சிதம்பரம் கோயிலில் அர்த்தஜாம பூஜை.. வழிபட்டால் இவ்வளவு பலனா?
சிதம்பரம் நடராஜர் கோயிலில் இரவு 10 மணிக்கு நடைபெறும் தனித்துவமான அர்த்த ஜாம பூஜையின் முக்கியத்துவம் மற்றும் பலன்களைப் பற்றி நாம் காணலாம். மற்ற கோயில்களை விட தாமதமாக நடைபெறும் இந்தப் பூஜையில் கலந்து கொண்டால் காணாமல் போன பொருட்கள் திரும்ப கிடைத்தல், செல்வ வளம் பெருகுதல், கடன் தொல்லைகள் நீங்குதல் போன்ற பலன்களை அளிக்கும் என நம்பப்படுகிறது.

இந்தியா பல்வேறு மதம் சார்ந்த ஆன்மீக தலங்கள் நிறைந்த நாடாகும். இங்கு திரும்பும் திசையெல்லாம் ஏதேனும் ஒரு மதத்தின் வழிபாட்டு தலங்கள் நமக்குள் நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். இத்தகைய மதங்களில் பல்வேறு வழிபாடுகள் செய்யப்படுகிறது. குறிப்பாக கோயில்களை எடுத்துக் கொண்டால் சைவ மற்றும் வைணவ கோயில்களில் பல்வேறு விதமான கால பூஜைகள் ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்படுகிறது. இதில் சிவ ஆலயங்களில் அர்த்த ஜாம பூஜை மேற்கொள்ளப்படுகிறது. காலை முதல் இரவு வரை பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் தெய்வங்கள் ஓய்வு எடுக்கும் நேரமாக அர்த்த ஜாம பூஜை கருதப்படுகிறது. கருவறையிலிருந்து பள்ளியறைக்கு கடவுள்களை அழைத்து செல்லும் ஒரு சடங்காக இந்த அர்த்த ஜாம பூஜைகள் கடைபிடிக்கப்படுகிறது. இவை பள்ளியறை பூஜை எனவும் அழைக்கப்படுகிறது. இத்தகைய அர்த்தஜாம பூஜையை சிதம்பரம் கோயிலில் நாம் கண்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி காணலாம்.
மற்ற கோயில்களை விட தாமதம்
மற்ற கோயில்களில் இரவு 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் அர்த்த ஜாம பூஜை ஆனது நடைபெற்றுவிடும். ஆனால் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்த பூஜையானது இரவு 10 மணிக்கு தான் நடைபெறும். இங்கு நடைபெறும் பூஜை வழிபாட்டை கண்டால் அனைத்து சிவாலயங்களிலும் நடைபெறும் பள்ளியறை பூஜையை நாம் கண்ட பலன்களைப் பெறலாம். மேலும் அர்த்த ஜாம பூஜை முடிந்தவுடன் பைரவ மூர்த்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். அதுதான் ஒரு நாளின் பூஜை வழிபாட்டின் முடிவாக கருதப்படுகிறது.
அந்த வகையில் சிதம்பரம் கோயிலில் நடராஜர் பள்ளியறைக்கு சென்ற பிறகு பிரம்ம சண்டிகேஸ்வரர் மற்றும் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து அர்த்த ஜாம அழகர் என அழைக்கப்படும் ஷேத்ர பாலகனுக்கு பூஜை நடைபெறுகிறது.
என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
அங்கிருக்கும் சித்திர சபையின் ஈசான மூலையில் தேவ சபையின் மேற்கு சுவர் பக்கமாக அமைந்திருக்கும் மாடத்தில் அர்த்த ஜாமஅழகர் காட்சி கொடுக்கிறார். இதன் பின்னணியில் ஒரு கதையும் சொல்லப்படுகிறது. இந்த கோயிலில் அர்த்த ஜாம அழகரை வழிபட்டால் காணாமல் போன அல்லது திருடு போன பொருட்கள் நமக்கு திரும்ப கிடைத்துவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் சேமித்த செல்வங்கள் யாவும் நிலைத்து நின்று பலனளிக்கும் எனவும், கடன் தொல்லைகள் இருந்தால் நீங்கும் எனவும் ஐதீகமாக பார்க்கப்படுகிறது.
அதே சமயம் சகல நலன்களையும் பெற நடராஜர் கோயில் செல்வோர் இந்த அழகரையும் தரிசித்து செல்ல வேண்டும் என்பது ஆன்மீக அன்பர்களின் கருத்தாக உள்ளது.
அர்த்த ஜாம அழகரின் கதை
இந்த அர்த்த ஜாம அழகர் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் பல்லிகேஸ்வரர் என்ற பெயரில் தட்சணாமூர்த்தி சன்னதிக்கு அருகில் அருள்பாலித்து வருகிறார். ஜோதிடன் ஒருவன் பலரது சாபம் பெற்றதால் மறுபிறவியில் பல்லியாக பிறந்ததாகவும், அப்படி அவன் பிறந்த இடம் சிதம்பரமாகும். இந்த நிலையில் சித்திர சபையில் வசித்து வந்த அந்த பல்லிக்கு சிவபக்தி உண்டானதாகவும், நடராஜப்பெருமானின் அருள் கிடைத்ததால் கோயிலை இரவில் காவல் காக்கும் வேலை கிடைக்கப் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதுவே அர்த்த ஜாம அழகராக அவர் அழைக்கப்பட காரணமாக அமைந்தது. இவர் பல்லி வடிவில் ஈசனை வழிபட்டதால் பல்லிகேஸ்வரர் என்ற பெயர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
(ஆன்மிக தகவல்களின் அடிப்படையில் இந்த செய்தியானது கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)