கணவன், மனைவி ஒரே ராசியா? – உங்கள் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்!
ஒரே ராசியில் திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் சவால்கள் என்பது சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரே ராசியினர் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்வார்கள் என்றாலும், பிடிவாதம் மற்றும் தலைமைத்துவப் போட்டி போன்ற பிரச்னைகள் உருவாக வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டிருக்கிறது.

பொதுவாக திருமணம் என்று வரும்போது பொருத்தங்கள் சரியாக இருக்கிறதா என மணப்பெண், மணமகன் ஜாதகத்தை 2,3 ஜோதிடர்களிடம் கொடுத்து அலசி ஆராயும் பழக்கம் நம்மிடையே அதிகம் உண்டு. ராசி, நட்சத்திரம் தொடங்கி திருமணத்திற்கான 10 பொருத்தங்களும் எந்த அளவில் உள்ளது என்பது வரை நாம் அறிந்துக் கொள்ள விரும்புவோம். இப்படியான நிலையில் காதல் திருமணம், உறவு முறை திருமணம் என பலரும் மனப்பொருத்தம் சரியாக இருந்தால் போதும். மற்ற பொருத்தங்கள் தேவையில்லை என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். அதேசமயம் மாப்பிள்ளையும், பெண்ணும் ஒரு ராசியில் இருப்பவர்களாக இருந்தால் அவர்களுக்குள்ளான அது எப்படிப்பட்ட வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்பது பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
திருமணம் என்பது இரண்டு உயிர்களை இணைக்கும் ஒரு புனிதமான பந்தமாக சாஸ்திரத்தில் மட்டுமல்லாது சமூகத்திலும் கருதப்படுகிறது. இந்து மதத்தைப் பொறுத்தவரை திருமண வாழ்க்கையின் வெற்றியில் ராசிகள் முக்கிய பங்கு வகிப்பதாகக் கருதப்படுகிறது. கணவன், மனைவி ஒரே ராசியாக இருந்தாலும் பெரும்பாலும் அவர்கள் செட்டாக மாட்டார்கள் என்ற கருத்து நிலவுகிறது.
ஒரே ராசிக்காரர்களின் மண வாழ்க்கை பலன்கள்
இல்வாழ்க்கையில் ஈடுபடும் கணவன் மனைவி ஒரே ராசியில் இருக்கும்போது, அவர்களின் இயல்பு, விருப்பு வெறுப்புகள் மற்றும் மனப்பான்மை ஆகியவைகளில் பல ஒற்றுமைகள் இருக்கும் என சொல்லப்படுகிறது. இது பல வழிகளில் திருமண வாழ்க்கைக்கு நல்லதாகப் பார்க்கப்படுகிறது. மேலும் இருவரும் ஒருவருக்கொருவர் உணர்வுகளையும் எண்ணங்களையும் எளிதில் புரிந்து கொள்ள முடியும் சூழலும் உள்ளது. இதன் காரணமாக பரஸ்பர ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கமானது மேம்படுகிறது. அதேசமயம், சில ஜோதிட நம்பிக்கைகளின்படி, இதுபோன்ற அதிக ஒற்றுமை இருப்பதும் சில நேரங்களில் ஒரு தம்பதியினரின் வாழ்க்கையில் பல்வேறு சவால்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
ஒரே ராசிக்காரர்களுக்கு பெரும்பாலும் ஒரே மாதிரியான ஆர்வங்களும், வாழ்க்கையின் இலக்குகளும் இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் அவர்கள் தங்கள் கனவுகளை அடைய ஒன்றாக வேலை செய்து ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வார்கள். ஒரே ராசிகள் என்பதால் ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை செலுத்திக் கொள்கிறார்கள். இது இருவரின் ஆளுமைகளை அதிகரித்துக் கொள்ள உதவுகிறது. ஒரு விஷயத்தில் முடிவெடுப்பது என்பது எளிதாகிறது. சண்டை, கருத்து வேறுபாடு ஏற்படுவது என்பது குறைகிறது.
எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்
கணவன், மனைவிக்கிடையே ஒரே ராசிக்கான பண்பு நலன்கள் இருப்பதால் பிடிவாத குணம் சமாளிக்க முடியாத ஒன்றாக இருக்கும். இருவருக்குமான பண்பு நலன்கள் தலைமைத்துவம் என எடுத்துக் கொண்டால் யார் முதலில் என்ற மோதல் உண்டாகும். இருவரும் ஒருவருக்கொருவர் அங்கீகரிப்பது, குறைகளை காண்பது அதிகரிக்க வாய்ப்ப்ய்ள்ளது. உறவின் சமநிலையில் இருவரும் ஒரே கண்ணோட்டத்தை கொண்டிருந்தால் அது அமைதியை சீர்குலைத்து விடும்.
(மத நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட சாஸ்திர அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ள இக்கட்டுரை தகவலுக்கு எவ்வித அறிவியல் ஆதாரமும் இல்லை. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)