Karnataka: கசந்த 5 ஆண்டு கால காதல்.. இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!
மண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது லதா, ரஞ்சித் என்பவரை ஐந்து ஆண்டுகள் காதலித்து வந்தார். திருமணத்தை ரஞ்சித் தள்ளிப்போட்டதால் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த லதா தற்கொலை செய்துகொண்டார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரஞ்சித் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா, செப்டம்பர் 10: கர்நாடகாவில் திருமணத்தை தள்ளிப் போட்டு வந்ததால் காதலன் மீது கோபப்பட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தை சேர்ந்த லதா என்ற 25 வயது இளம்பெண் ரஞ்சித் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். ரஞ்சித் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். இப்படியான நிலையில் லதா பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இதனால் அவர் ராஜாஜி நகர் பகுதியை அடுத்துள்ள காயத்ரி நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். அதே பகுதியில் ரஞ்சித் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இப்படியான நிலையில் லதாவுக்கும் ரஞ்சித்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து தங்கள் உறவை வளர்த்தனர். நாளடைவில் லதா, ரஞ்சித் ஆகிய இருவரும் காதலிக்க தொடங்கினர். ஐந்து ஆண்டுகள் இருவரும் காதலித்து வந்த நிலையில் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. பின் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். தங்கள் குடும்பத்தினருக்கு விஷயத்தை சொல்ல அவர்களும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினர்.
Also Read: நண்பனை போல் பழகிய ஏஐ செய்த காரியம்.. தாயை கொன்ற முன்னாள் யாகூ மேனேஜர் தற்கொலை.. என்ன நடந்தது?




ஆனால் ரஞ்சித் திருமணத்தை தள்ளி போட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.அத்துடன் அவரது நடத்தையிலும் மாற்றம் ஏற்பட்டதை லதா உணர்ந்துள்ளார். தன்னுடன் முன்பு போல பேசி பழகுவதை ரஞ்சித் தவிர்த்து வருவதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது தொடர்பாக லதா ரஞ்சித்திடம் கேள்வி எழுப்பியும் சரியான பதில் இல்லாததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் அவர்கள் உறவில் பெரும் விரிசல் ஏற்பட தொடங்கியது. இந்த நிலையில் செப்டம்பர் 8ம் தேதி இரவு லதா, ரஞ்சித் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் வெறுத்துப் போன லதா தான் தங்கி இருந்த வாடகை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் பற்றி அக்கம் பக்கத்தினர் சுப்பிரமணிய நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் காதலர்கள் இடையே ஏற்பட்ட சண்டையில் விரக்தி ஏற்பட்டதால் லதா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
Also Read: திருப்பூரில் மீண்டும் அரங்கேறிய வரதட்சணை கொடுமை.. திருமணமான 10 மாதத்தில் பெண் தற்கொலை..!
இதனையடுத்து லதா உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெங்களூரு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரஞ்சித் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் அடுத்த கட்ட விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை ஒரு தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)