நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து உருவாகும் நீர்வரத்தைத் தடுப்பதற்கு, கர்நாடக மாநிலம் முயன்று வருவதாகத் தமிழ்நாடு உறுதியாகக் கருதுகிறது என்றும், கர்நாடகா – தமிழ்நாடு எல்லையின் மிக அருகிலேயே, 67.16 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட ஒரு புதிய மேகதாது திட்டத்தை முன்மொழிவதன் மூலம் கர்நாடக மாநிலம் இம்முயற்சியை மேற்கொள்வதாகத் தமிழ்நாடு கருதுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.