Food Recipe: சாதம் தினமும் மிஞ்சிவிடுகிறதா..? இந்த 3 ரெசிபியை செய்து அசத்துங்க..!
Leftover Rice Recipes: வீட்டில் மீதமான சாதத்தை வீணாக்காமல், சுவையான மொறுமொறுப்பான தோசை, ருசியான பக்கோடா அல்லது புளிப்புச் சுவையான புளியோதரை போன்ற பல உணவுகளை எளிதாக தயார் செய்யலாம். இந்த எளிய செய்முறைகளைப் பின்பற்றி உங்கள் மீத மச்சாதத்தை வீணாக்காமல், புதிய உணவு அனுபவத்தைப் பெறலாம். சிறிதளவு பொருட்களைக் கொண்டு சுவையான உணவை உருவாக்கலாம்.

வீடுகளில் ஏதாவது ஆசையாக செய்தால், ஒருநாளில் அவை விரைவில் காலியாகிவிடும். மற்றொரு நாளில் சமைத்த உணவு வகைகள் மிஞ்சிவிடும். இதில், மீதமான குழம்பு போன்றவற்றை குளிர்சாதன பெட்டியில் (Fridge) வைத்து அடுத்தநாள் கூட சூடு செய்து சாப்பிடலாம். ஆனால், மீதமுள்ள சாதத்தை (Leftover Rice) என்ன செய்வது என்று பலர் கவலைப்படுவார்கள். சில நாட்களில் தண்ணீர் ஊற்றி பழைய சோறாக சாப்பிடலாம். ஆனால், எல்லா நாட்களில் பழைய சோற்றை சாப்பிட முடியாது. இவ்வளவு சாதம் வீணாகிவிட்டதே என்று நீங்களும் கவலைப்பட்டால், இனி அப்படி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. மீதமுள்ள சாதத்தை வைத்து பல விதமான உணவுகளை செய்யலாம்.
மொறுமொறுப்பான தோசை:
மீதமுள்ள சாதத்தை கொண்டு சுவையான மொறுமொறுப்பான தோசை செய்யலாம் என்பது பலருக்கும் தெரியாது. மொறுமொறுப்பான தோசைக்கு முதலில் ஒரு கப் ரவையை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு அளவாக ஒன்றரை கப் மீதமுள்ள சாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கப் புளிப்பு தயிர், சுவைக்கு உப்பு மற்றும் பேக்கிங் சோடாவை தயாராக எடுத்து கொள்ளுங்கள். இப்போது மிக்ஸி உதவியுடன் ரவையை அரைக்கவும். அதனுடன், சாதத்தை சேர்த்து அரைக்கவும்.
பின்னர் ஒரு கப் தயிர் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து சில நொடிகள் அரைக்கவும். இந்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு பத்து நிமிடங்கள் விடவும். இதன் பிறகு, சிறிது பேக்கிங் சோடா மற்றும் சுவைக்கு உப்பு சேர்க்கவும். இறுதியாக, தோசைக்கல்லை சூடாக்கி தோசை ஊற்றி பரிமாறலாம். சுவை அதிகம் வேண்டுமென்றால் தோசையின் மீது நெய் தடவினால், அதிரிபுதிரியாக இருக்கும்.




பக்கோடா:
ஒரு கப் சாதத்தை எடுத்து, ஒரு கரண்டியால் அல்லது உங்கள் கைகளால் நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். இந்த சாத உருண்டையுடன் 5 தேக்கரண்டி கடலை மாவு, 2 கப் நறுக்கிய வெங்காயம், சிறிதளவு துருவிய இஞ்சி, 1 நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கலக்கவும். தொடந்து, நறுக்கிய கொத்தமல்லி இலைகள் ¼ கப், சீரகத் தூள் ½ டீஸ்பூன், கொத்தமல்லி தூள் 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன், பெருங்காயம் சிறிதளவு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மீண்டும் கலக்கவும். 5 நிமிடங்கள் பிசைந்து, பக்கோடா போன்ற சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான பக்கோடா ரெடி.
புளியோதரை:
இவை எதுவும் வேண்டாம் என்றால், நீங்களும் புளியோதரை செய்யலாம். சிலருக்கு புளியோதரை ரொம்ப பிடிக்கும். முதலில் சிறிது புளியை ஊற வைக்கவும். சிறிது கொத்தமல்லி விதைகள், 2 காய்ந்த மிளகாய், 3 பச்சை மிளகாய்களை நறுக்கவும். புளியிலிருந்து தண்ணீரைப் பிரித்து, புளியோதரை பேஸ்ட் செய்து, அதனுடன் சாதத்தை கிளறினால் சுவையான புளியோதரை ரெடி.