Tiruchendur: வீட்டிலிருந்தே திருச்செந்தூர் முருகன் அருளைப் பெறுவது எப்படி?
Tiruchendur Murugan Temole: நம்மால் பல்வேறு காரணங்களால் மனதிற்கு மிக நெருக்கமான தெய்வமாக இருந்தாலும் திருச்செந்தூர் முருகனை சென்று வழிபட முடியாத சூழல் உண்டாகும். அப்படியான பட்சத்தில் முருகனின் அருளைப் பெற உதவும் சக்திவாய்ந்த மந்திரங்கள் பற்றி சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதனைப் பற்றிக் காணலாம்.

முருகா என்றழைக்காவா.. முத்துக்குமரா என்றழைக்கவா.. கந்தா என்றழைக்கவா? என தொடங்கும் தமிழ் கடவுளான முருகனின் பக்திப் பாடல்களை நாம் கேட்டு அக மகிழ்ந்திருப்போம். முருகன் என்ற பெயரை கேட்டால் நாம் பக்தி பூர்வமாக சரணடைந்து விடுவோம். பல்வேறு பெயர்களில் ஒவ்வொரு கோயில்களிலும் தனக்கென தனி சன்னதி கொண்டு காட்சி கொடுக்கும் முருகனை நாம் வழிபட்டால் ஏராளமான பலன்களைப் பெறலாம் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதேசமயம் தமிழ்நாட்டில் முருகனுக்கு திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, பழமுதிர்சோலை, திருத்தணி, சுவாமிமலை என அறுபடை வீடுகள் உள்ளது. இதில் இரண்டாம் படை வீடான கடல் சார்ந்த நிலப்பரப்பில் திகழும் திருச்செந்தூருக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அங்கு முருகனைக் காண மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர். தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் ஏராளமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம்
முருகப் பக்தர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் 2025 ஆம் ஆண்டு, ஜூலை 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்படியான நிலையில் திருச்செந்தூர் கோயிலுக்கு நாம் நினைத்த போதெல்லாம் சென்று விட முடியாது. முருகன் நம்மை அழைக்க வேண்டும். அப்போது தான் எவ்வித தங்கு தடையின்றியும் அவனை நாம் தரிசிக்க முடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் பலருக்கும் திருச்செந்தூர் முருகனின் அருளை பெற முடியவில்லையே என மன வருத்தம் ஏற்படலாம்.
அப்படியான பக்தர்கள் கவலையே படாதீர்கள். திருச்செந்தூர் முருகனுக்குரிய திருமந்திரங்களை தினமும் இறை வழிபாட்டின்போது பாராயணம் செய்தாலே போதும். அவனின் அருளாசி நமக்கு முழுவதுமாக கிடைக்கும் என நம்பப்படுகிறது.




திருச்செந்தூர் முருகனுக்குரிய மந்திரங்கள்
அதன்படியாக ஆன்மிக வளர்ச்சியும் ஞானமும் கிடைக்க வேண்டுமாயின், “ஓம் ஷண்முகாய நமஹ” என சொல்ல வேண்டும். அதேபோல் அனைத்து நலன்களும் செல்வ வளமும் கிடைக்க “ஓம் முருகனே நமஹ” என கூறலாம். வலிமையும் உற்சாகமும் பிறக்க ”ஓம் கந்தாய நமஹ” என உச்சரிக்க வேண்டும். வாழ்க்கையில் ஏற்பட்ட தடைகள் நீங்க “ஓம் சுப்ரமண்யாய நமஹ” என கூற வேண்டும்.
ஓம் வேலாயுதாய நமஹ என சொல்லும்போது ஒவ்வொரு விஷயங்களிலும் வேகம் மற்றும் வளர்ச்சி ஏற்படும். மேலும் முருகனின் கருணை மற்றும் ஆசி கிடைக்க ஓம் சுவாமிநாதாய நமஹ என பாராயணம் செய்ய வேண்டும். பயம் நீங்கி அளவற்ற பாதுகாப்பு கிடைக்க ஓம் சரவணபவ ஸ்ரீ முருகனே நமஹ என உச்சரிக்க வேண்டும்.
இதில் ஓம் சரவணபவ ஸ்ரீ முருகனே நமஹ என்பது திருச்செந்தூர் முருகனின் சக்தி வாய்ந்த மந்திரம் என கூறப்படுகிறது. இதனை அனுதினமும் உச்சரிப்பதால் அவனின் அருள் நமக்கு பரிபூரமாணமாக கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்கள் நீங்கி இன்பம் பிறக்கும் என்பது ஐதீகமாகும்.
(இறை நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல் பூர்வமாக விளக்கம் இல்லை)