தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ. 180 கோடி? -கைதானவர்கள் வாக்குமூலம் அளித்ததாக தகவல்
தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி வரை ஒதுக்கப்பட்டதாக, ஊத்தங்கரை எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக கைதானவர்கள் காவல் துறையில் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் தற்போது தமிழக அரசியலில் மிகுந்த அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது .
சென்னை, ஜூலை 3 : தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி வரை ஒதுக்கப்பட்டதாக, ஊத்தங்கரை எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக கைதானவர்கள் காவல் துறையில் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்காக கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சதித்திட்டம் தீட்டியதாகவும் ஒரு வாரம் நட்சத்திர ஓட்டலில் திட்டமிட்ட நிலையில் விவகாரம் கசிந்ததால் காலி செய்தோம் என்றும் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்ததாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த தகவல் தற்போது தமிழக அரசியலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும், அதற்கு ஆதரவாக செயல்படக்கோரி ரூ.35 கோடி வரை பேரம் பேசியதாக ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ இளையராஜா கடந்த ஜூன் 29, 2026 அன்று சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் அளித்தார். அவரது புகாரின்படி, திருவல்லிக்கேணி போலீசார் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு மற்றும் திருச்சியை சேர்ந்த நரேஷ் மற்றும் சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த தியாகராஜன் ஆகிய 3 பேரை ஜூலை 1, 2026 அன்று காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிக்க : கரூர் சம்பவம்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் சர்ச்சை பேச்சு.. திமுக எடுத்த திடீர் முடிவு!!




கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தில் பரபரப்பு தகவல்
பின்னர் அவர்கள் அளித்த தகவலின்படி தமிழ்நாடு நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் சீனிவாசன், பள்ளிக்கரணையை சேர்ந்த செல்வன், குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த ராஜன், கரூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் மற்றும் அதிபன் ரமேஷ் ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் ஜூலை 1, 2026 அன்று கைது செய்தனர். அவர்கள் அளித்துள்ள வாக்குமூலத்தின்படி இந்த பேர விவகாரத்தில் தலைமறைவாக உள்ள மற்றவர்களை தனிப்படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்த வழக்கில் நேற்று வரை 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் தான் கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தில் தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி வரை ஒதுக்கப்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தன்னிடம் ரூ.35 கோடி வரை பேரம் பேசியதாக ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ இளையராஜா வாக்குமூலம் அளித்திருந்ததாக கூறப்படும் நிலையில் தற்போது ரூ.180 கோடி வரை பேரம் பேசியதாக வெளியான தகவல் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிக்க : கோயில் வேலைகளுக்கு லஞ்சமா?.. ஆதாரத்துடன் எனக்கு அனுப்புங்க.. அமைச்சர் ரமேஷ் அதிரடி அறிவிப்பு!
முன்னதாக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அளித்த பேட்டியில் “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் முழு அனுமதியோடுதான், செந்தில் பாலாஜி கடந்த 40 நாட்களாக எங்களது பல எம்.எல்.ஏ-க்களை ரூ.10 கோடி முதல் ரூ.50 கோடி வரை பேரம் பேசி இழுக்க முயன்றுள்ளார். அவர்களின் ஆட்சி கவிழ்ப்பு சதி முறியடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.