Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விஸ்வரூபம் எடுக்கும் பிரச்னை.. அதிமுக மாஜி எம்பி சத்தியபாமாவின் கட்சி பொறுப்பு பறிப்பு

AIADMK Internal Issues : அதிமுகவில் உட்கட்சி பிரச்னை நடந்து வரும் நிலையில், செங்கோட்டையனின் ஆதரவாளரான அதிமுக முன்னாள் எம்.பி. சத்தியபாமாவை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி, எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தான் கட்சி பதவியை ராஜினாமா செய்வதாக சத்தியபாமாக கூறியதை சில நிமிடங்களில், எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.

விஸ்வரூபம் எடுக்கும் பிரச்னை.. அதிமுக மாஜி எம்பி சத்தியபாமாவின் கட்சி பொறுப்பு பறிப்பு
முன்னாள் எம்.பி சத்தியபாமா
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 07 Sep 2025 13:13 PM IST

சென்னை, செப்டம்பர் 07  : அதிமுகவின் முன்னாள் எம்.பி. சத்தியபாமா (Sathyabama) தான் வகித்து வந்த கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் ஆகிய கட்சி பதவிகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி (Edappadi Palanisamy) அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  தான் ராஜினாமா செய்வதாக  சத்தியபாமா கூறிய சில நிமிடங்களிலேயே எடப்பாடி பழனிசாமி, அவரை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளார்.  2025 செப்டம்பர் 6ஆம் தேதியான நேற்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்  கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அவரை தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் 2,000க்கும் மேற்பட்டோர் தங்களது கட்சி பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தனர். இந்த நிலையில், செங்கோட்டையனின் ஆதரவாளர் சத்தியபாமாவை கட்சி பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக அதிமுகவில் உட்கட்சி பிரச்னை இருந்தாலும், வெளியே வராமல் அமைதியாக இருந்தத. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், அதிமுக உட்கட்சி பிரச்னை வெடித்துள்ளது. குறிப்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் வெடித்துள்ளது.  அதிமுகவில்  இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என செங்கோட்டையன் கூறி வருகிறார். இதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் அவகாசமும் கொடுத்திருக்கிறார்.

Also Read : ’செங்கோட்டையனுக்கு தான் சப்போர்ட்.. விரைவில் சந்திப்பேன்’ உறுதியாக சொன்ன ஓபிஎஸ்!

எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை

10  நாட்களில் எடப்பாடி பழனிசாமி ஒன்றிணைக்காவிட்டால், அந்த மனநிலையில் இருக்கும் நாங்கள் அனைவரும் அதற்கான பணிகளை தொடங்குவோம் என கூறியிருந்தார். ஆனால், இதற்கு எடப்பாடி பழனிசாமி மவுனம் காத்து வரும் நிலையில்,  செங்கோட்டையன் உட்பட அவருக்கு ஆதரவாளர்களை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி வருகிறார்.  செங்கோட்டையன் நேற்று கட்சி பொறுப்பில் இருந்து  நீக்கியதை தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் ராஜினாமா செய்து வருகின்றனர்.

Also Read : ஓபிஎஸ், டிடிவியுடன் சமரசம் பேச தயார் – நயினார் நாகேந்திரன்!

2025 செப்டம்பர் 7ஆம் தேதியான இன்று கோபிசெட்டிபாளையத்தில் உள்ள  செங்கோட்டையனின்   ஆதரவாளர்கள் தங்களது ராஜினாமா  கடிதங்களை வழங்கினர். இதற்கிடையில், முன்னாள் எம்.பி சத்தியபாமாவும் ராஜினாமா செய்வதாக  கூறினார்.  இதனை கூறிய சில நிமிடங்களிலேயே, எடப்பாடி பழனிசாமி அவரை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கினார். இதற்கிடையில், 2025 செப்டம்பர் 9ஆம் தேதி செங்கோட்டையன் மீண்டும் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தெரிகிறது. இந்த சந்திப்பில் தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.