Aani Thirumanjanam: ஆனி திருமஞ்சன விரதம் இருப்பது எப்படி? – கிடைக்கும் பலன்கள் ஏராளம்!
ஆனி மாத உத்திர நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் ஆனி திருமஞ்சனம், சிவபெருமானுக்குரிய முக்கியமான நாளாகும். சிதம்பரம் நடராஜர் கோயிலில் 10 நாட்கள் விழாவாகக் கொண்டாடப்படும் இவ்விழாவில், 6 நாட்கள் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இந்த நாளில் விரதமிருந்து வழிபடுவதால் பல நன்மைகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே வழிபடலாம்.

ஆனி திருமஞ்சனம் என்பது சிவபெருமானுக்குரிய உகந்த நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திரத்தில் இந்த பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. சிவபெருமானின் 64 வகையான அவதாரங்களில் ஒன்று தான் நடராஜர். தன் உள்ளங்கால் பிடியில் உலகை சுழல வைக்கும் தத்துவத்தை உணர்த்தும் விதமாக நடராஜர் வழிபாடு செய்யப்பட்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். இப்படியான நடராஜரின் அனைத்து சிவ ஆலயங்களில் அவதரித்தாலும் அவரின் முதல் ஆலயமாக பார்க்கப்படுவது சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் தான். ஆனி திருமஞ்சனம் இங்கு வெகு சிறப்பாக 10 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படும்.
6 நாட்கள் விசேஷ அபிஷேக வழிபாடு
நடராஜ பெருமானுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6 நாட்கள் விசேஷ அபிஷேக வழிபாட்டுடன் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரை, புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி,ஆவணி வளர்பிறை சதுர்த்தசி, மாசி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தசி அன்று சிறப்பு வழிபாடு நடைபெறும். இவற்றில் ஆனி மற்றும் மார்கழி மாத விசேஷ நாட்களில் அதிகாலையில் நடைபெறும் அபிஷேகம் திருமஞ்சனம் என அழைக்கப்படுகிறது. மஞ்சனம் என்றால் மங்களகரமானது மற்றும் புனித நீராடல் என்பது பொருளாகும்.
ஆனி திருமஞ்சன விரதம்
இந்த நாளில் நாம் விரதம் இருந்து வழிபட்டால் ஏராளமான பலன்கள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. அப்படியான ஆனி திருமஞ்சன நாளில் நாம் அதிகாலையில் எழுந்து புனித நீராட வேண்டும். பின்னர் அருகில் உள்ள சிவ ஆலயங்களில் நடராஜருக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகத்தை கண் குளிர காண வேண்டும். இதனை செய்தால் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி இன்பம் பிறக்கும் என்பது ஐதீகமாகும்.
பணி நிமித்தம் மற்றும் குடும்ப சூழல் காரணமாக பலரால் காலை நேரத்தில் கோயிலுக்கு செல்ல முடியாது. அவர்கள் வீட்டிலேயே நடராஜர் அல்லது சிவபெருமான் புகைப்படம், சிலை ஆகியவற்றின் முன் விளக்கேற்றி வழிபடலாம். தொடர்ந்து நாள் முழுவதும் உண்ணாமல் நோன்பு இருக்க வேண்டும். உடல்நல பாதிப்பு உடையவர்கள் இந்நாளில் பால், பழம் எடுத்துக் கொண்டு விரதத்தை தொடரலாம். மாலையில் வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்த பின்னர் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று விரதத்தை நிறைவு செய்யலாம்.
இந்த ஆனி திருமஞ்சன விரதத்தை நாம் நேரில் காண்பதால் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக நீண்ட ஆயுளுடன் இருப்பார்கள் என நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கணவன் – மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி இன்பம் பிறக்கும் என்பது ஐதீகமாகும். அதேபோல் எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் மன தைரியம், பக்குவம் ஆகியவை ஆண்களுக்கு நடராஜர் தந்தருளுவார் என்பது ஐதீகமாக உள்ளது. மொத்தத்தில் ஆனி திருமஞ்சனம் அனைவரது வாழ்விலும் ஆனந்தத்தை செழிக்க வைக்கும் என்பது தீராத நம்பிக்கையாக உள்ளது.
(ஆன்மிக நம்பிக்கையின்படி இந்த செய்தியில் இடம்பெற்றுள்ள தகவல்களுக்கு அறிவியல் பூர்வமான விளக்கம் கிடையாது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)