Black Thread: காலில் கருப்பு கயிறு கட்டுவதால் இவ்வளவு நன்மைகளா?
Spiritual: காலில் கருப்பு கயிறு கட்டுவது பல ஆன்மீக நன்மைகளை அளிக்கும் என நம்பப்படுகிறது. சனி தோஷ நிவர்த்தி, ராகு-கேது பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு, நிதிநிலை மேம்பாடு போன்ற பலன்கள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. கருப்பு நிறம் எதிர்மறை சக்திகளைத் தடுக்கும் என நம்பப்படுவதால் கண் திருஷ்டியில் இருந்து பாதுகாக்கவும் இது பயன்படுகிறது.

சாஸ்திரத்தைப் பொறுத்தவரை ஆன்மிக ரீதியாக ஏராளமான பலன்களைப் பெற அதற்கான வழிகாட்டுதல்கள் சொல்லப்பட்டுள்ளது. அதேசமயம் எதிர்மறை சக்திகளின் தாக்கத்தில் இருந்து நம்மை காக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் ஆண்கள், பெண்கள் பலரும் காலில் கருப்பு கயிறு கட்டியிருப்பதை பார்த்திருப்போம். நாமும் கூட அணிந்திருப்போம். ஆண்கள் வலது காலிலும், பெண்கள் இடது காலிலும் கட்டும் இந்த கயிறு எதற்காக எனக் கேட்டால் திருஷ்டி கயிறு என ஒரே வார்த்தையில் சொல்லி விடுவார்கள். அதற்காக மட்டும் தான் அந்த கயிறு கட்டப்படுகிறதா?.. வேறு என்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
ஆன்மீக ரீதியாக கிடைக்கும் பலன்கள்
காலில் கருப்பு கயிறு கட்டிக் கொள்வது ஆன்மீக ரீதியாக பல காரணங்கள் சொல்லப்படுகிறது. குறிப்பாக சனி பகவானின் தாக்கத்தால் அவதிப்படும் ராசிக்காரர்கள் இதனை கட்டுவதால் சனி தோஷம் நீங்கும் என நம்பப்படுகிறது. காரணம் சனி பகவான் ஒருவரை பிடிக்க எண்ணினால் முதலில் காலில் இருந்து தான் தொடங்குவாராம். மேலும் ராகு கேது பாதிப்புகள் இந்த கயிறால் தடுக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் இதனால் வீட்டில் மற்றும் தனிநபரின் நிதிநிலைமை மேம்படும் என கூறப்படுகிறது.
பொதுவாக கருப்பு என்பது எதிர்மறை விஷயங்களை தடுக்கக்கூடிய ஒரு நிறமாகவே பார்க்கப்படுகிறது. அதே சமயம் ஜோதிட சாஸ்திரத்தின் படி பார்த்தால் கண் திருஷ்டி என்பது மிகப்பெரிய எதிர்மறை விஷயமாக கருதப்படுகிறது. இதனால்தான் குழந்தைகளுக்கு கருப்பு மை, வளரும் பருவ குழந்தைகளுக்கு கைகளில் அல்லது கால்களில் கருப்பு கயிறு கட்டி திருஷ்டி படாமல் பாதுகாக்கிறார்கள். இடுப்பில் அணியக்கூடிய அரைஞாண் கயிறு கூட கண் திருஷ்டி நீங்கதான் கட்டப்படுகிறது.




பொதுவாக இந்த கருப்பு கயிறு நம் மனதில் நேர்மறை எண்ணத்தை அதிகரிக்க கூடியதாக உள்ளது. சூரிய ஒளியில் இருந்து வரும் கதிர்களை கருப்பு நிறம் உள்வாங்கிக் கொள்ளும் என்பதால் உடலில் ஏற்படும் பல்வேறு உடல்நல கோளாறுகளும் சூரிய சக்தி மூலம் குணமாகிறது என ஐதீகமாக பார்க்கப்படுகிறது. மேலும் கணுக்காலில் கட்டப்படும் கருப்பு கயிறால் நாடி துடிப்பின் இயக்கம் சீராவதுடன் நமது எண்ணங்கள் அழைப்பாயாமல் தடுக்கப்படுகிறது.
கருப்பு கயிறு கட்டும் முறை
ஒருவேளை நீங்கள் கருப்பு கயிறு கட்ட விரும்பினால் ஆண், பெண் யாராக இருந்தாலும் பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது நண்பகல் 12 மணிக்கு கட்டுவது சிறந்ததாகும். அதிலும் சனிக்கிழமைகளில் கட்டுவது இன்னும் பலத்தை கொடுக்கும். மேலும் செவ்வாய்க்கிழமைகளிலும் இதனை நாம் கால்களில் கட்டலாம். கருப்பு கயிறு கால்களில் கட்டும் போது சனி பகவானை மனதில் நினைத்துக் கொண்டு வேண்டிக்கொள்ள வேண்டும், நவகிரகங்களை குறிக்கும் வகையில் 9 முடிச்சுகள் போட வேண்டும் என என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதே சமயம் ஜோதிட சாஸ்திரத்தில் கருப்பு கயிறு எந்த ராசிக்காரர்கள் கட்டலாம், கட்டக்கூடாது என்பதை அறிந்து கொண்டு அணிந்து அதற்கேற்ப பலன்களைப் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(ஆன்மிக மற்றும் சாஸ்திர நம்பிக்கையின் அடிப்படையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அடிப்படையில் இக்கட்டுரை கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)