Ashtami Day: அஷ்டமியில் இதெல்லாம் செய்தால் இரட்டிப்பு பலன்கள் தெரியுமா?
பொதுவாக பஞ்சாங்கத்தில் அஷ்டமி திதி என்பது சுபகாரியங்களுக்கு ஏற்றதல்ல எனக் கூறப்படுகிறது. ஆனால், தெய்வ வழிபாடு, தியானம் போன்றவற்றுக்கு இது சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணர் வழிபாடு, பைரவர் வழிபாடு போன்றவற்றில் நல்ல பலன்கள் கிடைக்கும். புதிய தொழில்களைத் தொடங்குவது, முக்கியமான வேலைகளை ஆரம்பிப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

பொதுவாக பஞ்சாங்கத்தில் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் தலா 14 திதிகள் உள்ளது. மற்ற திதிகள் மாதம் 2 நாட்கள் வரும் நிலையில் வளர்பிறையில் பௌர்ணமி திதியும், தேய்பிறையில் அமாவாசை திதியும் ஒருமுறை வரும். இந்த திதிகளில் நாம் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல் அந்தந்த திதிகளும் கடவுள்களுக்கு என அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அமாவாசை முன்னோர்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் நாம் எந்தவொரு செயலை செய்வது என்றாலும் அதனை அஷ்டமி, நவமி, தசமி ஆகிய திதிகள் பார்த்து செய்வோம். இந்த நாளில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் எவ்வளவு பெரிய காரியமாக இருந்தாலும் இந்த நாட்களில் தவிர்த்து விடுவார்கள். அதே சாஸ்திரத்தில் நாம் அஷ்டமி நாளில் என்ன செய்யலாம், செய்யக்கூடாது என சொல்லப்பட்டிருக்கிறது. அதனைப் பற்றிக் காணலாம்.
அஷ்டமியில் என்ன செய்யலாம்?
பொதுவாக சுப காரியங்கள் செய்வதற்கு தான் நாம் திதிகளை கணக்கில் கொள்ள வேண்டுமே தவிர, தெய்வ வழிபாட்டில் எத்தகைய திதிகளையும் கால நேரத்தையும் கணக்கில் கொள்ளக் கூடாது என கூறப்படுகிறது. இந்த அஷ்டமி நாளில் விரதம் இருந்து மனதிற்கு நெருக்கமான இறைவனை வழிபட்டால் வாழ்வில் உள்ள துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பமும் செல்வ வளமும் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இது வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் அனைத்தும் விலகும் என நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
மேலும் இந்நாளில் மனதை ஒருமுகப்படுத்தவும், வலிமைப்படுத்தவும் மேற்கொள்ளக்கூடிய தியானம் செய்ய அஷ்டமி சிறந்த நாளாக பார்க்கப்படுகிறது. இந்நாளில் மற்ற கடவுள்களை காட்டிலும் பகவான் கிருஷ்ணரை வழிபட்டால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. பகவான் கிருஷ்ணர் இதே அஷ்டமி திதியில் பிறந்தார் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அஷ்டமி நாள் நல்ல காரியங்கள் செய்ய இயலாத நாளாக இருந்தாலும் இந்நாளில் இறை வழிபாட்டை மேற்கொண்டால் எந்த விஷயமாக இருந்தாலும் சிறப்பாக முடியும் என்பது ஐதீகமாக உள்ளது.




இந்நாளில் பைரவர் வழிபாடு மேற்கொண்டாலும் பல நன்மைகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. மேலும் தீட்சை பெறுதல், மந்திரங்கள் ஓதுதல், ஹோமம் வளர்ப்பது போன்ற பயன்பாடுகளை மேற்கொள்ளலாம்.
என்ன செய்யக்கூடாது தெரியுமா?
அஷ்டமி தினத்தில் ஆரம்பிக்கிற வேலை முழுமை அடையாது என நம்பப்படுகிறது. அதாவது மனித வாழ்வியலோடு தொடர்புடைய எவ்வித காரியங்களையும் செய்யக்கூடாது. ஒருவேளை ஏதேனும் ஒரு விஷயம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் விநாயகர், துர்க்கை பாதத்தில் எலுமிச்சை பழம் வைத்து வழிபட்டு விட்டு தொடங்கலாம்.
(ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல் விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)