Hanuman Temple: தாடி, மீசையுடன் இருக்கும் அனுமன்.. கோயிலில் குவியும் பக்தர்கள்!
சலசர் பாலாஜி கோயிலில் தாடி, மீசையுடன் கூடிய அனுமன் சிலை அமைந்துள்ளது. இது சுயம்புவாக தோன்றியதாக நம்பப்படுகிறது. 1811ல் ஒரு விவசாயி தனது வயலில் கண்டுபிடித்த சிலை, கனவில் அனுமன் தோன்றி சலசருக்கு கொண்டு செல்லுமாறு கூறியதை அடுத்து, அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அனுமன் இந்து மதத்தில் மிக முக்கியமான வழிபாட்டு கடவுளாக கருதப்படுகிறார். தெய்வம் என்று சொல்வதைக் காட்டிலும் பக்தியிலும், விசுவாசத்திற்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறார். அதனால் தான் இத்தகைய அனுமன் சைவ, வைணவ ஆகிய இரண்டு சமய வழிபாட்டு தலங்களிலும் கட்டாயம் இடம்பெறுகிறான். இந்த நிலையில் நாம் இந்த தொகுப்பில் தாடி, மீசையுடன் இருக்கும் அனுமனைப் பற்றிக் காணலாம். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சுரு மாவட்டத்தில் அமைந்திருக்கும் சலாசர் நகரில் தான் அந்த கோயிலானது உள்ளது. இங்கு தாடி மற்றும் மீசையுடன் கூடிய அனுமனை நாம் காணலாம். இந்தியாவில் அனுமன் சிலைக்கு தாடி மற்றும் மீசையுடன் கூடிய ஒரே கோயில் இது என்று நம்பப்படுகிறது. இது மிகவும் தனித்துவமான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. சலசர் பாலாஜி என்ற பெயர் கொண்ட இந்த கோயிலில் உள்ள அனுமான் கோயிலானது அப்பகுதி மக்களிடையே மிகவும் பிரபலமானதாக திகழ்கிறது. இந்த அனுமன் சிலை ஒரு சுயம்புவாக உருவானதாக இன்றளவும் நம்பப்படுகிறது. இதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதையும் சொல்லப்படுகிறது.
சுயம்புவாக தோன்றிய அனுமன்
அதாவது கி.பி.1811 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள நாகௌர் மாவட்டத்தின் அசோட்டா என்ற கிராமம் இருந்தது. அங்கும் வாழும் விவசாயி ஒருவர் தனது வயலை உழும் போது இந்த சிலையைக் கண்டுபிடித்தார். அதன் பிறகு, அந்த கிராமத்தில் உள்ள ஒருவரின் கனவில் அனுமன் தோன்றினார். அப்போது, “நான் என் பக்தரான மோகன்தாஸுக்காக தோன்றினேன். எனவே உடனடியாக என்னை சலசருக்கு அழைத்துச் செல்லுங்கள்” என்று கூறியுள்ளார்.
அதேசமயம் சாலாசரில், துறவி மோகன்தாஸ் மகாராஜ் தனது கனவில் தாடி மற்றும் மீசையுடன் கூடிய அனுமனைக் கண்டார். இதற்கிடையில் அனுமனின் சிலையானது ஒரு காளை வண்டியில் பூட்டப்பட்டு சலசருக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த காளை வண்டி ஊருக்குள் சென்ற எந்த இடத்தில் நின்றதோ அங்கு சிலை நிறுவப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. இந்த இடமே இன்றைய சலசர் பாலாஜி வழிபாட்டு தலமாக பார்க்கப்படுகிறது.




தேங்காய் காணிக்கை செலுத்தும் பக்தர்கள்
இந்தக் கோயில் வளாகத்தில் துறவி மோகன்தாஸின் சமாதியும் அமைக்கப்பட்டுள்ளது.அதில் 300 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அணையா தீபமும் உள்ளது. சலசர் பாலாஜியை தரிசிக்க வரும் பக்தர்கள் தேங்காய் காணிக்கை செலுத்துவது வழக்கமாக உள்ளது. அவ்வாறு செய்வதால் பக்தர்களின் ஒவ்வொரு விருப்பமும் நிறைவேறும் என்பது ஒரு வலுவான நம்பிக்கையாக பக்தர்களிடையே உள்ளது. இந்த கோயிலுக்கு ராஜஸ்தான் மாநில மக்கள் மட்டுமல்ல, நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளிலும் இருந்தும் கூட பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
இங்குள்ள அனுமன் சிலை மனிதனைப் போன்ற கண்கள், மீசை மற்றும் தாடியுடன் உள்ளது. மேலும் நாம் வழிபடும்போது அது நம்மை காண்பது போல இருப்பது மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வாக இருக்கும் என பலரும் தெரிவித்துள்ளனர்.