India vs South Africa: வெற்றியைத் தீர்மானிக்கப்போகும் இந்தியாவின் X Factor வீரர்கள்!!
T20 World Cup 2026 Super 8: சூப்பர் 8 சுற்றில், அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய இரு அணிகளும் முனைப்பு காட்டும். அந்தவகையில், தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சு மற்றும் அதிரடி பேட்டிங்கை முறியடிக்க, இந்திய அணியில் சில குறிப்பிட்ட வீரர்கள் துருப்புச் சீட்டாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 (2026 T20 World Cup) தொடரின் சூப்பர் 8 சுற்றில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா (India vs South Africa) அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான மோதல் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் நிறைந்திருப்பதால், இந்தப் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் ‘மிஸ்டரி ஸ்பின்னர்’ வருண் சக்கரவர்த்தி மற்றும் தென் ஆப்பிரிக்காவின் இளம் நம்பிக்கை நட்சத்திரம் டெவால்ட் பிரெவிஸ் ஆகியோருக்கு இடையிலான பலப்பரீட்சை சுவாரஸ்யமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
சூப்பர் 8 சுற்றில், அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய இரு அணிகளும் முனைப்பு காட்டும். அந்தவகையில், தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சு மற்றும் அதிரடி பேட்டிங்கை முறியடிக்க, இந்திய அணியில் சில குறிப்பிட்ட வீரர்கள் துருப்புச் சீட்டாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: T20 WC 2026: ‘சூப்பர் 8’ சுற்றில் இன்று நியூசி., – பாக்., பலப்பரீட்சை.. இரு அணிகளின் பலமும், பலவீனமும்..
வருண் சக்கரவர்த்தி:
தற்போது டி20 தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் வருண் சக்கரவர்த்தி, இந்தப் போட்டியின் மிகப்பெரிய ‘எக்ஸ்-ஃபேக்டராக’ கருதப்படுகிறார். தென் ஆப்பிரிக்க பேட்டர்கள் பெரும்பாலும் அதிரடி ஆட்டக்காரர்கள், ஆனால் சுழற்பந்து வீச்சைப் புரிந்துகொண்டு ஆடுவதில் அவர்களுக்குச் சில தடுமாற்றங்கள் உண்டு. வருணின் பந்துவீச்சு முறையை (Mystery Spin) எளிதில் கணிக்க முடியாது. குறிப்பாக மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி ரன் வேகத்தைக் கட்டுப்படுத்துவதில் இவர் வல்லவர். தென் ஆப்பிரிக்காவின் வளர்ந்து வரும் நட்சத்திரம் டெவால்ட் பிரெவிஸ் (Dewald Brevis) போன்றவர்களுக்கு வருண் சக்கரவர்த்தி மிகப்பெரிய சவாலாக இருப்பார்.
ஜஸ்பிரித் பும்ரா:
பும்ரா அணியில் இருப்பது எப்போதும் எதிரணிக்கு ஒரு அச்சம்தான். தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஷான் பொல்லாக் கூட, பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய இருவருமே இந்தியாவின் தனித்த சக்தி (“Point of Difference”) என்று குறிப்பிட்டுள்ளார். பவர்-ப்ளே ஓவர்களில் விக்கெட் எடுப்பது மற்றும் டெத் ஓவர்களில் யார்க்கர் பந்துகளால் ரன்களை கட்டுப்படுத்துவது என பும்ரா ஒரு முழுமையான ஆயுதம். தென் ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர்களான குயின்டன் டி காக் மற்றும் மார்க்ரம் ஆகியோரை ஆரம்பத்திலேயே வீழ்த்த பும்ராவின் பங்களிப்பு மிக அவசியம்.
சூர்யகுமார் யாதவ்:
பேட்டிங்கில் இந்தியாவின் மிகப்பெரிய பலமே சூர்யகுமார் யாதவ் தான். மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் பந்தை விளாசும் அவரது ‘360 டிகிரி’ ஆட்டம் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களின் திட்டத்தைக் குலைத்துவிடும். தென் ஆப்பிரிக்காவின் அதிவேகப் பந்துவீச்சாளர்களான நோக்கியா மற்றும் ரபாடா ஆகியோரின் வேகத்தை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ரன் சேர்க்க சூர்யாவால் முடியும். இவர் களத்தில் 5 ஓவர்கள் நிலைத்து நின்றாலே ஆட்டத்தின் போக்கு மாறிவிடும்.
திலக் வர்மா:
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சமீபத்திய தொடர்களில் திலக் வர்மா அபாரமான ஃபார்மில் உள்ளார். குறிப்பாக, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடந்த டி20 தொடரில் 280 ரன்களைக் குவித்து அசத்தினார். இந்திய அணியின் டாப் ஆர்டரில் ஒரு இடது கை பேட்டர் இருப்பது கூடுதல் பலம். ஸ்பின்னர்களுக்கு எதிராக இவர் ஆடும் விதம் தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் போன்றவர்களுக்குத் தலைவலியை ஏற்படுத்தும்.
இதையும் படிக்க: ‘சூப்பர் 8’ சுற்றில் அதிரப்போகும் குரூப்-1.. இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்..
அஞ்சாத டெவால்ட் பிரெவிஸ்:
முன்னதாக, ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரெவிஸிடம், இந்தியாவின் வருண் சக்கரவர்த்தியை எதிர்கொள்வது குறித்த சவால் பற்றி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர் மிகவும் நிதானமாகவும், சவாலை நிராகரிக்கும் வகையிலும் பேசினார். அதாவது, “அவர் ஒரு சுழற்பந்து வீச்சாளர், எனவே நான் அவரை ஒரு சுழற்பந்து வீச்சாளராகவே எதிர்கொள்வேன். பந்தைக் கூர்ந்து கவனித்து, அதற்கு ஏற்றவாறு எதிர்வினை (React) ஆற்றுவேன்,” என்று பிரெவிஸ் கூறினார்.