சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு.. கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றும் முதலமைச்சர் விஜய்..
சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள், கோயம்பேடு மற்றும் கொளம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உரிய சோதனைக்குப் பின்னரே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆகஸ்ட் 14, 2026: நாட்டின் 80-வது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாளை நாடு முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் சுதந்திர தின விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையைப் பொறுத்தவரையில், புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய், முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்ற உள்ளார். இது தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கடந்த ஒரு வாரமாக காமராஜர் சாலையில் அணிவகுப்பு உள்ளிட்ட ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நாளை காலை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் தேசியக் கொடியை ஏற்றிய பின்னர், சுதந்திர தின உரையாற்ற உள்ளார்.
முதல்முறையாக கொடியேற்றும் முதலமைச்சர் விஜய்:
முதலமைச்சர் விஜய் முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்ற உள்ளதால், சென்னையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கவும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், சென்னை மாநகரம் முழுவதும் போலீசாரின் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சிவகாசி பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்து.. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவிப்பு..
சுதந்திர தின விழாவையொட்டி, புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் முதலில் முப்படையினர் மற்றும் காவல்துறையினரின் அணிவகுப்பு நடைபெறும். அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பின்னர் முதலமைச்சர் விஜய் தேசியக் கொடியை ஏற்ற உள்ளார். இதைத்தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
5 அடுக்கு பாதுகாப்பு:
சுதந்திர தின விழாவையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. இதற்கான முறையான அறிவிப்புகளை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது. கோட்டை வளாகத்தைச் சுற்றிலும் ஆயுதம் ஏந்திய போலீசார் உட்பட 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், சென்னை நீலாங்கரையில் உள்ள முதலமைச்சர் இல்லம் முதல் தலைமைச் செயலகம் வரையிலான பகுதிகள் ரெட் சோன் என அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ‘கருப்பு’ பட பாணியில் சோக சம்பவம்.. திருடு போன நகையை மீட்க ஓராண்டாக போராடும் ஏழைப் பெண்!
சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள், கோயம்பேடு மற்றும் கொளம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உரிய சோதனைக்குப் பின்னரே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதுதவிர, சென்னையில் உள்ள முக்கிய தங்கும் விடுதிகள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.