Vastu Tips: இந்த செடிகளை வீட்டில் வளர்த்தால் பண மழை தான்!
வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் சில தாவரங்களை வளர்ப்பது செல்வம், செழிப்பு, அமைதி ஆகியவற்றை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. மணி பிளாண்ட், ஜேட் செடி, மூங்கில், மயில் செடி, சங்கு புஷ்பம் போன்ற தாவரங்கள் செல்வ வளத்தை ஈர்க்கும். இவற்றை வீட்டின் சரியான திசையில் வைப்பதன் மூலம் நேர்மறை ஆற்றலைப் பெறலாம்.

நிலம் சார்ந்த வாஸ்து சாஸ்திரம் என்பது தனி மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது. இதனை நாம் சரியாக பின்பற்றினால் வாழ்க்கையில் எதிர்பாராத பலன்களையும் வளர்ச்சியையும் பெறலாம் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஓர் நிலம் எப்படி இருக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல் அந்த இடத்தில் வரும் கட்டடம் எந்த திசையில் அமைய வேண்டும், வாசற்கதவு தொடங்கி கழிவறை வரை எந்த மூலையில் இருக்க வேண்டும், ஓரிடத்தில் என்ன பொருட்கள் இருக்கலாம், இருக்கக்கூடாது என்பது வரை வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் செல்வம், பக்தி, அமைதி, வியாபார வளர்ச்சி, கல்வியில் பயன், நேர்மறை, எதிர்மறை தாக்கங்களில் கூட வாஸ்து முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. அப்படியாக செல்வ வளத்தை ஈர்க்கும் சில தாவரங்கள் இருப்பதாக வாஸ்து சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றிக் காணலாம்.
வீட்டில் வளர்க்க வேண்டிய தாவரங்கள்
இந்த தாவரங்களை நாம் வீட்டில் வளர்ப்பதால் செல்வத்தின் அதிபதியாக கருதப்படும் லட்சுமி மற்றும் குபேரரரின் ஆசிகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. மேலும் அந்த குடும்பத்தில் நிதி வளங்கள், பல வழிகளில் வருமானம் அதிகரிக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
இந்த வரிசையில் நாம் முதலாவதாக வளர்க்க வேண்டிய தாவரம் மணி பிளாண்ட். இது இயற்கையாகவே அசுத்தமான காற்றை சுத்தப்படுத்தி மனதிற்கு நேர்மறையான எண்ணங்களை ஊட்டக்கூடியது. இந்த செடி வாஸ்து சாஸ்திரத்தில் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இதனை வளர்ப்பதால் செல்வம், மகிழ்ச்சி, அமைதி,செழிப்பு ஆகியவை கிடைக்கும் என நம்பப்படுகிறது. இந்த மணி பிளாண்ட் செடியை தென் கிழக்கு திசையில் வைப்பது சிறந்ததாகும்.




Crassula ovata எனப்படும் ஜேட் செடி அதிர்ஷ்ட செடி என்று அழைக்கப்படுகிறது. இதற்கு பண மரம் என்றும் பெயருண்டு. இத்தகைய ஜேட் செடியை நாம் வீட்டில் வைத்தால் அது செல்வத்தை ஈர்க்கிறது. இதனால் நிதி நிலைமையை பலப்படுகிறது. இந்த ஜேட் செடியை வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு திசையில் வளர்ப்பது மங்களகரமானது என சொல்லப்படுகிறது.
வீட்டில் மூங்கில் செடி வளர்ப்பது மிகவும் மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது. வீட்டின் நடுவில் மூங்கில் செடியை நடுவது காந்தம் போல பணத்தை ஈர்க்கும் என நம்பப்படுகிறது. இது மகிழ்ச்சியையும் செழிப்பையும் அதிகரிக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.Calathea makoyana எனப்படும் மயில் செடி பல மடங்கு பயன்களை கொடுக்கும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதனை உங்கள் வீட்டில் நட்டால் அதிர்ஷ்டம் கைகூடும் என சொல்லப்படுகிறது. இந்த செடியை வீட்டின் வடகிழக்கு திசையில் வைப்பது சிறந்ததாகும்.
சங்கு புஷ்பம் செடி இந்து மதத்தில் புனிதமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த செடியை வீட்டில் வளர்ப்பதன் மூலம், சனி பகவானின் ஆசிகள் வீட்டின் மீது இருக்கும் என நம்பப்படுகிறது. வீட்டின் கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இந்த சங்கு புஷ்பம் செடியை வைப்பதால் நிதி ரீதியிலான பலன்கள் ஏராளம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
(வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் உள்ளது. இதற்கு அறிவியல் பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் என்றும் பொறுப்பேற்காது)