Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tiruchendur: திருச்செந்தூரில் திருடு போன சிலை.. கனவில் வந்து வழிகாட்டிய முருகன்!

Tiruchenduru Murugan Temple: திருச்செந்தூர் முருகன் கோயிலில் இருந்து 1648-ல் டச்சுக் காரர்களால் எடுத்துச் செல்லப்பட்ட முருகன் மற்றும் நடராஜர் சிலைகள், கப்பலில் கொண்டு செல்லும்போது ஏற்பட்ட புயலால் கடலில் வீசப்பட்டன. பல ஆண்டுகளுக்குப் பின், ஒருநாள் கனவில் வடமலையப்பன் பிள்ளைக்குக் கிடைத்த அறிகுறிகளைப் பின்பற்றி மீண்டும் மீட்கப்பட்டதாக வரலாறு சொல்லப்படுகிறது.

Tiruchendur: திருச்செந்தூரில் திருடு போன சிலை.. கனவில் வந்து வழிகாட்டிய முருகன்!
திருச்செந்தூர் முருகன்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 30 Jun 2025 12:23 PM

திருச்செந்தூர் முருகன் கோயில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழும் ஒரு அற்புதமான வழிபாட்டுத் தலமாகும். மற்ற படை வீடுகள் குன்று மற்றும் மலையின் மீது இருக்கும் நிலையில் திருச்செந்தூர் மட்டும் கடல் சார்ந்த நிலப்பரப்பில் அமையப் பெற்றுள்ளது. இந்த திருச்செந்தூர் முருகன் கோயிலில் 2025 ஜூலை 7ஆம் தேதி திங்கட்கிழமை வெகு விமரிசியாக மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருச்செந்தூர் பற்றிய பல்வேறு விசேஷ தகவல்களை தொடர்ந்து நாம் தெரிந்து வருகிறோம். அந்த வகையில் முன்னொரு காலத்தில் திருச்செந்தூரில் இருந்து திருடப்பட்ட முருகன் சிலை கதை பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

கப்பலில் எடுத்துச் செல்லப்பட்ட முருகன் சிலை

இந்த சம்பவம் நடந்த போது 1648 ஆம் ஆண்டு இருக்கும் என சொல்லப்படுகிறது. அப்போது டச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் கோயில் அமைந்துள்ள இடம் இருந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு திருமலை நாயக்கர் ஆட்சிக்கு வந்த போது திருச்செந்தூர் கோயில் இருக்கும் இடம் தங்களுக்கு சொந்தம் என்பதால் நீங்கள் வெளியேற வேண்டும் என அவர் டச்சுக்காரர்களை பார்த்து சொன்னார். ஆனால் டச்சுக்காரர்கள் அங்கிருந்து செல்ல மறுத்த நிலையில் திருமலை நாயக்கர் அவர்கள் மீது போர் தொடுத்தார்.

இதனால் மிரண்டு போன டச்சுக்காரர்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலில் இருந்த நடராஜர் சிலையையும், மூலவர் முருகன் சிலையையும் தங்களோடு கொண்டு சென்றுவிட்டனர். இவர்கள் கப்பலில் சென்று கொண்டிருக்கும்போது பயங்கரமான மழை மற்றும் புயல் ஏற்பட்டுள்ளது. கப்பல் எந்த நேரத்திலும் கவிழ்ந்து விடலாம் என்ற சூழல் இருந்த நிலையில் முருகன் மற்றும் நடராஜர் சிலையை எடுத்து வந்ததால்தான் இப்படி நடந்துவிட்டது என அவர்கள் நினைத்தனர்.

உடனடியாக அவை இரண்டையும் கடலில் தூக்கி போட அடுத்த நிமிடம் புயல் மற்றும் மழை நின்றுவிட்டது. தப்பித்தால் போதும் என டச்சுக்காரர்கள் கப்பலில் தங்கள் நாட்டை நோக்கி சென்று விட்டனர்.

கனவில் சொன்ன அடையாளம்

இந்த நிலையில் சில வருடங்கள் கழித்து திருமலை நாயக்கர் அரசவையில் மிக முக்கிய பிரதிநிதியாக திகழ்ந்த வடமலையப்பன் பிள்ளை என்பவரது கனவில் ஒருநாள் முருகன் தோன்றினான். தன்னுடைய சிலை கடலுக்குள் இருக்கிறது. அதனை அடையாளம் காண அந்த இடத்திற்கு மேல் ஒரு எலுமிச்சம் பழம் மிதக்கும். மேலும் வானத்தில் கருடன் வட்டமிடும் என அறிகுறி காட்டினார். இந்த சம்பவத்தை வடமலையப்ப பிள்ளை  உள்ளூர் மக்களிடம் தெரிவிக்க அனைவரும் கடலுக்கு சென்றனர்.

அங்கு முருகன் சொன்னது போல் எலுமிச்சம் பழம் மிதந்தும், அதற்கு மேல் கருடன் வட்டமிட்டும் முருகப்பெருமான் சிலை இங்குதான் இருக்கிறது என காட்டியது. உடனடியாக கடலில் இருந்து குதித்த சிலர் இரண்டு சிலைகளையும் மீட்டு மேலே படங்கிற்கு கொண்டு வந்தனர்.

பல வருடங்களாக சிலை கடலில் இருந்ததால் உப்பு தன்மையால் அதில் அரிப்பு ஏற்பட்டது.  அதனை நாம் இன்றளவும் திருச்செந்தூர் முருகன் மூலவர் சிலையில் காணலாம் என கூறப்படுகிறது. கி.பி.1653 ஆம் ஆண்டு இந்த இரண்டு சிலையையும் மீண்டும் கோயிலுக்கு கொண்டு வந்த மக்கள் தலைமையில் குடமுழுக்கு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

(ஆன்மிக வரலாறு அடிப்படையில் இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கல் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)