திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசன நேரத்தில் மாற்றமா? உண்மை இதோ!
Tiruchendur Temple Darshan: பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் நேரங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், வழக்கம்போல அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும் என்றும் கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.
பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் நேரங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், வழக்கம்போல அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும் என்றும் கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு பொதுத் தரிசனம், ரூ.100 கட்டணத் தரிசனம், முதியோர்களுக்கான தனி வரிசை என மூன்று வழிகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வழக்கமாக நாள்தோறும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படும் வரை இடைவெளியின்றி தரிசனம் நடைபெற்று வருகிறது. வார விடுமுறை மற்றும் திருவிழா நாட்களில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகக் காணப்படுவது உண்டு.
பதாகையால் உருவான குழப்பமும் நிர்வாகத்தின் விளக்கமும்
சமீபத்தில் கோயில் வளாகத்தில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்புப் பலகை ஒன்று வைக்கப்பட்டது. அதில் கட்டணத் தரிசன வரிசையில் மாலை 6.30 மணி வரையிலும், பொதுத் தரிசனம் மற்றும் முதியோர் வரிசையில் இரவு 7 மணி வரையிலும் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதோ என்ற சலசலப்பு பக்தர்கள் மத்தியில் உருவானது. இதற்கு விளக்கமளித்த கோயில் நிர்வாகம், இரவு 9 மணிக்கு முறைப்படி நடை சாத்தப்பட வேண்டும் என்பதால் வரிசைகளை ஒழுங்குபடுத்தவே இந்த நேரம் குறிப்பிடப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
Also Read: திருவண்ணாமலை கிரிவலத்தில் இடுக்கு பிள்ளையாரை வழிபட தவறக்கூடாது ஏன்?
வரிசை மேலாண்மை மற்றும் நிஜமான நடைமுறை
இரவு 9 மணி வரை பக்தர்களை வரிசையில் அனுமதிக்கும்போது, முன்னதாகவே வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் தரிசனம் செய்து முடித்து வெளியேற நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஆகிவிடுகிறது. மேலும், இரவு நேர அபிஷேகம், தீபாராதனை மற்றும் பள்ளியறை பூஜைகளைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடை சாத்தும் வழக்கமான நடைமுறையைப் பின்பற்றுவது சவாலாக மாறுகிறது. எனவே, மாலை 6.30 மற்றும் இரவு 7 மணிக்கு வரிசையில் நுழையும் பக்தர்கள் இரவு 9 மணிக்குள்ளாக தரிசனத்தை நிறைவு செய்ய முடியும் என்ற கணக்கீட்டின் அடிப்படையிலேயே அந்த நேரம் பதாகையில் சுட்டிக்காட்டப்பட்டது.
பதாகைகள் அகற்றம் மற்றும் இறுதி அறிவிப்பு
பக்தர்கள் மத்தியில் ஏற்பட்ட தவறான புரிதலையும் சலசலப்பையும் தவிர்க்கும் பொருட்டு, வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பதாகைகள் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன. தற்போதைய நடைமுறைப்படியே கோயிலில் வழக்கமான நேரங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், பக்தர்கள் அனைவரும் கோயில் நிர்வாகத்தின் வழிமுறைகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பொறுப்புத்துறப்பு: இந்தக்கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி எழுதப்பட்டது. இது அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆனது அல்ல.