சென்னை பள்ளிக்கரணையில் பெரும் தீ விபத்து.. 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சேதம்..
சென்னையில் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. இந்த குப்பைக் கிடங்கிற்கு அருகே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தீ வேகமாக பரவியதால் அங்கு இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் தீக்கிரையாகி சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன் 4, 2026: சென்னையின் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குப்பைக் கிடங்கிற்கு அருகே மாநகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தீ வேகமாக பரவியதால் அங்கு இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் தீக்கிரையாகி சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்தால் வாகனங்கள் முழுவதுமாக எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
பள்ளிக்கரணையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து:
TodayFire Accident Pallikaranai Velachery @TVKWarriorsHQ @TVKHQITWingOffl @EcrPSaravanann #Kaiveli #Velachery #Chennai #FireAccident pic.twitter.com/d57keGMxZx
— IamPrabhaNanban (பிரபாகரன்) (@IamPrabhaNanban) June 4, 2026
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பல தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தண்ணீர் லாரிகள் மூலம் தொடர்ந்து தீ அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், தீயை விரைந்து அணைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மாநகராட்சி ஆணையரும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து கூடுதல் தண்ணீர் லாரிகள் மற்றும் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: சென்னை மேயர் – தவெக எம்.எல்.ஏ இடையே அரசு விழாக்களில் அடுத்தடுத்து வெடித்த மோதல்
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர்:
தீ விபத்து காரணமாக அப்பகுதியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதுடன், அடர்ந்த கரும்புகை பரவியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக, பள்ளிக்கரணை வழியாக செல்லும் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
மேலும் படிக்க: மின்சாரத்துறை பகீர்.. காணாமல்போன ஹார்ட் டிஸ்க்குகள்.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்கள்!
பள்ளிக்கரணை குப்பைக் கிடங்கு முக்கியமான பகுதியாக இருப்பதாலும், தீ விபத்து பெருமளவில் பரவியதாலும் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சமும் பரபரப்பும் நிலவி வருகிறது. தீ விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.