Lord Krishna: வாழ்க்கையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய கிருஷ்ணர் கோயில்கள்!
விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ணருக்கு இந்தியா முழுவதும் கோயில்கள் உள்ளது. அந்த வகையில் உடுப்பி, பூரி , துவாரகாதீஷ் , மதுரா மற்றும் பிருந்தாவன் ஆகிய இடங்களில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோயில்களின் வரலாறு, சிறப்பு அம்சங்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

இந்துக்களால் வழிபடக்கூடிய கடவுள்களில் ஒருவர் கிருஷ்ணர். மகா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ணர் பற்றி மிக நீண்ட வரலாறு உள்ளது. அவர் பெயரைச் சொன்னாலே சுட்டித்தனம் தான் நினைவுக்கு வரும். கிருஷ்ணரின் அவதார தினமாக கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் தேய்பிறையில் வரும் 8 நாளில் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய அஷ்டமி திதியில் கொண்டாடப்படுகிறது. மகாவிஷ்ணுவின் அனைத்து அவதாரங்களுக்கும் இந்தியா முழுவதும் கோயில்கள் உள்ளது. அந்த வகையில் கிருஷ்ண பகவானுக்கும் ஏராளமான கோயில்கள் இருந்தாலும் சில வழிபாட்டு தலங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவையாக திகழ்கிறது. அப்படியாக நாம் வாழ்க்கையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய கிருஷ்ணர் கோயில்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
- உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண மடம்: கர்நாடகா மாநில உடுப்பியில் உள்ள இந்தக் கோயிலானது மிகப்பிரபலமானது. இங்கு பாரம்பரிய சிலை வழிபாடு முதல் பல்வேறு தனித்துவமான மரபுகள் மற்றும் சடங்குகள் பின்பற்றப்படுகிறது. இது பகவான் கிருஷ்ணரின் மிக முக்கியமான கோயிலாக கருதப்படுகிறது. இந்த கிருஷ்ண மடம் 13 ஆம் நூற்றாண்டில் வைணவ துறவி ஸ்ரீ மத்வாச்சாரியாரால் நிறுவப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்தக் கோயிலின் ஜன்னலில் உள்ள ஒன்பது துளைகள் வழியாக பக்தர்கள் கிருஷ்ணரைக் காணலாம். இந்த ஜன்னல் கனகன பூரி என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி அன்று கோயில் முழுவதும் பூக்கள், பழங்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதை காண இரண்டு கண்கள் போதாது என்றே சொல்லலாம்.
- பூரி ஜெகந்நாதர் கோயில்: ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள இந்த ஜெகந்நாதர் கோயிலும் உலகப் புகழ்பெற்ற கிருஷ்ணர் கோயிலாக திகழ்கிறது. இக்கோயிலில், கிருஷ்ணர் தனது சகோதரர்களான பலராமர் மற்றும் சுபத்ராவுடன் காட்சி கொடுக்கிறார். இங்கு நடைபெறும் ரத யாத்திரை மிக பிரபலமானது. இங்கிருக்கும் மரச் சிலைகள் 12 அல்லது 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு மாற்றப்படுகின்றது. நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த ரத யாத்திரையில் பங்கேற்பது வழக்கம்.
- துவாரகாதீஷ் கோயில்: குஜராத் மாநிலத்தில் உள்ள மிகவும் பிரபலமான கிருஷ்ணர் கோயிலானது ஜகத் மந்திர் என்றும் அழைக்கப்படுகிறது.இந்த துவாரகாதீஷ் கோயில் இந்து மதத்தின் புனித தலங்களை குறிக்கும் நான்கு தாம்களில் ஒன்றாகும். இந்த கோயில் மிகவும் அழகானதகாவும், புனிதமானதாகவும் திகழ்கிறது. இங்கு கிருஷ்ண ஜெயந்தி நாள் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்படும். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணரின் கொள்ளுப் பேரன் வஜ்ரநாபுவால் இக்கோயில் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு லட்சக்கணக்கான மக்கள் இங்கு வருகை தருகின்றனர்.
- மதுரா: உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா நகரில் அமைந்துள்ள இந்த பிரபலமான கோயிலில் கருப்பு நிற கிருஷ்ணர் சிலை வழிபடப்படுகிறது. கருப்பு பளிங்குக் கல்லாலான கிருஷ்ணரின் சிலை துவாரகாநாத் என்று அழைக்கப்படுகிறது. அவருடன், ராதா ராணி வடிவத்தில் வெள்ளை பளிங்குக் கல்லால் ஆன சிலையும் உள்ளது. இந்தக் கோயில் யமுனை நதிக்கரையில் உள்ள ஒரு சிறைச்சாலையில் அமைந்துள்ளது. இது கிருஷ்ணரின் பிறப்பிடம் என்று கூறப்படுகிறது.கிருஷ்ணர் மதுராவிலிருந்து துவாரகாவிற்கு குடிபெயர்ந்து அதை தனது வசிப்பிடமாக மாற்றியது இங்குதான் என சொல்லப்படுகிறது.
- பிருந்தாவன்: பாங்கே பிஹாரி கோயில் என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவன் நகரில் அமைந்துள்ளது. கிருஷ்ணர் மதுராவில் பிறந்தாலும், அவர் தனது குழந்தைப் பருவம் முழுவதையும் பிருந்தாவனத்திலேயே கழித்தார் என சொல்லபப்டுகிறது. இங்கு கிருஷ்ணர் பாங்கே பிஹாரி என்றும் அழைக்கப்படுகிறார். இஸ்கான் கோயில், பிரேம மந்திர், பிருந்தாவனத்தில் உள்ள பாங்கே பிஹாரி கோயில் ஆகியவை கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்களாகும். இந்த கோயிலில் கிருஷ்ணரை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் தினசரி வருகின்றனர்.
(இந்தக்கட்டுரை இறை நம்பிக்கையின் அடிப்படையிலான ஆன்மிக வரலாறுபடி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல் பூர்வ ஆதாரங்கள் எதுவும் இல்லை. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)