Arunachal Pradesh Landslide: அருணாச்சல பிரதேசத்தில் அதிர்ச்சி! நிலச்சரிவில் இரு குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு..

Heavy Rains in Arunachal Pradesh: அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்கு கமெங் மாவட்டத்தில், செப்பாவுக்கு அருகே கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்தனர். செப்பா-பனா சாலையில் பயணித்த வாகனம் நிலச்சரிவில் சிக்கி ஆழமான பள்ளத்தில் விழுந்தது. மீட்புப் பணிகள் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக தாமதமானது. உயிரிழந்தவர்கள் அனைவரும் பனாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Arunachal Pradesh Landslide: அருணாச்சல பிரதேசத்தில் அதிர்ச்சி! நிலச்சரிவில் இரு குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு..

நிலச்சரிவு ஏற்பட்ட காட்சிகள்

Published: 

31 May 2025 22:12 PM

அருணாச்சலப் பிரதேசம், மே 31: அருணாச்சலப் பிரதேசத்தின் (Arunachal Pradesh) கிழக்கு கமெங் மாவட்டத்தில் உள்ள செப்பாவில் நேற்று அதாவது 2025 மே 30ம் தேதி இரவு ஏற்பட்ட பலத்த மழை (Heavy Rain) காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் (Landslide) வாகனத்தில் பயணித்த இரு குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு, பலத்த மழைக்கு இடையில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுப்பட்டனர். இந்த சம்பவமானது சரியாக கிழக்கு கமெங் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 13ன் பனா – செப்பா பிரிவில் நடந்தது.

பள்ளத்தில் விழுந்த வாகனம்:

அருணாச்சலம் மாநிலம் பிச்சோம் மாவட்டத்தில் உள்ள பனாவிலிருந்து செப்பாவுக்கு வாகனம் சென்று கொண்டிருந்தபோது, கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரும் பானாவில் உள்ள கிச்சாங் கிராமத்தில் வசிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மீட்பு படையினர் உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

ஆனால், நேற்று அதாவது 2025 மே 30ம் தேதி இரவு முழுவதும் பெய்த மழை, நிலச்சரிவுகள் மற்றும் மோசமான வானிலை காரணமாக மீட்கும் பணி தாமதமானது. தொடர்ந்து, உள்ளூர் கிராமவாசிகளின் உதவியுடன் மீட்பு படையினர் இன்று அதாவது 2025 மே 31ம் தேதி மீண்டும் மீட்புப்பணியில் ஈடுபட்டது. பல மணிநேர தேடுதலுக்கு பிறகு, நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 150 மீட்டர் கீழே வாகனம் கண்டுபிடிக்கப்பட்டன. அப்போது, உயிரிழந்த 7 பேர் வாகனத்திற்குள் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டன.

மழையால் அதிகரிக்கும் உயிரிழப்பு:

கடந்த 3 நாட்களில் மணிப்பூர், மிசோரம், அசாம், அருணாச்சல பிரதேசம், திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் தொடர் கனமழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் வசித்து வந்த வீடுகள் இடிந்து விழுந்ததால் ஏராளமானோர் வீடற்று முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த மாநிலங்களை சுற்றியுள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மாநிலங்கள் முழுவதும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.