அசைவ பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..திடீரென குறைந்த கோழி இறைச்சி விலை..பின்னால் இருக்கும் அதிர்ச்சி காரணம்!
Bird Flu Spread: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவி உள்ள நிலையில், அசைவ பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், கறிக் கோழியின் இறைச்சி விலை கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இதனால், முட்டை விலையும் சரிவை சந்திக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

பறவை காய்ச்சல் எதிரொலியால் கோழி இறைச்சி விலை சரிவு
சென்னையில் கடந்த மாதம் அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் சந்தேகத்துக்கிடமான வகையில் காகங்கள் உயிரிழந்து கிடந்தன. இந்த காகங்களை கால்நடை துறை அதிகாரிகள் மீட்டு பரிசோதனைக்காக போபாலில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்திருந்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உயிரிழந்த காகங்களுக்கு ஹெச்ஐஎன்பி என்ற பறவை காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னையில் பறவை காய்ச்சல் பரவி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனுடன், தமிழக முழுவதும் உள்ள கோழி மற்றும் வாத்து பண்ணைகள் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பல்வேறு அறிவுறுத்தல்களை கால்நடை துறை வழங்கி இருந்தது. இந்த நிலையில், சென்னையை தவிர்த்து திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், நாகப்பட்டினம், சேலம், மதுரை, மயிலாடுதுறை, திண்டுக்கல், கோவை ஆகிய மாவட்டங்களில் பறவை காய்ச்சல் தொற்று பரவி இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடும் சரிவை சந்தித்த கோழி இறைச்சி விலை
இதனால், கோழி இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றை நன்கு வேக வைத்து உண்ண வேண்டும் என்று சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன. இதனால், கோழிப் பண்ணைகளில் வளர்க்கப்படும் கறிக் கோழிகளுக்கும் பறவை காய்ச்சல் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கு கூடும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புறநகர் பகுதிகளில் கறிக் கோழியின் இறைச்சி விலை கடுமையாக சரிவை சந்தித்துள்ளது.
மேலும் படிக்க: திண்டுக்கல் ஜல்லிக்கட்டு: காளை முட்டி புது மாப்பிள்ளை உயிரிழப்பு – சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்
கிலோவுக்கு ரூ.60 குறைவு
சென்னையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.280-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு கிலோ ரூ.220- ஆக குறைந்துள்ளது. 3 நாள்களில் சுமார் ரூ.60 சரிவை கண்டுள்ளது. கறிக் கோழியின் விலையில் வீழ்ச்சி இருந்தாலும், பறவை காய்ச்சல் நோய் பரவி வரும் நிலையில் வாங்கி உண்பதற்கு அசைவ பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், கறிக் கோழியின் இறைச்சி விற்பனை சரிவை சந்தித்துள்ளது. இதே போல, கோழி முட்டைகளின் விற்பனையும் கடும சரிவை சந்திக்கும் என்று தெரிகிறது.
மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட வாய்ப்பு
தற்போது, தமிழகத்தில் பரவி உள்ள பறவை காய்ச்சல் காகங்கள் மட்டுமின்றி கொக்கு, புறா, நாரை ஆகிய இடம் விட்டு இடம்பெயரும் பறவைகளுக்கும், அதன் மூலம் மற்ற இடங்களில் வசித்து வரும் வீட்டு பறவைகள் மற்றும் காட்டு பறவைகளுக்கும் இந்த நோய் பரவு அதிக வாய்ப்பு உள்ளது. அதன் மூலம் மனிதர்களுக்கும் பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இதே போல, பாலூட்டி இனங்களுக்கும் இந்த தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை மற்றும் கால்நடை துறை அறிவுறுத்தி உள்ளது.
மேலும் படிக்க: இந்த 8 மாவட்டங்களுக்கு பறவைக் காய்ச்சல் எச்சரிக்கை – கோழிகளுக்கு பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை