3 முறை பாகிஸ்தானுக்கு பயணம்.. உளவு பார்த்த பிரபல யூடியூபர்.. சிக்கியது எப்படி?
Punjab Youtuber Arrest In Spying Case : பஞ்சாபைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஜஸ்பீர் சிங் என்பவர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தான் உளவுத்தறை அதிகாரிகளுடன் தொடர்பு இருந்ததோடு, மூன்று முறை பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

டெல்லி, ஜூன் 04 : பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பஞ்சாபைச் சேர்ந்த மற்றொரு யூடியூபர் (Pakistan spy arrest) கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரியுடன் யூடியூபர் தொடர்பில் இருந்ததாக அதிகாரிகள் கூறி உள்ளனர். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானுக்கு உளவு பார்க்கும் நபர்களை அதிகாரிகள் அடுத்தடுத்து கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது பஞ்சாப்பைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஜஸ்பீர் சிங் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் ஜான்மஹால் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவரை பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இவர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தாக கைது செய்யப்பட்டார்.
உளவு பார்த்த பிரபல யூடியூபர் கைது
இவர் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரியான ஷாகிர் என்பவருடன் சிங் தொடர்பில் இருந்ததாகவும், பாகிஸ்தானுக்கு மூன்று முறை சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது செல்போனில் பல பாகிஸ்தான் எண்களையும் போலீசார் கண்டிபிடித்தனர்.




டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நடந்த பாகிஸ்தான் தேசிய தின விழாவில் சிங் கலந்து கொண்டார் என்றும் , அங்கு அவர் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் பேசியதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். அவர் 2020, 2021 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் மூன்று முறை பாகிஸ்தானுக்கு பயணம் செய்துள்ளார்.
இவருக்கு கைதான யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுடனும் தொடர்பு இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஜோதி மல்ஹோத்ராவுடன் பலமுறை பேசியதாக தெரிகிறது. தற்போது பஞ்சாபைச் சேர்ந்த சிங் விசாரணையில் உள்ளார்.
தொடர் நடவடிக்கை
#BREAKING: Punjab Police arrests YouTuber Jasbir Singh a resident of Village Mahlan, Rupnagar for running espionage network for Pakistan ISI in India.
Jasbir Singh, who operates a YouTube channel called “Jaan Mahal,” has been found associated with PIO Shakir alias Jutt Randhawa,… pic.twitter.com/I0coqRMi5b
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) June 4, 2025
2025 ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது. இப்படியே மூன்று நாட்கள் நடந்த நிலையில், 2205 மே 10ஆம் தேதி பதற்றம் தணிந்தது.
இதற்கிடையில், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தாக அடுத்தடுத்து பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை, பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக பஞ்சாப் காவல்துறை ஏழு பேரை கைது செய்துள்ளது. அமிர்தசரஸில் உள்ள அஜ்னாலாவைச் சேர்ந்த ஃபலக்ஷேர் மாசிஹ் மற்றும் சூரஜ் மாசிஹ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், 2025 மே 15ஆம் தேதி பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, ஹரியானாவைச் சேர்ந்த அரசு அதிகாரி உள்ளிட்டோர் அடுத்தடுத்து கைதாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.