“தமிழ்த்தாய் வாழ்த்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம்”.. சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் கொண்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க தனித் தீர்மானம்!!
Tamil Thai Vaazhthu Resolution: தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அலுவலக நிகழ்வுகளில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என்பதற்கான தனித் தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் நாளை கொண்டு வருகிறார். தமிழ்நாட்டின் மொழி மற்றும் பண்பாட்டு அடையாளத்தைப் பாதுகாக்கும் வகையில் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 10: தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளமாகவும், தமிழ் மொழியின் பெருமையைப் பறைசாற்றும் விதமாகவும் விளங்கக்கூடிய ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ தொடர்பாக மாநில அரசு மிக முக்கியமானதொரு சட்டப் போராட்டத்தையும் கொள்கை முடிவையும் மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய அனைத்து விதமான அரசு நிகழ்ச்சிகள், கல்வி நிறுவன விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழர்களின் மொழி உரிமை மற்றும் பண்பாட்டு அடையாளத்தைச் சட்டமன்றத்தில் சட்டப்பூர்வமாகப் பலப்படுத்தும் நோக்கில், முதலமைச்சர் விஜய் இன்று சட்டமன்றத்தில் சிறப்புத் தனித் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர உள்ளார். இந்த நடவடிக்கை தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூகக் களத்தில் பெரும் வரவேற்பையும் கவனத்தையும் பெற்றுள்ளது.
இதையும் படிக்க : ‘நாட்டாமை குடும்பம் என பச்சைக்குத்தி கொள்ளுங்கள், என்னை எளிதில் சந்திக்கலாம் ‘ – ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்திய சரத்குமார்
வரலாற்றுப் பின்னணியும் அரசாணை நிலவரமும்:
மனோன்மணீயம் சுந்தரனாரால் 1891-ஆம் ஆண்டு எழுதப்பட்ட மனோன்மணீயம் என்ற நாடக நூலில் இடம்பெற்ற பாடலே தமிழ்த்தாய் வாழ்த்தாகப் போற்றப்படுகிறது. இது கடந்த 1970-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் அரசு விழாக்களில் தொடக்கத்தில் பாடப்பட வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. தொடர்ந்து 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி இது மாநிலப் பாடலாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்துப் பல்கலைக்கழகங்கள், பள்ளி-கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பாகத் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பது அரசினுடைய உத்தரவாக இருந்து வருகிறது.
சட்டப்பேரவைத் தீர்மானத்தின் பின்னணி:
மத்திய உள்நாட்டலுவல்கள் அமைச்சகத்தின் மூலம் 2026 ஜூலை 9-ஆம் தேதியிட்ட கடிதத்தில் மாநிலப் பாடல் பாடப்படுவது குறித்த கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ள சூழலில், தமிழ்நாட்டின் மரபு உரிமைகளிற் தலையீடு இல்லாத வகையில் மாநில அரசு உறுதியான முடிவை எடுத்துள்ளது. 1970-ஆம் ஆண்டு முதல் மரபுத் தன்மையாகவும் அரசாணைகள் மூலமாகவும் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையைச் சட்டப்பேரவை மூலமாக ஏகமனதாக உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து என்பது வெறும் பாடலல்ல; மாறாக அது தமிழ் மொழிக்கும், தமிழினத்தின் தொன்மையான பண்பாட்டிற்கும் மக்கள் செலுத்தும் உயரிய மரியாதையின் வெளிப்பாடு என்பதால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதையும் படிக்க : “விமான நிலைய ஓடு பாதை முதல் 4 வழிச் சாலை வரை!”.. புதுச்சேரியை மாற்றப்போகும் அமித் ஷாவின் பிரம்மாண்ட அறிவிப்பு!!
சட்டமன்றத்தில் இன்று நடைபெறும் விவாதம்:
இதன் தொடர்ச்சியாக இன்று நடைபெறவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில், முதலமைச்சர் விஜய் இந்தச் சிறப்புத் தனித் தீர்மானத்தை முறைப்படி முன்மொழிகிறார். தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை அமைப்புகளின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ கட்டாயம் முதன்மையாகப் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் இந்தத் தீர்மானத்தின் மீது அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுத் தங்களது கருத்துகளைப் பதிவு செய்ய இருக்கின்றனர். இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழ்நாட்டின் பண்பாட்டுப் பெருமையைப் பாதுகாக்கும் முக்கிய மைல்கல்லாக இது பார்க்கப்படுகிறது.