AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வேண்டிய வரங்கள் அருளும் தோரண மலை முருகன்.. இந்த கோயில் தெரியுமா?

தென்காசி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தோரணைமலை முருகன் கோயில், அகத்திய முனிவருடன் தொடர்புடையதாகும். 400 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில், இயற்கை அழகு நிறைந்த இடத்தில் அமைந்துள்ளது சிறப்பானது. முருகன், சப்த கன்னியர் உள்ளிட்ட தெய்வங்களை வழிபட பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர்.

வேண்டிய வரங்கள் அருளும் தோரண மலை முருகன்.. இந்த கோயில் தெரியுமா?
தோரண மலை முருகன்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 23 May 2025 14:15 PM IST

தமிழ் கடவுள் என கொண்டாடப்படும் முருகனுக்கு உலகமெங்கும் சிறிய கோயில்கள் தொடங்கி பிரம்மாண்ட சிலைகள் அடங்கிய கோயில் வரை உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிந்தது. அதேசமயம் குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதற்கு ஏற்ப முருகன் பல்வேறு மலைகளின் மீது பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அந்த வகையில் தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தென்றல் வீசும் சூழலில் அமைந்திருக்கிறார் தோரணை மலை முருகன். இந்தக் கோயிலின் சிறப்புகள் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். தென்காசி மாவட்டத்தின் புறநகர் பகுதியான கடையத்தில் அமைந்திருக்கும் இந்த கோயிலானது தினமும் காலை 8  மணி முதல் 10 மணி வரையும் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் மட்டுமே பக்தர்களுக்காக திறந்திருக்கும்.

அதே சமயம் தினமும் மதியம் 12 மணிக்கு முருகனுக்கு உச்சிக்கால பூஜை வெகு விமரிசியாக நடைபெறும். தென்காசி மற்றும் திருநெல்வேலியில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி, பாசஞ்சர் ரயில் சேவை கடையத்துக்கு உள்ளது.

கோயில் உருவான வரலாறு

சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் இமயமலையில் திருமணம் நடைபெற்ற நிலையில், இந்த திருமணத்தை காண்பதற்காக முப்பது முக்கோடி தேவர்களும் அங்கே வருகை தந்திருந்தனர். இதனால் இமயமலை இருந்த வடபகுதி உயர்ந்தது, தென்பகுதி தாழ்ந்தது. இதனைக் கண்டு அச்சம் கொண்ட அந்த திருமணத்திற்கு வந்த தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானிடம் முறையிட்டனர். உடனே சிவபெருமான் அகத்திய முனிவரை அழைத்து உலகை சமநிலை செய்ய உன்னால் மட்டுமே முடியும். அதனால் நீ உடனடியாக தென்பகுதியில் உள்ள பொதிகை மலைக்கு செல் என தெரிவித்தார்.

சிவனின் சொல்படி அகத்தியர் பயணம் மேற்கொள்ள தொடங்கினார். அதேசமயம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்களின் திருக்கல்யாண கோலத்தை தன்னால் காண முடியாது என வருத்தம் தெரிவித்த அகத்தியருக்கு, நீ எப்போது நினைக்கிறாயோ! அப்போது நான் உனக்கு திருமண கோலத்தில் காட்சி தருவேன் என சிவபெருமான் உறுதியளித்தார். பொதிகை மலைக்கு அகத்தியர் வந்தபோது உலகம் சமநிலை அடைந்தது. அவர் வந்த வழியெல்லாம் புனித பூமியாக கருதப்பட்டது. அப்படியாக அகத்தியரின் பாதச்சுவடு பட்ட இடம்தான் தோரணமலை.

இங்கு தங்கிய அகத்தியரின் மருத்துவத் திறனை உலகறிய செய்வதற்காக முருகப்பெருமான் திருவிளையாடல் நடத்திய இடம் தான் இந்தத் தோரண மலையாகும். இங்கு தியானம் செய்து முருகப்பெருமானை வழிபட்டால் உலகையே வெல்லும் அளவுக்கு சக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். மேலும் மருத்துவ மூலிகைகள் நிறைந்த இந்த பகுதிக்கு வந்தால் நாள்பட்ட நோயும் தானாகவே குணமாகும் என்பது அதிகமாக உள்ளது.

கோயிலின் சிறப்புகள்

இந்தத் தோரணமலை கோயிலானது பார்ப்பதற்கு ஒரு யானை உட்கார்ந்த நிலையில் துதிக்கையால் நிலத்தில் ஊன்றி இருப்பது போல அமைந்திருக்கும்.யானை என்பதற்கு வாரணம் என்ற பொருள் உண்டு. ஆரம்ப காலகட்டத்தில் வாரண மலை என அழைக்கப்பட்டு  பின்னாளில் மருவி தோரணமலை என அழைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த கோயில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆரம்ப காலகட்டத்தில் நாயக்க மன்னர்கள் இங்கு ஆண்டபோது இந்த கோயில் சீரும் சிறப்புமாக இருந்தது. அதன் பிறகு சிதிலமடைந்து கிடந்த நிலையில் ஒருநாள் முருக பக்தரின் கனவில் இறைவன் தோன்றி என்னுடைய சிலை இம்மலையில் சிதிலமடைந்து இருக்கிறது. அதனை எடுத்து எனக்கு ஒரு கோயில் கட்டி வணங்கினால் நன்மைகளை அளிப்பேன் என தெரிவித்தார்.  இதனைக் கண்டு மகிழ்ந்த பக்தரும் முருகன் சொன்னப்படியே மலை உச்சியில் இருந்த முருகன் சிலையை சுத்தம் செய்து சிறிய மண்டபம் ஒன்றை அமைத்து அதில் முருகன் சிலையை வைத்து வணங்கினார்.

இயற்கை அழகு நிறைந்த இடம்

அப்படியாக அவர் குகை போல அமைத்த அந்த வடிவம் தான் இன்றளவும் மூலவர் சிலை இருக்கும் இடமாக உள்ளது. தோரணமலைக்கு தெற்கு பக்கமாக ராம நதியும், வடக்கு பக்கமாக ஜம்பு நதியும் தவழ்ந்து செல்வது இயற்கை அழகை மிஞ்சும் காட்சியாகும். இந்த மலையின் அடிவாரத்தில் சுமார் 2 ஆயிரம் அடி கொண்ட வல்லப விநாயகர் கோயில் அமைந்துள்ளது. அதேபோல் கோயிலுக்கு வலது பக்கமாக வற்றாத சுனை ஒன்றும் உள்ளது. இதில் நீராடினால் நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த சுனை நீர் மிகவும் சுவையாகவும் இருக்கும்.

இந்த கோயிலில் இருக்கும் அரச மரத்தடியில் சப்த கன்னியர்கள் வீற்றிருக்கின்றனர். அவர்களுக்கு பொங்கலிடுதல், முடிக்காணிக்கை செலுத்தல், காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல் ஆகியவை நேர்த்திக்கடன்களாக செலுத்தப்படுகிறது அது மட்டுமல்லாமல் சப்த கன்னியர் சிலை இருக்கும் மரத்தில் வளையல்களும் தொட்டில்களும் பிரார்த்தனைகளுக்காக கட்டப்படுகிறது.

தோரணமலை முருகன் கோயிலில் தொழில் வளம், குடும்ப பிரச்சினை, எதிரிகள் தொல்லை, கல்வி ஞானம், போன்ற பல விஷயங்களுக்காக பக்தர்கள் வணங்கி செல்கின்றனர். சப்த கன்னியர்கள் இருக்கும் ஆலமரத்தில் தொட்டில்கள் கட்டி குழந்தை செல்வம் வேண்டி பெரும்பாலான தம்பதியினர் வேண்டிக் கொள்கின்றனர். நாம் வேண்டியது அனைத்தையும் தோரணமலை முருகனும் அங்கு இருக்கும் தெய்வங்களும் நிறைவேற்றுவார்கள் என்பது மிக நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

முருகன் இக்கோயிலில் இருக்கும் குகையானது இயற்கையாகவே கிழக்கு நோக்கி அமைந்து இருப்பது தனி சிறப்பாகும். மேலும் இந்த முருகன் திருச்செந்தூர் முருகனை நோக்கிய வண்ணம் இருப்பதாகவும் இவரை வணங்கினால் திருச்செந்தூர் முருகனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும் எனும் நம்பப்படுகிறது.

விசேஷ நாட்கள்

ஒவ்வொரு தமிழ் மாதத்தில் அனைத்து வெள்ளிக்கிழமைகள், அதேபோல் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம், பௌர்ணமி திதி நாளில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அது மட்டுமல்லாமல் தைப்பூசம் ,வைகாசி விசாகம், சித்திரை திருநாள் என முருகனுக்கு உரிய அனைத்து விசேஷ நாட்களிலும் சிறப்பான வழிபாடு நடைபெறுகிறது. வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை சென்று வாருங்கள்.

(கோயில் பற்றி பதிவிடப்படும் ஆன்மிக தகவல்கள் அடிப்படையில் தோரண மலை முருகன் கோயில் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

Follow Us