காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகிய மாணிக்கம் தாகூர்
Manickam Tagore Resigns : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இதுவரை வெளியாகாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் தான் அக்கட்சியின் தேர்தல் பொறுப்பில் இருந்து மாணிக்கம் தாகூர் திடீரென விலகியிருக்கிறார்.
சென்னை, ஏப்ரல் 1 : தமிழக சட்டமன்ற தேர்தல் தீவிரமடைந்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவதில் குழப்பம் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வேட்பாளர் தேர்வில் தாமதமாகி வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தலகுழுவில் முக்கிய பொறுப்பில் இருந்த மாணிக்கம் தாகூர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். இதுகுறித்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த கடிததத்தில் தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஏற்கனவே வேட்பாளர் தேர்வில் நீடித்து வந்த இழுபறி மேலும் அதிகரித்துள்ளது.
தேர்தல் பொறுப்பிலிருந்து விலகிய மாணிக்கம் தாகூர்
பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், கூட்டணி கட்சிகள்தங்கள் வேட்பாளர்களை அறிவித்து, வேட்பு மனு தாக்கல் செய்து வரும் நிலையில், காங்கிரஸ் மட்டும் இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடாதது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதையும் படிக்க : தேர்தலுக்குப் பின் விஜய்யுடன் பாஜக கூட்டணி.. NDA ஆட்சி அமையும்.. ராம்தாஸ் அத்வாலே உறுதி!!




தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் வேட்பாளரை தேர்வு செய்யப்படுவது தொடர்பாக தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாகவும், இதுவே வேட்பாளர் அறிவிப்பில் தாமதத்திற்கு காரணமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. சிலர் தங்களுக்கு உரிய வாய்ப்பு வழங்க வேண்டும் என போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
இந்த சூழ்நிலையில், ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பொறுப்பிலிருந்து மாணிக்கம் தாகூர் விலகியிருப்பது, காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையிலும், கை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
திமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியதில் இருந்தே மாணிக்கம் தாகூர் தனது அதிருப்தியை சமூக வலைதளம் வாயிலாக வெளிப்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வேட்பாளர்களில் தேர்வில் தொடரும் சிக்கல்கள் மற்றும் அக்கட்சியினரிடையே நிலவும் முரண்கள் அரசியல் அரங்கில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கூடுதலாக மாணிக்கம் தாகூர் தற்போது விலகியிருப்பது வேட்பாளர்கள் தேர்வு மேலும் தாமதப்படுத்தும் என கூறப்படுகிறது.
இதையும் படிக்க : எம்எல்ஏ பதவியில் 9 முறை… அமைச்சர் பதவியில் 6 முறை… அருப்புக்கோட்டையில் வெற்றியை பறைசாற்றுவாரா கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக புதிதாக களம் காணும் தவெக கூட வேட்பாளர்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பழம்பெரும் கட்சியான காங்கிரஸில் நிலவும் கருத்து மோதல் தேர்தலில் எதிரொலிக்குமா என்ற விவாதம் எழுந்துள்ளது.