புதுச்சேரியில் காணொளி வாயிலாக பிரச்சாரம்? காரணம் இதுவா?
Vijay Video Campaign Plan: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் காணொளி வாயிலாக பிரச்சாரம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி கிடைப்பதில் சிக்கல் நீடிக்கும் நிலையில் விஜய் இந்த முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி, ஏப்ரல் 1 : புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் காணொளி வாயிலாக பரப்புரை மேற்கொள்ள விருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தவெக தனித்து போட்டியிடவிருக்கிது. இந்த நிலையில் புதுச்சேரியில் விஜய் பரப்புரை மேற்கொள்ள 22 இடங்களில் அனுமதி கேட்கப்பட்ட நிலையில் 5 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த 5 இடங்களிலும் 2 மணி நேரத்திற்குள் பரப்புரையை முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கட்டப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதுச்சேரியில் காணொளி வாயிலாக பிரச்சாரம்?
இதனால் இந்த பிரச்னையை சமாளிக்க விஜய் காணொளி வாயிலாக பரப்புரையை மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தனித் தனியாக வீடியோ வெளியிடவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த வீடியோ வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
இதையும் படிக்க : அடேங்கப்பா! தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவின் சொத்து மதிப்பு இவ்வளவா? வெளியான தகவல்




இதற்கிடையில் விஜய்க்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என தவெக தரப்பில் இருந்து உள்துறை அமித் ஷாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. தவெக இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் எழுதிய அந்த கடிதத்தில், Y பிரிவு பாதுகாப்பில் உள்ள தவெக தலைவர் விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனவும், சென்னை பெரம்பூரில் இருந்து கொளத்தூருக்கு பரப்புரைக்கு சென்ற வழியில் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடும் விஜய் கடந்த மார்ச் 30, 2026 அன்று பெரம்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியில் ஏப்ரல் 2, 2026 அன்று வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி செல்லும் விஜய், திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று அரியமங்கலம் மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க : பூந்தமல்லி தவெக வேட்பாளருக்கு சிக்கல் – பெண் அளித்த பரபரப்பு புகார்
அதனைத் தொடரந்து திருச்சி மரக்கடை பகுதியில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக காவல்தறையினரிடம் தவெக தரப்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. அதன் படி வேட்பாளர் விஜய் பரப்புரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு வாகனத்தில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு மதியம் 12.30 மணியளவில் பேருந்தில் இருந்த படி பிரச்சாரம் செய்யவிருக்கிறார். அப்போது விஜய்யை யாரும் வாகனங்களில் பின் தொடரக்கூடாது எனவும், குழந்தைகள், முதியோர் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்றும் காவல்துறை தரப்பில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.