தடுப்பூசி போட்ட 17 வயது மாணவி.. சில நிமிடங்களில் மயங்கி விழுந்து மரணம்.. துடிக்கும் பெற்றோர்!!
"வீடு தேடி வந்து கார்ப்பரேஷன் ஊழியர்கள் கூப்பிட்டதால் தான் மகளை அழைத்துச் சென்று தடுப்பூசி போட்டோம். நல்லா இருந்த என் பிள்ளையைக் கொல்லத்தானா அழைத்தார்கள்?" என மாணவியின் தந்தை கண்ணீர் விட்டு கதறியுள்ளார். தடுப்பூசி தான் தனது மகளின் மரணத்திற்குப் காரணம் எனப் பெற்றோர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நாசிக், ஜுன் 27: மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாநகராட்சி பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் டெட்டனஸ் மற்றும் டிப்தீரியா (TD) நோய்களுக்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 17 வயது மாணவி ஒருவர், சில நிமிடங்களிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாசிக் பகுதியைச் சேர்ந்த ஸ்ரவானி என்ற 17 வயது மாணவி, தனது தந்தையுடன் மாநகராட்சி தடுப்பூசி முகாமிற்குச் சென்று TD (Tetanus and Diphtheria) தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டு வீடு திரும்பியுள்ளார். ஆனால், வரும் வழியிலேயே அவருக்குக் கடுமையான தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க: காதலன் உடன் இணைந்து வருங்கால கணவரை கொலை செய்த பெண்.. பகீர் சம்பவம்!
மருந்தகத்திலேயே மயங்கி விழுந்த சோகம்:
இதன் காரணமாக அருகில் இருந்த மருந்தகம் ஒன்றிற்குச் சென்று, தனக்கு மயக்கம் வருவதாகக் கூறி மாத்திரை கேட்டுள்ளார். அங்கு நின்று கொண்டிருந்த சில நொடிகளிலேயே, ஸ்ரவானி திடீரென நிலைதடுமாறி தரையில் சரிந்து விழுந்து துடிதுடித்துள்ளார். அவரது மூக்கு மற்றும் வாயில் இருந்து இரத்தம் கசிந்த நிலையில், உடனடியாக அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
பெற்றோரின் கதறல் மற்றும் வழக்குப்பதிவு:
“வீடு தேடி வந்து கார்ப்பரேஷன் ஊழியர்கள் கூப்பிட்டதால் தான் மகளை அழைத்துச் சென்று தடுப்பூசி போட்டோம். நல்லா இருந்த என் பிள்ளையைக் கொல்லத்தானா அழைத்தார்கள்?” என மாணவியின் தந்தை கண்ணீர் விட்டு கதறியுள்ளார். தடுப்பூசி தான் தனது மகளின் மரணத்திற்குப் காரணம் எனப் பெற்றோர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து அம்பா காவல் துறையினர் விபத்து மரணம் எனப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதிகாரிகளின் விளக்கம் மற்றும் தற்காலிகத் தடை:
இந்தச் சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “உயிரிழந்த மாணவிக்கு செலுத்தப்பட்ட அதே தொகுப்பைச் சேர்ந்த தடுப்பூசி, அந்த முகாமில் நான்கு கர்ப்பிணிப் பெண்கள் உட்படப் பலருக்குச் செலுத்தப்பட்டது. ஆனால், அவர்கள் யாருக்கும் எந்தவித உடல்நலப் பாதிப்பும் ஏற்படவில்லை” எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: பிரதமர் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் 2026: சிறந்த குழந்தைகளுக்கான தேசிய விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தத் குறிப்பிட்ட தடுப்பூசி மருந்தைப் பயன்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசியால் ஏற்பட்ட பின்விளைவுகள் குறித்து ஆய்வு செய்யும் சிறப்பு மருத்துவக் குழுவினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.