Tiruchendur: திருச்செந்தூர் முருகன் கோயிலில் மறக்காமல் செல்ல வேண்டிய இடம்!
சூரபத்மனை வதம் செய்த பாவம் நீங்க முருகன் பஞ்ச லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும், இவை தினசரி கோயில் நிர்வாகத்தால் பூஜை செய்யப்படாமல் உள்ள நிலையில் முருகனே பூஜை செய்கிறார் என நம்பப்படுவதாகவும் கூறுகிறது. இந்த பஞ்ச லிங்கங்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் வழிபடுவதாகவும், இவற்றை தரிசிப்பதால் பாவங்கள் நீங்கும் என்பதும் நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

தமிழ் கடவுளாக இந்து மதத்தில் வழங்கப்படுபவர் முருகப்பெருமான். இவருக்கு தமிழ்நாட்டில் அறுபடை வீடுகள் உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். இவற்றில் இரண்டாம் படை வீடாக உள்ள திருச்செந்தூரில் 2025 ஜூலை 7ஆம் தேதி வெகுமரிசையாக மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. புராண வரலாற்றில் மிகப்பெரிய முக்கியத்துவத்தை பெற்றிருக்கும் இந்த திருச்செந்தூர் கோயில் பற்றிய பல்வேறு சிறப்பு தகவல்களை நாம் தெரிந்து கொண்டிருக்கிறோம். அந்த வகையில் திருச்செந்தூர் கருவறைக்கு பின்புறம் உள்ள பஞ்சலிங்கங்கள் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து தீப்பொறியாக தோன்றி பின்னர் குழந்தையாக மாறி கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்ட முருகன் வீரமிக்கவனாக திகழ்ந்தார். அவர் திருச்செந்தூரில் தேவர்களையும், முனிவர்களையும் தொல்லை செய்து வந்த சூரபத்மன் என்னும் அரக்கனை சஷ்டி நாளில் சம்ஹாரம் செய்தார்.
திருச்செந்தூரில் உள்ள அஷ்டலிங்கங்கள்
அதன் பிறகு சூரபத்மனை கொன்ற பாவம் நீங்க திருச்செந்தூர் கடற்கரையில் ஐந்து லிங்கங்களை பிரதிஷ்டை செய்து அதில் தாமரை மலர வைத்து சிவபூஜை செய்தார். இதனை உணர்த்தும் விதமாகத்தான் திருச்செந்தூர் முருகன் கையில் தாமரை மலர் இருப்பதை காண முடியும். அதேசமயம் முருகன் வழிபட்ட அந்த பஞ்சலிங்கங்கள் கருவறைக்கு பின்னால் இருக்கும் குகையில் உள்ளது. இந்த அறைக்கு பாம்பரை இன பெயரிடப்பட்டுள்ளது. இங்கிருக்கும் பஞ்சலிங்கங்களுக்கு தினசரி பூஜை என்பது நடைபெறாது. ஆனால் முருகப்பெருமானே அந்த பூஜையை நடத்தி விடுவதாக நம்பப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் தேவர்கள் இந்த லிங்கங்களை வந்து வழிபட்டு செல்வதாக இன்றளவும் பக்தர்களால் நம்பப்படுகிறது. மேலும் திருச்செந்தூர் மூலவரை தரிசித்த பிறகு நாம் இந்த பஞ்சலிங்கங்களை வழிப்பட்டால் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கையாக உள்ளது. அதேசமயம் திருச்செந்தூர் கருவறைக்குள் மூன்று லிங்கங்களும் பின்னால் ஐந்து லிங்கங்களும் மொத்தம் எட்டு லிங்கங்கள் இருப்பதால் இந்த இடம் அஷ்ட லிங்க தளம் என அழைக்கப்படுகிறது.
மும்மூர்த்திகளின் அவதாரமாக முருகன்
கடற்கரை தலமாக திகழும் திருச்செந்தூரில் முருகப்பெருமான் பிரம்மா, சிவன், மற்றும் விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாக அருள் பாலிக்கிறார். இதனை உணர்த்தும் விதமாகத்தான் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் நடைபெறும் திருவிழாவில் முருகப்பெருமான் வெள்ளை, சிவப்பு மற்றும் பச்சை சாத்தி பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். மேலும் இக்கோயிலில் உள்ள பஞ்சலிங்கங்களை கூட்டமாக இருக்கும் நாட்களில் நம்மால் தரிசனம் செய்ய இயலாது. இவரை வணங்குவதால் முன் ஜென்மம், நிகழ்காலத்தில் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் தீரும் என சொல்லப்படுகிறது.
(ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் என்றும் பொறுப்பேற்காது)