IPL 2026: காயம் காரணமாக விலகல்.. மாற்று வீரரை எப்படி தேர்ந்தெடுக்கலாம்? ஐபிஎல் விதி கூறுவது என்ன?
IPL Player Replacement Rules: ஒரு வீரர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகும்போது, ஃபிரான்சைஸ்கள் அவருக்குப் பதிலாக வேறொரு வீரரை அறிவிக்கின்றன. ஆனால், இதற்கும் சில விதிமுறைகள் உள்ளன. பதிவுசெய்துள்ள, விளையாடத் தயாராக உள்ள வீரர்களின் பட்டியலிலிருந்து ஃபிரான்சைஸ்கள் மாற்று வீரர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 19வது பதிப்பு (IPL 2026) தொடங்குவதற்கு முன்பே, பல வீரர்கள் பல்வேறு காரணங்களால் விலகியுள்ளனர். சிலர் காயம் (Player Injury) அல்லது உடற்தகுதிப் பிரச்சினைகள் காரணமாக ஐபிஎல் 2026 சீசனில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். வீரர்களின் இந்த திடீர் விலகல்கள் அணியின் உரிமையாளர்களுக்கு பெரிய தலைவலியாக இருந்து வருகின்றது. இருப்பினும் இதுபோன்ற சூழ்நிலையில் அணி நிர்வாகம் மாற்று வீரர்களை தேர்வு செய்யலாம். இது, ஏலத்தில் பதிவுசெய்தும் வாங்கப்படாத வீரர்களுக்கு சில நேரங்களில் நன்மைகளில் முடிந்துள்ளது. சமீபத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சாம் கரனுக்குப் பதிலாக ஷனகாவையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நாதன் எல்லிஸுக்குப் பதிலாக ஸ்பென்சர் ஜான்சனையும் மாற்று வீரர்களாக அறிவித்துள்ளன.
ஐபிஎல் 2026 சீசனில் இருந்து விலக்கப்பட்ட பல வீரர்கள், குணமடைய கால அவகாசம் தேவைப்படும். சமீபத்தில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாராவின் உடற்தகுதி காரணமாக, இலங்கை கிரிக்கெட் வாரியம் அவருக்கு தடையில்லாச் சான்றிதழ் (NOC) வழங்கவில்லை. பணிச்சுமை மேலாண்மை காரணமாக மிட்செல் ஸ்டார்க் தனது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தால் ஐபிஎல்லில் விளையாட அனுமதிக்கப்படவில்லை. இதற்கிடையில், சர்வதேச கிரிக்கெட்டில் கவனம் செலுத்த விரும்பும் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட்டும் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
ALSO READ: வெளியான ஐபிஎல் 2026ன் 2ம் கட்ட அட்டவணை.. சென்னையில் எத்தனை போட்டிகள்?




ஐபிஎல்-லில் வீரர்கள் எப்படி மாற்றப்படுகிறார்கள்?
ஒரு வீரர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகும்போது, ஃபிரான்சைஸ்கள் அவருக்குப் பதிலாக வேறொரு வீரரை அறிவிக்கின்றன. ஆனால், இதற்கும் சில விதிமுறைகள் உள்ளன. பதிவுசெய்துள்ள, விளையாடத் தயாராக உள்ள வீரர்களின் பட்டியலிலிருந்து ஃபிரான்சைஸ்கள் மாற்று வீரர்களைத் தேர்ந்தெடுக்கலாம். ஏலத்திற்குப் பதிவுசெய்த வீரர்கள் மட்டுமே மாற்று வீரர்களாகக் கருதப்படுவார்கள். பிசிசிஐ விளையாட தயாராகவுள்ள வீரர்களை பொதுவெளியில் அறிவிப்பதில்லை என்றாலும், இறுதிப் பட்டியலில் உள்ள வீரர்களின் பட்டியலில் இருந்து அணி நிர்வாகம் மாற்று வீரரை தேர்வு செய்து கொள்ளலாம்.
கடந்த 2025ம் ஆண்டிலிருந்து மாறுபட்டு, இந்த ஆண்டு ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ ஒரு குறிப்பிடத்தக்க சலுகையை வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடங்கி முன்பு ஒரு அணி தனது 7 போட்டிகளுக்கு மாற்று வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருந்த நிலையில், தற்போது உரிமையாளர்கள் 12 ஐபிஎல் லீக் போட்டிகள் வரை தங்கள் மாற்று வீரர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
ALSO READ: ஐபிஎல் 2026 தொடங்குது.. சிஎஸ்கே முதல் ஆர்சிபி வரை.. இந்த 10 விஷயங்களை கவனிங்க!
மாற்று வீரருக்கான விதி என்ன?
- மாற்று வீரரின் சம்பளம், அவர் யாருக்குப் பதிலாக விளையாடுகிறாரோ அந்த வீரரின் சம்பளத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது. சம்பள உச்சவரம்பை விட அணிகள் அதிகமாகச் செலவு செய்வதைத் தடுப்பதற்காக இது செய்யப்படுகிறது.
- மாற்று வீரர்கள் அதே பிரிவை சேர்ந்த வீரராகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. உதாரணமாக, ஒரு பந்துவீச்சாளர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால், ஒரு அணி நிர்வாகம் ஒரு பந்துவீச்சாளரையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில்லை. அவருக்குப் பதிலாக ஒரு பேட்ஸ்மேனையும் அணியில் சேர்க்கலாம். உதாரணமாக, கடந்த 2025 சீசனில் காயம் காரணமாக பந்துவீச்சாளராக இருந்த குர்ஜ்பனீத் சிங்குக்கு பதிலாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் டிவால்ட் பிரெவிஸைத் தேர்ந்தெடுத்தது.
- உடல்நலக் காரணங்களால் ஒரு வீரர் மாற்றப்பட்டால், அவரால் அந்த சீசன் முழுவதும் மீண்டும் விளையாட முடியாது. இருப்பினும், அணிகள் அவரை அடுத்த சீசனுக்குத் தக்கவைத்துக் கொள்ளலாம். கடந்த 2025 ஆண்டு முதல் பிசிசிஐ தற்காலிக மாற்று வீரர்களை அனுமதித்தது. ஆனாலும், அந்த வீரர்கள் ஐபிஎல் 2026ல் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், அவர்களை அடுத்த 2027 சீசனுக்குத் தக்கவைத்துக் கொள்ள முடியாது.