ஓபிஎஸ், டிடிவியுடன் சமரசம் பேச தயார் – நயினார் நாகேந்திரன்!
National Democratic Alliance: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனுடன் மீண்டும் கூட்டணிக்காக சமரசம் பேச தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். திமுக ஆட்சியைத் தடுக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இதனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மதுரை, செப்டம்பர் 7: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் சமரசம் பேச தான் தயாராக இருப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “டிடிவி தினகரன் எதற்காக கூட்டணியில் இருந்து வெளியேறினார் என சொல்ல வேண்டும். அவர் வெளியேறி வெளியேறியதற்கு நான் பொறுப்பாக முடியாது. இப்போதும் டிடிவி தினகரன் மற்றும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் நேரடியாக சென்று சமரசம் பேச தயாராக இருக்கிறேன். என்னை பொறுத்தவரை திமுக ஆட்சியில் இருக்க கூடாது.
அதற்காக ஒருமித்த கருத்துடைய அனைவரும் ஒன்றுபட வேண்டும் என நினைக்கிறேன். மேலும் திமுக என்றுமே தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க வரலாறும் கிடையாது. அதேசமயம் அண்ணாமலை கூட்டணியை சரியாக கையாண்டார் என டிடிவி தினகரன் தெரிவித்திருந்த நிலையில், அமித்ஷா முன்னிலையில் எடப்பாடி பழனிச்சாமி தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் என அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதற்கு தினகரன் என்ன பதில் சொல்லப் போகிறார் எனவும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’நயினார் நாகேந்திரன் சரியில்ல’ கூட்டணி விவகாரத்தில் தினகரன் பகீர் குற்றச்சாட்டு




தேசிய ஜனநாயக கூட்டணி நிலை என்ன?
2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அரசியல் கட்சியினர் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் கருத்து வேறுபாட்டால் பிரிந்த அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் ஆகஸ்ட் மாதம் இந்த கூட்டணியில் இருந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு வெளியேறுவதாக அதன் தலைவர் ஓ பன்னீர்செல்வம் தடாலடியாக அறிவித்தார்.
இப்படியான நிலையில் செப்டம்பர் முதல் வாரம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக டிடிவி தினகரன் தெரிவித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் நேற்று (செப்டம்பர் 6) செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாஜக தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இதையும் படிங்க: ‘ஒன்றுபடுவோம்… வெற்றி நிச்சயம்’ செங்கோட்டையன் பேச்சுக்கு சசிகலா, ஓபிஎஸ் பதில்!
அவருக்கு சரியாக கூட்டணியை கையாள தெரியவில்லை என்றும் அண்ணாமலை தலைவராக இருந்தவரை கூட்டணியை நன்றாக கொண்டு சென்றார் எனவும் கூறினார். அவரால் தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் இணைந்தும் ஒன்றாக செயல்பட்டோம். என தெரிவித்த டிடிவி தினகரன் பிரதமர் நரேந்திர மோடியை ஓ.பன்னீர்செல்வம் சந்திக்காதது தொடர்பாக நயினார் நாகேந்திரன் அளித்த பதில் ஆணவத்தின் உச்சம் என விமர்சித்தார். மேலும் இந்த கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு தொண்டர்களின் முடிவு தான் காரணம் எனவும் அவர் விளக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.