Chanakya Niti: வாழ்க்கையில் இந்த 5 பேருக்கு கடன் கொடுக்காதீர்கள்.. சிக்கல் உண்டாகும்!
சாணக்கியர் கூற்றுப்படி, வாழ்க்கையில் ஐந்து வகையான நபர்களுக்கு கடன் கொடுக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி மோசமான ஆளுமை, எதிர்மறை சிந்தனை, பொறுப்பின்மை, போதைப் பழக்கம் மற்றும் பெருமையான குணம் கொண்டவர்கள் என அவர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்குக் கடன் கொடுத்தால், பணத்தை மீண்டும் பெறுவது கடினம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இன்பம், துன்பங்கள் நிறைந்த வாழ்க்கையில் பணம் (Money) தான் அனைத்திற்கும் அடிப்படை ஆதாரமாக திகழ்வதாக பலரது எண்ணமாக உள்ளது. இந்த உலகத்தில் அறத்துடன் வாழ்வதை விட பணத்துடன் வாழ்வது பலனைக் கொடுக்கும் என பலரும் அதனை ஈட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். சிலருக்கு குறைந்த உழைப்பில் அதிக பணம் கிடைக்கிறது, சிலருக்கு கடினமாக உழைத்தாலும் போதிய வருமானம் ஈட்ட முடியாத சூழலும் உள்ளது. இதனால் பணம் கொடுத்தல், வாங்குதல் என்பது வெகுசகஜமான பழக்கங்களில் ஒன்றாக மாறிவிட்டது. வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் எல்லோரும் பணப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் சூழல் உண்டாகிறது. இதனால் கடன் வாங்கும் சூழலும், மற்றவர்களுக்கு உதவும் நோக்கில் கடன் கொடுக்கும் சூழலும் அமைகிறது.
ஆனால் கொடுத்த கடனை திரும்ப பெறுவது குதிரை கொம்பு கதையாக நீண்ட இழுபறியுடன் செல்லும். மேலும் அதுவரை சுமூகமாக தொடர்ந்து உறவு பணத்தால் முறியும். இப்படியான நிலையில் தத்துவ ஞானியான ஆச்சார்ய சாணக்கியர் தனது சாணக்ய நீதியில் (Chanakya Niti) வாழ்க்கையில் 5 நபர்களுக்கு எக்காரணம் கொண்டும் கடன் கொடுக்கக்கூடாது என கூறியிருக்கிறார். அதனைப் பற்றி நாம் காணலாம்.
யார் அந்த 5 நபர்கள்?
- மோசமான ஆளுமை உடையவர்கள்: சாணக்கிய நீதிப்படி, மோசமான ஆளுமைக்குணம் கொண்டவர்களுக்கு பணம் கொடுப்பது பிரச்னையை விலை கொடுத்து வாங்குவதற்கு சமமாகும். அவர்கள் நெறிமுறையை மீறுபவர்களாகவும், மற்றவர்களை ஏமாற்றுபவர்களாகவும் இருக்க வாய்ப்புள்ளது. இவர்களிடம் பணம் கொடுத்தால் திரும்ப பெறுவது கடினமான செயலாகும். இதனால் உங்களின் நேரமும் வீணாகும்.
- சோகமாக இருப்பவர்கள்: சிலரைப் பார்த்தால் எப்போதும் மகிழ்ச்சியற்றவர்களாக இருப்பார்கள். அதேபோல் அவர்கள் வாழ்க்கையைப் பற்றி எதிர்மறையான சிந்தனைகளை கொண்டவர்களாகவும் வாழ்வார்கள். அவர்களுக்கு ஒருபோதும் பணம் நாம் கொடுக்கக்கூடாது என்பதை உணருங்கள். காரணம் அவர்களுக்கு பணத்தின் மதிப்பு தெரிவதில்லை. அவர்களிடம் எவ்வளவு லட்சம் இருந்தாலும், வாழ்க்கையில் ஒருபோதும் திருப்தி அடைய மாட்டார்கள். அத்தகைய நிரந்தர மகிழ்ச்சியற்ற மக்களிடமிருந்து விலகி இருப்பது புத்திசாலித்தனம் என சாணக்கியர் கூறுகிறார். இதனால் உங்களுக்குள்ளும் எதிர்மறையான எண்ணங்கள் வளரலாம்.
- பொறுப்பற்றவர்கள்: முட்டாள்தனமான மற்றும் பொறுப்பற்ற மக்களுக்கு பணம் கொடுப்பது தவறு என சொல்லப்பட்டுள்ளது. இவர்களுக்கு எது சரி எது தவறு என்பதை வேறுபடுத்திப் பார்க்க தெரியாது. பணத்தின் அருமையும் புரியாது. சொந்தமாக சிந்திக்காமல் மற்றவர்களின் பேச்சைக் கேட்டு தவறான விஷயங்களுக்கு பணத்தைப் பயன்படுத்தத் தயங்கவே மாட்டார்கள்.அவர்களுக்கு பணம் கொடுப்பதன் மூலம் நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது என்பதால் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மது அருந்துபவர்கள்: வாழ்க்கையில் எக்காரணம் கொண்டும் போதைப்பொருள் மற்றும் மதுவுக்கு அடிமையானவர்களுக்கு பணம் கொடுக்காதீர்கள். இது நிச்சயமாக தவறான பழக்கமாகும். அத்தகையவர்கள் தங்கள் பழக்கத்திற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள். பணத்தை திரும்ப கேட்கும் பட்சத்தில் எத்தகைய எதிர்வினை ஆற்றுவார்கள் என்பதை கணிக்கவே முடியாது. போதைக்கு அடிமையானவர்களால் சரி, தவறு என்று வேறுபடுத்திப் பார்க்க முடியாது. அத்தகையவர்கள் போதைக்காக மட்டுமே அனைத்தையும் செய்கிறார்கள்.
- பெருமைமிக்கவர்கள்: எப்பேர்பட்ட செல்வந்தர்களுக்கும் கடன் வாங்கும் சூழல் வரலாம். அதனால் பணத்தை என்றைக்கும் துச்சமாக நினைக்கக்கூடாது. அதனை மதிக்க வேண்டும். சரியாக செலவழிக்க பழக வேண்டும். திட்டமிட்டு செயல்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் தங்களிடம் இருக்கும் செல்வ வளம் பற்றி தம்பட்டம் அடிக்கக்கூடாது. இவர்களுக்கு பணம் கொடுத்தால் அந்த பணத்தை மட்டுமல்லாமல் கொடுக்கும் நபர்களுக்கும் மரியாதை கொடுக்க மாட்டார்கள்.
(ஆச்சார்ய சாணக்கியரின் சாணக்ய நீதியில் இருந்து இந்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல் விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)