பழனிக்கு செல்லும் வழியில் கார் விபத்தில் சிக்கிய ஆந்திர குடும்பம்.. பச்சிளம் குழந்தை உப்டப 3 பேர் பலி!
Andhra Pradesh Family Accident | ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருந்து பழனி முருகன் கோயிலுக்கு ஒரு குடும்பம் சென்ற நிலையில், வழியில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 7 மாத பச்சிளம் குழந்தை உட்பட மூன்று பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
பழனி, மே 03 : ஆந்திர பிரதேச (AP – Andhra Pradesh) மாநிலம், சித்தூர் மாவட்டம், நலகம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் தனது குடும்பத்துடன் பழனி முருகன் கோயில்லுக்கு செல்வதற்கு முடிவு செய்துள்ளார். அதன்படி மனைவி சொப்னா, உறவுக்கார பெண் மஞ்சுளா, தனது மாத கைக்குழந்தை அணியாஸ்ரீ மற்றும் சில உறவினர்களை அழைத்துக்கொண்டு காரில் பழனிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட கோர விபத்தில் மூன்று பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர விபத்து சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சாலை ஓடை பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான கார்
ஆந்திராவில் இருந்து புறப்பட்ட அவர்கள் கரூர், திண்டுக்கல் வழியாக நேற்று (மே 02, 2026) காலை ஒட்டன்சத்திரம் வந்தடைந்துள்ளனர். பின்னர் அவர்கள் திண்டுக்கல் – பொள்ளாச்சி 4 வழிச் சாலையில் பழனி நோக்கி சென்றுக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது சரியாக சத்திரப்பட்டி சுங்கச்சாவடி அருகே சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓர ஓடை பள்ளத்தில் கவிழுந்து விபத்துக்குள்ளானது.
இதையும் படிங்க : பாஜகவின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு.. முகவர்களுக்கு தேர்தல் பொறுப்பாளர் முக்கிய உத்தரவு!




சம்பவ இடத்திலேயே பலியான பச்சிளம் குழந்தை, பெண்
இந்த விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய மஞ்சுளா மற்றும் 7 மாத கைக்குழந்தை ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் அண்ணாதுரை, சொப்னா மற்றும் உறவினர்களான பாஸ்கரன், வனிதா மற்றும் ஓட்டுநர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், 5 பேரையும் பொதுமக்களின் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பாஸ்கரன் என்பவர் பலியாகியுள்ளார்.
இதையும் படிங்க : தேர்தல் முடிவுக்கு ரெடியா? எடப்பாடியுடன் மாஜிக்கள் திடீர் சந்திப்பு.. சேலத்தில் நடப்பது என்ன?
வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் போலீசார்
பின்னர் மஞ்சுளா மற்றும் 7 மாத கைக்குழந்தை அணியாஸ்ரீ ஆகியோரின் உடல்களை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திர பிரதேசத்தில் இருந்து பழனிக்கு வந்த குடும்பம் மிக கடுமையான கார் விபத்தில் சிக்கிய நிலையில், பச்சிளம் குழந்தை உள்ளிட்ட 3 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.