Evil Eye: கண் திருஷ்டி பிரச்னையா?.. வீட்டு வாசலில் இந்த சின்ன விஷயம் செய்தாலே போதும்!
கண் திருஷ்டி பிரச்னையால் பாதிக்கப்படுபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் பற்றி சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதனை நாம் சூடம், உப்பு, மிளகாய் போன்றவற்றின் பயன்பாடு முதல், கணபதி படம், கண்ணாடி, மீன் வளர்ப்பு, ஆகாச கருடன் கிழங்கு பயன்பாடு வரை பல்வேறு வழிகளில் மேற்கொள்ளலாம்.

இந்த உலகம் உருவான காலத்தில் இருந்தே நேர்மறை சக்திகள் (Positive Vibes) இருக்கும் போது அதற்கு எதிரான சக்திகளும் (Negative Vibes) இருந்து தான் வருகிறது. எதிர்மறை சக்திகள் நம்மை தாக்கும் போது நாம் செய்யும் சில விஷயங்களால் உருவாகும் நேர்மறை சக்திகள் அதனை தடுத்து ஆபத்திலிருந்து நம்மை விலக்கி வைக்கிறது. இப்படியான நிலையில் கண்திருஷ்டி பிரச்சனை (Evil Eye) என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கக்கூடிய விஷயமாக உள்ளது. நாம் ஒரு நல்லது செய்தாலும் சரி, நமக்கு ஏதேனும் கெட்டது நிகழ்ந்தாலும் சரி கண் திருஷ்டி பட்டுவிட்டது என பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அதாவது நமக்கு எதிராக இருப்பவர்கள் எதிர்மறை சிந்தனைகள், கெட்ட எண்ணங்கள் கொண்டு நம்மை காண்பது தான் கண் திருஷ்டி என அழைக்கப்படுகிறது. இதனை மன உளைச்சல் பொறாமை ஆற்றாமை ஆகியவற்றின் வெளிப்பாடு என சொல்லலாம். இத்தகைய கண் திருஷ்டியை போக்குவதற்கு பல்வேறு விதமான விஷயங்களை சாத்திரங்கள் தெரிவித்து இருக்கிறது. அதனைப் பற்றிக் காணலாம்.
கண் திருஷ்டி பிரச்னைக்கு தீர்வு
தனிநபர்களுக்கு கண் திருஷ்டி பிரச்சனை என்றால் சூடம் சுற்றி வீட்டு வாசலில் வைப்பார்கள். அது மட்டுமல்லாமல் உப்பு மற்றும் காய்ந்த மிளகாய் எடுத்து அதனை உடல் முழுவதும் சுற்றி எரியும் அடுப்பில் போட்டு விடுவார்கள். இதுவும் இல்லை என்றால் ஒவ்வொரு நல்ல காரியம் நடக்கும் போது திருஷ்டி கழிக்கும் விதமாக ஆரத்தி எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் ஒரு வீட்டை கண் திருஷ்டி தாக்காமல் இருக்க சில விஷயங்களை நாம் செய்ய வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.
வீட்டில் சில விஷயங்கள் செய்யலாம்
வீட்டு வாசலில் கண் திருஷ்டி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கண் திருஷ்டி கணபதி படத்தை வைக்கலாம். அதேபோல் வீட்டின் வாசற்படியில் முகம் பார்க்கும் கண்ணாடி மாட்டலாம். மேலும் கருப்பு மற்றும் சிவப்பு நிற மீன்களை வளர்க்கலாம். அதே சமயம் ஆகாச கருடன் என்ற கிழங்கை வாங்கி அதில் மஞ்சள் குங்குமம் சந்தனம், படிக்கக்கல் ஆகியவை வைத்து கருப்பு கம்பளி கயிறால் கட்டி வீட்டின் வாசலில் தொங்கவிடலாம்.




அமாவாசை, பௌர்ணமி போன்ற விசேஷ நாட்களில் சாம்பிராணி பொடியுடன் கருவேலம்பட்டை தூள் மற்றும் வெண் கடுகு தூள் ஆகியவை சேர்த்து தூபம் போட்டு வழிபடுவது கண் திருஷ்டியை கழிக்க உதவும். தொழில் செய்யும் இடமாக இருந்தால் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி அதில் குங்குமம் மஞ்சள் தடவி வாசல் படியின் இரு பக்கமும் வைக்க வேண்டும்.
அதேசமயம் கண் திருஷ்டி பிரச்னை ஏற்படாமல் இருக்க கற்றாழை செடி, அரக்கர் உருவம் வரையப்பட்ட பூசணிக்காய் ஆகியவற்றை தொங்கவிடுவது போன்றவற்றை செய்வதை விட,எதிர்மறை சக்திகளை தடுக்கும் தாவரங்களை வளர்க்கலாம்.
(ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளது. இதற்கு அறிவியல் பூர்வமாக விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)