சிகரெட் வாங்க கடும் கட்டுப்பாடுகள்.. இனி 21 வயதிற்கு மேல் தான்.. மாநில அரசு அதிரடி!
Tobacco Rules Karnataka : அண்டை மாநிலமான கர்நாடகாவில் புகையிலை பயன்பாட்டிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதாவது, 21 வயதுக்கு குறைவாக உள்ள நபர்கள் சிகரெட் வாங்கவோ, விற்பனை செய்யவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் ஹூக்கா பார்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக, ஜூன் 01 : கர்நாடகாவில் புகையிலை பொருட்களை (Karnataka COTPA rules) வாங்குவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புகையிலை வாங்கவும், விற்பனை செய்வதற்குமான வயது வரம்பை 18லிருந்து 21 ஆக கர்நாடக அரசு உயர்த்தியுள்ளது. அதோடு, ஹூக்கா பார்களுக்கு முற்றிலுமாக தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. புகையிலை பொருட்களை இளைஞர்கள் முதல் பெயர்களை வரை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், புகையிலை பொருட்களுக்கு எதிராக பல்வேறு நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், கர்நாடகாவில் புகையிலை பொருட்களை வாங்குவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் சிகரெட் வாங்க கடும் கட்டுப்பாடுகள்
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டத்தில் பெரிய திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி, சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் வழங்கல் மற்றும் விநியோகம் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, பொது இடங்களில் புகையிலையை மெல்லுதல் மற்றும் துப்புதல் ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளன.




எந்தவொரு கல்வி நிறுவனத்திலிருந்தும் 100 மீட்டருக்குள் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்கான கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், பப்கள் அல்லது கஃபேக்கள் என எந்த இடங்களில் ஹூக்கா பார்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இனி 21 வயதிற்கு மேல் தான்
Significant amendments have been made to the Cigarettes and Other Tobacco Products Act (COTPA), and a notification to this effect has been issued by our state government. These measures will play a crucial role in safeguarding public health, and the official order issued on the… pic.twitter.com/I7JyvqcIeo
— Dinesh Gundu Rao/ದಿನೇಶ್ ಗುಂಡೂರಾವ್ (@dineshgrao) May 31, 2025
புகையிலை பொருட்களை வாங்குவதற்கும், விற்பனை செய்தவதற்கான வயது வரம்பு 18 லிருந்து 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை மீறினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். சட்டப்பிரிவு 4ஏ-ன் படி, ஹூக்கா பார்களை நடத்தினால் ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
முன்பும் கர்நாடகாவில் ஹூக்கா பார்கள் தடை விதிக்கப்பட்டு இருந்தாலும், சட்டவிரோதமாக சில இடங்களில் செயல்பட்டு வந்ததாக அதிகாரிகள் கூறினர். இதனை அடுத்து, இப்போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில, இளைஞர்களை போதைப்பொருட்கள் பழக்கத்தில் இருந்து வெளியேற்ற, சிகரெட், போதைப் பொருட்கள், இ-சிகரெட், ஹூக்காக்கள் உள்ளிட்டவற்றை உலக நாடுகள் தடை செய்ய வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.