Traffic Changes: தாம்பரம் மக்களே.. இன்று முதல் போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
தாம்பரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, ஆகஸ்ட் 9 முதல் கனரக வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்லது. GST சாலை, குரோம்பேட்டை போன்ற முக்கிய சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. மாற்றுப் பாதைகள் குறித்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தாம்பரம், ஆகஸ்ட் 9: செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் (Tambaram) பகுதியில் போக்குவரத்து நெரிசலை (Traffic Changes) குறைக்கும் பொருட்டு அதிரடி மாற்றங்களை காவல்துறை மேற்கொண்டுள்ளது. இந்த மாற்றங்கள் இன்று (ஆகஸ்ட் 9) முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. என்னதான் தாம்பரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்தாலும் அதுதான் சென்னையின் நுழைவு வாயிலாக இருந்து வருகிறது. இன்றும் சென்னையில் தாம்பரத்தில் இருக்கிறோம் என சொல்லி வரும் அளவுக்கு மிக முக்கியமான பகுதியாக திகழ்ந்து வருகிறது. இப்படியான தாம்பரம் நாளுக்கு நாள் போக்குவத்து நெருக்கடியால் திணறி வருகிறது. சுழற்சி முறையில் போக்குவரத்து காவலர்கள் பணி செய்தாலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பீக் ஹவர்ஸ் என சொல்லப்படும் நேரங்களில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இப்படியான நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றிக் காணலாம்.
என்னென்ன மாற்றங்கள்?
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் தவிர்ப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 9ம் தேதி முதல் காலை 6 மணி தொடங்கி பிற்பகல் ஒரு மணி வரை கீழ்க்கண்ட சாலைகளில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தாம்பரம் மாநகர காவல் துறை போக்குவரத்து மாற்றங்களை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி ஜிஎஸ்டி சாலை, குரோம்பேட்டை, பல்லாவரம் – பம்மல் – குன்றத்தூர் சாலை – திருநீர்மலை சாலை – 200 அடி ரேடியல் ரோடு, தாம்பரம் – வேளச்சேரி சாலை மற்றும் முடிச்சூர் காந்தி ரோடு சாலை ஆகிய பகுதிகளில் கனரக வாகனங்கள் செல்வதற்கு அனுமதி கிடையாது.
Also Read: அன்புமணி தலைமையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி – நீதிமன்றம் உத்தரவு




மாற்றுப்பாதையில் செல்ல வழிகள்
அதே சமயம் குன்றத்தூரில் இருந்து சென்னை நோக்கி வரும் கனராக வாகனங்கள் அனைத்தும் அனகாபுத்தூர் பைபாஸ் சர்வீஸ் சாலை அருகே உள்ள ஏரிக்கரை சந்திப்பு மற்றும் திருநீர்மலை சாலை ஏரிக்கரை சந்திப்பில் இருந்து மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலை நோக்கி செல்ல வேண்டும்.
மேலும் ஒரகடத்தில் இருந்து சென்னைக்குள் வரும் கனரக வாகனங்கள் முடிச்சூர் சாலை சென்று வெளி சுற்றுச்சாலை சந்திப்பில் இருந்து வெளிச்சுற்றுச் சாலை நோக்கி செல்ல வேண்டும். காஞ்சிபுரத்திலிருந்து சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் முடிச்சூர் சாலை திரும்பி வெளிசுற்று சாலை வழியாக வெளியேற வேண்டும்.
தாம்பரத்திலிருந்து சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் தாம்பரம் மேம்பாலம், பழைய சோதனை சாவடி வாயில் மற்றும் ஜிஎஸ்டி சாலை சந்திப்பு சென்று அங்கிருந்து தாம்பரம் மேம்பாலம் மேல் பகுதியில் இருந்து மேடவாக்கம் மார்க்கமாக வேளச்சேரி நோக்கி செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Also Read: இனி ஈஸியா போகலாம்.. மரக்காணம் – புதுச்சேரி 4 வழிச்சாலைக்கு மத்திய அரசு ஒப்புதல்
சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் மதுரவாயல் பைபாஸ், இரும்புலியூர் சந்திப்பில் இருந்து பெருங்களத்தூர் நோக்கி செல்ல வேண்டும். சென்னை நோக்கி வரும் வாகனங்கள் செங்கல்பட்டில் இருந்து சிங்கப்பெருமாள் கோயில் நோக்கியும், வண்டலூர் வெளிச்ச சுற்றுச்சாலை வழியாக படப்பை நோக்கியும், வண்டலூர் பழைய பாலம் சென்று வாலாஜாபாத் செல்லவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனவே வாகன ஓட்டிகள் ஓஎம்ஆர் மற்றும் இசிஆர் சாலைகளை பயன்படுத்தி தாம்பரம் மாநகர போக்குவரத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.