டிஜிட்டல் அரெஸ்ட் எனக் கூறி 75 வயதான நபரிடம் 23.5 லட்சம் மோசடி – என்ன நடந்தது?
Digital Arrest Scam : நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி 75 வயதான முதியவரிடம் டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் ரூ.23.5 லட்சத்த சைபர் குற்றவாளிகள் ஏமாற்றியிருக்கின்றனர். வங்கி மேலாளரின் முயற்சியால் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

ராஜஸ்தான் (Rajasthan) மாநிலம் ஜெய்ப்பூரில் (Jaipur) உள்ள மாண்சரோவர் பகுதியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியா டிவி வெளியிட்டுள்ள கட்டுரையில் டிப்படையில் சந்தோஷ்குமார் என்ற 75 வயதான நபர் இணைய மோசடி சம்பவத்தில் ரூ.23.56 லட்சம் இழந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சைபர் குற்றவாளிகள், இவர் பணப்பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டதாக கூறி, போலீஸ் மற்றும் சிபிஐ அதிகாரிகள் போல நடித்து மூன்று நாட்கள் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ (Digital Arrest) எனப்படும் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர். கடந்த மே 23, 2025 அன்று காலை 9:44 மணிக்கு, சந்தோஷ் குமாருக்கு இரண்டு தெரியாத எண்களிலிருந்து கால் வந்திருக்கிறது. அதில் பேசிய ஒருவர், கோலாபா காவல் நிலையத்திலிருந்து சஞ்சய் குமார் பேசுகிறேன் என தன்னை அறிமுகப்படுத்தியிருக்கிறார். மேலும் அவர், உங்கள் மொபைல் எண் மூலம் ரூ.2.8 கோடி மதிப்புள்ள பணம் பரிமாற்ற மோசடி நடைபெற்றுள்ளதாகவும், உங்கள் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதன் பின்னர், ரோஹித் குமார் குப்தா என்கிற போலி சிபிஐ அதிகாரி ஒருவர் வீடியோ காலில் இணைக்கப்பட்டிருக்கிறார். இந்த இருவரும் சந்தோஷ் குமாரை பயமுறுத்தி, அவர்கள் மீது குற்றச்சாட்டு உண்மைதான் என்று நம்ப வைத்திருக்கின்றனர். மேலும், அவர்களை நம்ப வைக்க நீதிமன்றம் போன்ற இடத்தில், நீதிபதி ஒருவர் அவரது வங்கி கணக்குகள் முடக்கப்படும் என உத்தரவிடும் காட்சியை காண்பித்திருக்கின்றனர்.
ரூ.23.56 லட்சம் மோசடி
ஏற்கனவே உடல்நிலை பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த சந்தோஷ் குமார், மேலும் மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கிறார். மேலும் அவர்கள் சொன்னதை உண்மை என நம்பிய சந்தோஷ் குமார், அவர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்குக மொத்தம் ரூ.23.56 லட்சத்தை அனுப்பியிருக்கிறார். மேலும் அவரிடம் அதிக பணம் இல்லை என்று தெரிவித்தபோது, அவரது ரூ.20 லட்சம் மதிப்பிலான ஃபிக்சட் டெபாசிட்டில் இருந்து எடுத்து தருமாறு மேலும் அழுத்தம் கொடுத்திருக்கின்றனர்.




வங்கி மேலாளரால் வெளிச்சத்துக்கு வந்த மோசடி
இதனயைடுத்து அவர் வங்கிக்கு சென்று ஃபிக்சட் டெபாசிட்டிலிருந்து பணம் எடுக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார். இதனால் வங்கி மேலாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் முழு விவரங்களையும் கேட்டபோது அவர் ஏமாற்றப்பட்டது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து வங்கி மேலாளர் உடனடியாக போலீசில் தகவல் தெரிவித்துள்ளார். மே 26, 2025 அன்று ஷிப்ராபத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தற்போது சைபர் கிரைம் பிரிவு இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி வருகிறது.
போலீசாரின் எச்சரிக்கை
ஜெய்ப்பூர் சைபர் கிரைம் பிரிவு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. “காவல்துறை, சிபிஐ அதிகாரிகள், அல்லது நீதிமன்றம் என கூறி வீடியோ காலில் பணம் கேட்பது போலியானது. உண்மையான அரசு அமைப்புகள் இப்படி பணம் கேட்டோ அல்லது வழக்குகள் குறித்து வீடியோ மூலம் பயமுறுத்த மாட்டார்கள். இத்தகைய சந்தேகத்துக்குரிய அழைப்புகள் வந்தால் உடனே 1930 சைபர் குற்ற ஹெல்ப்லைனை தொடர்பு கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.