செல்ல நாய் சாட்சியாக திருமணம் – இளம் ஜோடியின் வித்தியாச கல்யாணம்!
சமீபத்தில் ஈக்வடாரில் 'செல்லப்பிராணிகளுடன் கூடிய' திருமணங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, தங்கள் செல்லப்பிராணிகளைக் குடும்ப உறுப்பினர்களாகக் கருதும் தம்பதிகள் அவற்றின் முன்னிலையில் திருமணம் செய்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். மே மாதம் முதல், 50-க்கும் மேற்பட்ட தம்பதிகள் தங்கள் நாய்கள் மற்றும் பூனைகளின் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டுள்ளனர்
திருமண விழாக்களில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அல்லது உறவினர்களை சாட்சிகளாக அழைப்பது வழக்கம். இருப்பினும், ஒரு தம்பதியினர் தங்கள் திருமணத்திற்குத் தங்கள் செல்ல நாயைத் தலைமைத் தோழனாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்கள் ஒரு நாய்க்குட்டியைத் தங்கள் திருமணத்திற்குச் சாட்சியாக அழைத்து வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். ஈக்வடாரில் நடந்த இந்த புதுமையான சம்பவம், தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
டயானா துபிசா மற்றும் ஆண்ட்ரெஸ் அல்கிங்கா சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், தங்கள் திருமண விழாவை மேலும் சிறப்பாக்குவதற்காக, அவர்கள் தங்கள் செல்லப்பிராணியான பெக்கிங்கீஸ் நாய் லூனாவை சாட்சியாகத் தேர்ந்தெடுத்தனர். திருமணச் சான்றிதழில் தனது பாத முத்திரையைப் பதித்ததன் மூலம் லூனா அந்த விழாவின் ஒரு பகுதியாக ஆனது. சமீபத்தில் ஈக்வடார் அதிகாரிகள் ‘செல்லப்பிராணிகளுடன் கூடிய’ திருமணங்களை அனுமதித்துள்ளதால், தங்கள் செல்லப்பிராணிகளைக் குடும்ப உறுப்பினர்களாகக் கருதும் தம்பதிகள் இந்த நடைமுறையில் ஆர்வம் காட்டி வருகின்றனர். லூனாவின் பாத முத்திரைக்கு அதிகாரப்பூர்வ சட்ட அங்கீகாரம் எதுவும் இல்லை என்றாலும், அது அந்தத் தம்பதியினருக்கு ஒரு உணர்வுப்பூர்வமான நினைவாக மாறியுள்ளது.
திருமணத்திற்குப் பிறகு, டயானா, “லூனா எங்கள் வாழ்வில் ஓர் முக்கிய அங்கம். எங்கள் திருமணத்தில் அவள் இருந்தது மிகவும் விசேஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது,” என்று கூறினார். இந்த யோசனை தன் கணவருடையது என்றும் அவர் தெரிவித்தார். இளஞ்சிவப்பு நிற டல்லே கவுனில் லூனா தனித்துத் தெரிந்தாள். விழாவில் கலந்துகொண்ட விருந்தினர்கள் லூனாவுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர். மே மாதம் முதல் ஈக்வடாரில் 50-க்கும் மேற்பட்ட தம்பதிகள் தங்கள் செல்ல நாய்கள் அல்லது பூனைகளின் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குடும்பங்களில் செல்லப்பிராணிகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதால், இந்த வகை திருமணம் ஒரு புதிய போக்காக மாறி வருகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.