திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.. சொல்லப்பட்ட முக்கிய விஷயம்..
CM MK Stalin Meeting: தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக அமைந்த இந்த வாக்குப்பதிவில் 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதில் கரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 91.92 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.46 சதவீத வாக்குப்பதிவு இடம் பெற்றுள்ளது.
சென்னை, ஏப்ரல் 24, 2026: 2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23, 2026 அன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக 85 சதவீத வாக்குப்பதிவு பதிவானது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் அதிகபட்ச வாக்குப்பதிவு இந்த தேர்தலிலேயே பதிவாகியுள்ளது.
குறிப்பாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குப் பிறகு நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின் தமிழகத்தில் உள்ள வாக்காளர் எண்ணிக்கை 5.73 கோடியாக குறைந்துள்ளது.
தமிழகத்தில் நிலவும் 4 முனைப்போட்டி:
மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
திமுக கூட்டணியை எடுத்துக்கொண்டால், திமுக 164 இடங்களில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 70 இடங்கள் காங்கிரஸ், மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக 169 இடங்களில் போட்டியிடுகிறது; மீதமுள்ள 65 இடங்கள் பாஜக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு பிரிக்கப்பட்டுள்ளது.
85.15% வாக்குப்பதிவு:
நாம் தமிழர் கட்சியும் தமிழக வெற்றிக்கழகமும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகின்றன. 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை ஒப்பிடுகையில், இந்த தேர்தலில் சுமார் 20 லட்சம் பேர் அதிகமாக வாக்களித்துள்ளனர்.
மேலும் படிக்க: 85% வாக்குப்பதிவு என்பது தமிழ்நாடு இதுவரை கண்டிராத ஒன்று.. தவெக தலைவர் விஜய்..
தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக அமைந்த இந்த வாக்குப்பதிவில் 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதில் கரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 91.92 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.46 சதவீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.
திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை:
இந்த நிலையில், மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்றைய தினம் தமிழகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகள் யார் ஆட்சி செய்யப் போகிறார்கள் என்பது தெளிவாகும்.
இந்த சூழலில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுக வேட்பாளர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த திமுக வேட்பாளர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் சேகர்பாபு, மா. சுப்பிரமணியன், நாசர், எபினேசர், மயிலை தா. வேலு, காஞ்சிபுரம் சுந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேற்கொள்ள வேண்டிய கண்காணிப்பு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு தேவையான அறிவுரைகளும் வழங்கப்பட்டன.
மே 4ஆம் தேதி திமுக வேட்பாளர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.