திடீரென தலைமைச் செயலகத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்.. CM தனிப்பிரிவில் மனு அளிக்க நீண்ட வரிசை!
மனு அளிக்க வரும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறையைக் கருத்தில் கொண்டு தலைமைச் செயலகத்தில் சில குறிப்பிட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதன்படி, தலைமைச் செயலக நுழைவு வாயிலில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் மனு அளிக்க வரும் பொதுமக்களை முழுமையாகப் பரிசோதனை செய்கின்றனர்.
சென்னை, ஜூலை 13: சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவில் தங்களது கோரிக்கை மனுக்களை அளிப்பதற்காக இன்று காலை முதலே நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குவிந்ததால் காமராஜர் சாலை வரை நீண்ட வரிசை காணப்பட்டது. புதிய அரசு பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, முதல்வர் தனிப்பிரிவுக்கு வரும் மனுக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், இன்று திங்கட்கிழமை வாரத்தின் முதல் நாள் என்பதால் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதையும் படிக்க: தவெக அரசுக்கு புதிய நெருக்கடி.. சிக்கிய குதிரை பேர விவகார வீடியோ ஆதாரம்.. ஆளுநரைச் சந்திக்க திமுக திட்டம்!
காமராஜர் சாலை வரை நீண்ட வரிசை:
இன்று காலை முதலே சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தனர். இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் மக்கள் குவிந்ததால், தலைமைச் செயலக வளாகத்தைத் தாண்டி வெளியே இருக்கக்கூடிய காமராஜர் சாலையிலேயே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
தங்களது வாழ்வாதாரக் கோரிக்கைகள் மற்றும் புகார்கள் மீது முதலமைச்சர் மிக விரைவில் தீர்வு காண்பார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாகவே, இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் மக்கள் நேரடியாக மனு அளிக்க வந்துள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மக்கள் நேரடியாக வர என்ன காரணம்?
முதல்வர் தனிப்பிரிவுக்கு இணையதளம் மூலமாகவே எளிதாகப் புகார்களைப் பதிவு செய்ய முடியும் என்ற நடைமுறை அமலில் உள்ளது. ஆன்லைனில் மனு அளித்தால் அதற்கான ஒப்புதல் சீட்டும் டிஜிட்டல் முறையில் அனுப்பப்படும். இருப்பினும், பொதுமக்கள் ஆன்லைனை விட நேரடியாக வந்து மனு அளிப்பதையே அதிகம் விரும்புகின்றனர். தலைமைச் செயலகத்திற்கு நேரடியாக வந்து அதிகாரிகளிடம் மனுவை ஒப்படைக்கும் போது, தங்களது கோரிக்கை உரிய அலுவலகத்திற்குச் சென்று சேர்ந்துவிட்டது என்ற திருப்தி அவர்களுக்குக் கிடைக்கிறது. மேலும், நேரடியாகவே வரிசை எண் குறிப்பிடப்பட்ட ஒப்புதல் சீட்டு வழங்கப்படுவதால், தங்களது மனுவின் மீது மிக விரைவாகத் தீர்வு கிடைக்கும் என்று பொதுமக்கள் முழுமையாக நம்புகின்றனர்.
கடுமையான பாதுகாப்பு மற்றும் நடைமுறைகள்:
மனு அளிக்க வரும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறையைக் கருத்தில் கொண்டு தலைமைச் செயலகத்தில் சில குறிப்பிட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதன்படி, தலைமைச் செயலக நுழைவாயிலில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் மனு அளிக்க வரும் பொதுமக்களை முழுமையாகப் பரிசோதனை செய்கின்றனர்.
உள்ளே செல்வதற்கு முன்பாக, பொதுமக்களின் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் ஜெராக்ஸ் நகல்கள் சரிபார்க்கப்பட்டு பெற்றுக் கொள்ளப்படுகின்றன. பரிசோதனை முடிந்தவுடன் அவர்கள் நேரடியாக முதலமைச்சர் தனிப்பிரிவு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மனுக்களைச் சமர்ப்பித்த பின்னர் மாற்றுப் பாதை வழியாக வெளியேறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : எதிர்க்கட்சி தூண்டுதலில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் – அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு
விமர்சனத்திற்குப் பின் மாற்றப்பட்ட நடைமுறை:
புதிய அரசு பொறுப்பேற்ற முதல் வாரத்தில் பொதுமக்களின் வருகை மிக அதிகமாக இருந்ததால், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தனிப்பிரிவுக்குள் அனுமதிக்காமல் வெளியிலேயே மனுக்களைப் போடுவதற்கான பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், இந்த நடைமுறை பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. இதனைத் தொடர்ந்து, அந்த நடைமுறை மாற்றப்பட்டு பொதுமக்கள் மீண்டும் நேரடியாகவே தனிப்பிரிவு அறைக்குச் சென்று அதிகாரிகளிடம் மனுக்களைக் கையளிக்கும் பழைய முறையே தற்போதும் தொடர்வதால், பொதுமக்கள் எவ்விதத் தடையுமின்றி தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.