AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மதுரை மாநகராட்சி முறைகேடு மர்மம்.. எப்போது விலகும்? நயினார் நாகேந்திரன் கேள்வி..

Nainar Nagendran On Madurai: பாஜக மாநில தலைவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “ஊழல் குற்றச்சாட்டுகள், நிர்வாக குளறுபடிகள், நம்பிக்கை இல்லா தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகத்தின் முக்கிய நகராட்சிகளான கோவை, நெல்லை ஆகிய பகுதிகளில் திமுக மேயர்கள் இதுவரை ராஜினாமா செய்துள்ளனர். இது தொடர்பான மர்மம் எப்போது விலகும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை மாநகராட்சி முறைகேடு மர்மம்.. எப்போது விலகும்? நயினார் நாகேந்திரன் கேள்வி..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 18 Oct 2025 07:58 AM IST

அக்டோபர் 18, 2025: மதுரை மாநகராட்சி விவகாரம் குறித்த மர்மம் எப்போது விலகும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது வலைதள பதிவில், “திமுக அமைச்சர்களுக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கக்கூடிய மதுரை முறைகேடு விவகாரத்தில் மேயரின் கணவர் தடாலடியாக கைது செய்யப்படுவதையும், மேயர் கமுக்கமாக ராஜினாமா செய்வதையும் பார்த்தால், சிறிய மீன்களை பலியிட்டு பெரிய தலைகளை காப்பாற்ற அரசு முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் வலுக்கிறது,” என குறிப்பிட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சியில் நடந்தது என்ன?

மதுரை மாநகராட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொத்துவரி வசூலிப்பதில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றது அம்பலமானது. இது மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த 2022 மார்ச் 4ஆம் தேதி மதுரை மாநகராட்சியின் மேயராக இந்திராணி பொறுப்பேற்றார். மதுரை மாநகராட்சியில் திமுக தனிப்பெரும் கட்சியாக 67 வார்டுகளை கைப்பற்றிய நிலையில், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜரின் தீவிர ஆதரவாளராக இருந்த பொன்வசந்தனின் மனைவி இந்திராணிக்கு மேயரான வாய்ப்பு கிடைத்தது.

முதலில் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்ற நிலையில், இந்திராணியின் கணவர் பொன்வசந்த் மாநகராட்சியில் பல்வேறு விஷயங்களில் தலையிடத் தொடங்கினார். அதிகாரிகளை ஒருமையில் பேசுவது, டெண்டர் பங்கு, சொத்துவரி, நீர் விநியோகம் போன்றவற்றில் பொன்வசந்த் கூறிய உத்தரவுகளை மேயராக இருந்த இந்திராணி செயல்படுத்தினார். ஆனால் அவர் தனது செயலை திருத்தாததால், ஒரு கட்டத்தில் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு மேயர் இந்திராணி வருவதற்கு வழிகள் தியாகராஜன் வாய்மொழி தடை விதித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: வீட்டு ஓனருக்கே ஷாக்.. 360 பவுன் நகை மோசடி செய்த தம்பதியினர்!

சொத்து வரி முறைகேடு விவகாரம்:

இந்த நிலையில் சொத்துவரி முறைகேடு விவகாரம் மதுரை மாநகராட்சியில் விஸ்வரூபம் எடுத்தது. தமிழக அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியதால் முதலமைச்சர் மண்டல தலைவர்கள் ஐந்து பேர் மற்றும் நிலைக்குழு தலைவர்கள் இரண்டு பேர் என மொத்தம் ஏழு பேரை பதவியிலிருந்து நீக்கினார். தொடர்ந்து புதிய தேர்வு செய்யும் பொறுப்பை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் க.ஏ.நேசன் மற்றும் மதுரை மாவட்ட அமைச்சர்களான மூர்த்தி, பழநிவேல் ராசன் ஆகியோரிடம் ஒப்படைத்தார்.

மேலும் படிக்க: நஷ்ட ஈடு பிரச்னை.. அண்ணனுக்கு பதில் தம்பி கொலை

இந்த முறைகேடு சம்பவம் தொடர்பாக இந்திராணியின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் இந்திராணி தொடர்ந்து மேயராக செயல்பட்டு வந்தது சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் மதுரை மாநகராட்சியின் மேயர் இந்திராணி ராஜினாமா செய்தார். புதிய மேயர் தேர்வு அக்டோபர் 17, 2025 அன்று நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

திமுகவின் தோல்வியே இதற்கு காரணம் – நயினார் நாகேந்திரன்:

இந்த சூழலில் தமிழக பாஜக மாநில தலைவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “ஊழல் குற்றச்சாட்டுகள், நிர்வாக குளறுபடிகள், நம்பிக்கை இல்லா தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகத்தின் முக்கிய நகராட்சிகளான கோவை, நெல்லை ஆகிய பகுதிகளில் திமுக மேயர்கள் இதுவரை ராஜினாமா செய்துள்ளனர்.

அந்த வரிசையில் தற்போது மதுரையும் இணைந்திருப்பது, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிப்பதில் திமுக அரசு எவ்வளவு தோல்வியடைந்துள்ளது என்பதற்கான எடுத்துக்காட்டு. மாநிலமெங்கும் நிலவும் நிர்வாக சீர்கேடுகள், ஊழல் மற்றும் வரி வசூலில் நடைபெறும் மோசடிகள் குறித்து சிபிஐ விசாரித்தால்தான் உண்மை வெளியாகும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us