IPL 2026: இதுவரை ஆர்சிபி மட்டுமே தகுதி.. மீதம் 3க்கு போட்டியிடும் 5 அணிகள்! யாருக்கு வாய்ப்பு?
IPL 2026 Playoff Scenario: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ராஜஸ்தானுக்கு எதிராக ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கலாம். ஆனால், டெல்லிக்கு இது குறிப்பிடத்தக்க பலனைத் தரவில்லை. டெல்லி அணி 13 போட்டிகளில் இருந்து வெறும் 12 புள்ளிகளையும், மோசமான நிகர ரன் ரேட்டையும் கொண்டுள்ளது.
ஐபிஎல் 2026 (IPL 2026) பிளேஆஃப் சுற்றுக்கான சமன்பாடு தற்போது மிகவும் சுவாரஸ்யமான ஒரு கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று அதாவது 2026 மே 17ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajastan Royals) அணிக்கு எதிரான டெல்லி கேப்பிட்டல்ஸின் வெற்றி, ஒட்டுமொத்த புள்ளிப் பட்டியலையும் மாற்றிவிட்டது. இந்தப் போட்டி சில அணிகளின் பாதையை எளிதாக்கியுள்ள நிலையில், பல அணிகளுக்கு ஒவ்வொரு போட்டியும் வாழ்வா சாவா என்ற நிலையை எட்டியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 193 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை பதிவு செய்தது, ஆனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் கடைசி ஓவரில் இலக்கை எட்டி போட்டியை வென்றது. இந்தத் தோல்வி, ராஜஸ்தான் அணி முதல் 4 இடங்களுக்குள் ஒரு இடத்தைப் பிடிப்பதை கடினமாக்கியுள்ளது.
ALSO READ: விட்டு கொடுக்காமல் போராடிய குஜராத்.. கெத்தாக கம்பேக் கொடுத்து கொல்கத்தா வெற்றி!
பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஆர்சிபி:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தற்போது 18 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சிறப்பான நிகர ரன் ரேட் காரணமாக, ஆர்சிபி அணி அதிகாரப்பூர்வமாக பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் ஆர்சிபி தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு, சரியான நேரத்தில் தனது இடத்தை உறுதி செய்துள்ளது. இப்போது, ஆர்சிபி அணி முதல் 2 இடங்களுக்குள் நீடிப்பதில் கவனம் செலுத்தும்.
டெல்லி அணிக்கு வாய்ப்புள்ளதா..?
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ராஜஸ்தானுக்கு எதிராக ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கலாம். ஆனால், டெல்லிக்கு இது குறிப்பிடத்தக்க பலனைத் தரவில்லை. டெல்லி அணி 13 போட்டிகளில் இருந்து வெறும் 12 புள்ளிகளையும், மோசமான நிகர ரன் ரேட்டையும் கொண்டுள்ளது. இதனால்தான் டெல்லியின் பிளேஆஃப் வாய்ப்புகள் ஏறக்குறைய முடிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணிகளும் ஐபிஎல் 2026 சீசனில் இருந்து வெளியேற்றப்பட்டன.
எந்த அணிக்கு வாய்ப்புள்ளது..?
குஜராத் டைட்டன்ஸ் அணி தற்போது வலுவான நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி 13 போட்டிகளில் இருந்து 16 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். மேலும் தங்களது கடைசிப் போட்டியில் வெற்றி பெற்றால், முதல் 2 இடங்களுக்கு எளிதாக முன்னேறிவிடும். இதற்கிடையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 12 போட்டிகளில் இருந்து 14 புள்ளிகளைப் பெற்றுள்ளது. பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற, மீதமுள்ள 2 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டும் அவர்களுக்குப் போதுமானது.
பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் சென்னை இடையே கடும் போட்டி:
பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு ஒவ்வொரு போட்டியும் ஒரு இறுதிப் போட்டியாக மாறியுள்ளது. பஞ்சாப் அணி 13 போட்டிகளில் இருந்து 13 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன், தனது கடைசிப் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும். மறுபுறம், ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் தலா 12 புள்ளிகளைப் பெற்றுள்ளன. பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற, இவ்விரு அணிகளும் தங்களின் மீதமுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். இந்த அணிகளுக்கு நிகர ரன் ரேட்டும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும்.
ALSO READ: கே.எல்.ராகுல் அதிரடி – டெல்லி கேப்பிடல்ஸ் அபார வெற்றி
கொல்கத்தாவிற்கு ஒரு சான்ஸ்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இன்னும் பிளேஆஃப் போட்டியில் இருந்து வெளியேறவில்லை. நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் 12 போட்டிகளில் இருந்து 11 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். கேகேஆர் தங்களின் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால், 15 புள்ளிகளை எட்டுவார்கள். இருப்பினும், கொல்கத்தா மற்ற அணிகளின் முடிவுகளையும் சார்ந்திருக்க வேண்டும். குறிப்பாக, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகளுக்கு எதிரான போட்டிகளே கொல்கத்தாவின் தலைவிதியைத் தீர்மானிக்கும்.



