ICC Rules: ஒருநாள் கிரிக்கெட்டில் முக்கிய விதியை மாற்றும் ஐசிசி.. பலன் பெறும் சர்வதேச அணிகள்!
ICC New ODI Cricket Rules: ஒரு அணியின் தலைமைப் பயிற்சியாளர், போட்டியின் நடுவில் 'ட்ரிங்ஸ் ப்ரேக்கின்' போது போட்டி நடைபெறும் களத்திற்குள் நுழைந்து, வியூகங்களைத் திட்டமிடவும், வீரர்களுக்கு நேரடியாக தகவல்களை வழங்கவும் அனுமதிக்கப்படுவார். இந்த விதிகள் தொடர்பாக ஏற்கனவே ஐசிசி தலைமைச் செயல் அதிகாரிகள் குழு (CEC) கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2026 சீசனுக்கு மத்தியில் ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகவும் குறிப்பிடத்தக்க விதியை மாற்றுவது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) பரிசீலித்து வருகிறது. அதன்படி, ஒரு அணியின் தலைமைப் பயிற்சியாளர், போட்டியின் நடுவில் ‘ட்ரிங்ஸ் ப்ரேக்கின்’ போது போட்டி நடைபெறும் களத்திற்குள் நுழைந்து, வியூகங்களைத் திட்டமிடவும், வீரர்களுக்கு நேரடியாக தகவல்களை வழங்கவும் அனுமதிக்கப்படுவார். இந்த விதிகள் தொடர்பாக ஏற்கனவே ஐசிசி தலைமைச் செயல் அதிகாரிகள் குழு (CEC) கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, வருகின்ற 2026 மே 30ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவிருக்கும் ஐசிசி வாரியக் கூட்டத்தில் இதற்கு இறுதி ஒப்புதல் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ALSO READ: ஆப்கானிஸ்தான் எதிரான இந்திய அணி.. எந்த ஐபிஎல் அணியிலிருந்து எத்தனை வீரர்கள் தேர்வு..?
முன்மொழியப்பட்ட விதியின் முக்கிய அம்சங்கள்:
நேரடித் தொடர்பு:
தற்போதைய விதிகளின்படி, மாற்று வீரர்கள் மட்டுமே தண்ணீர் மற்றும் விளையாட்டு உபகரணங்களை ஆடுகளத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். புதிய விதி அமல்படுத்தப்பட்டால், ஐபிஎல் போட்டிகளை போன்று இனி வரும் காலங்களில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பயிற்சியாளர்கள் நேரடியாக ஆடுகளத்திற்கு வந்து, கேப்டன் மற்றும் வீரர்களுடன் நேரடியாக கலந்துரையாடலாம்.




ஒருநாள் போட்டிகளில் இனி 2 ப்ரேக்:
ஒருநாள் போட்டிகளின் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் 2 ட்ரிங்ஸ் ப்ரேக்கள் வழங்கப்படும். இந்த 2 இடைவேளைகளின் போதும் பயிற்சியாளர்கள் களத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
டி20-யால் ஏற்பட்ட மாற்றம்:
டி20 சர்வதேசப் போட்டிகளிலும், ஐபிஎல் போன்ற லீக்குகளிலும் ‘வியூக இடைவேளைகளின்’ போது பயிற்சியாளர்கள் களத்திற்கு வர வேண்டும் என்ற விதி ஏற்கனவே உள்ளது. இது தற்போது 50 ஓவர் கிரிக்கெட்டிற்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
செயல்படுத்தும் நேரம்:
வருகின்ற 2026 மே 30ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் வாரியம் ஒப்புதல் அளித்தால், இந்த புதிய விதிமுறை வருகின்ற 2026 அக்டோபர் 1 முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும்.
மற்ற முக்கிய விதிகள்:
அணி தலைமைப் பயிற்சியாளர் தொடர்பான விதி அறிமுகப்படுத்துவது மட்டுமின்றி, கிரிக்கெட்டின் தன்மையையே மாற்றக்கூடிய வேறு சில முக்கிய முன்மொழிவுகளையும் ஐசிசி கொண்டுள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் பிங்க் பால் பயன்பாடு:
மோசமான வானிலை அல்லது போதிய வெளிச்சமின்மை காரணமாக டெஸ்ட் போட்டிகள் ரத்து செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக, இரு அணிகளின் ஒப்புதலுடன், பாரம்பரிய சிவப்புப் பந்துக்குப் பதிலாக ‘பிங்க் பந்தை’ப் பயன்படுத்தி மின்விளக்குகளின் கீழ் போட்டியைத் தொடர அனுமதிக்கும் திட்டம் ஒன்று உள்ளது.
டி20 போட்டிகளின் வேகத்தை அதிகரிக்கும் நோக்கில், இரு இன்னிங்ஸ்களுக்கு இடையேயான இடைவேளை நேரம் 20 நிமிடங்களிலிருந்து 15 நிமிடங்களாகக் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது.
ALSO READ: கில் தலையீடு! பண்ட் துணை கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டாரா? வைரலாகும் போட்டோ!
சட்டவிரோத பந்துவீச்சு நடவடிக்கைகளைக் கண்டறிய ஏஐ:
களத்தில் உள்ள நடுவர்கள் இனி நிகழ்நேர ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும். இதன் மூலம், போட்டியின் நடுவிலேயே பந்துவீச்சாளர்களின் சந்தேகத்திற்கிடமான அல்லது சட்டவிரோத பந்துவீச்சு நடவடிக்கைகளை நடுவர்கள் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்.
மொத்தத்தில், இந்த ஐசிசி பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டால், கிரிக்கெட்டின் தன்மை மாறும். ஒரு காலத்தில் ட்ரெஸ்ஸிங் ரூமில் மட்டும் முடங்கிக் கிடந்த பயிற்சியாளர்கள், இனி ஒரு நேரடிப் போட்டியின் போக்கைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பார்கள். கால்பந்தைப் போலவே, கிரிக்கெட்டிலும் தொழில்நுட்பத்தின் அதிகரித்து வரும் பயன்பாடும், பயிற்சியாளர்களின் நேரடித் தலையீடும் சந்தேகமின்றி இந்த விளையாட்டை மேலும் விறுவிறுப்பாக்கும்.