இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா.. 4 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு.. பலி எண்ணிக்கை உயர்வு!
India Covid Cases Update : நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி, இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றால் 4,302 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் 1,372 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லி, ஜூன் 04 : இந்தியாவில் கொரோனா பாதிப்பு (India Covid Cases) நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் 4,302 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டு பரவிய தொடங்கிய கொரோனா, ஓராண்டு முழுவதும் உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். மேலும், ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், உலக நாடுகள் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டன. அதன்பிறகு, தடுப்பூசிகள் என கொண்டு வரப்பட்டு, கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தது. அதன்பிறகு, கொரோனா தொற்று பெரிய அளவில் பரவவில்லை. இந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று மீண்டும் மக்களை அச்சுறுத்தி வருகிறது.
4 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு
தாய்லாந்து, சிங்கப்பூரில் கொரோனா தொற்று பரவிய நிலையில், 2025 மே மாதத்தில் இருந்தே இந்தியவில் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 4 புதிய வகை கொரோனா தொற்று இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவை LF.7, XFG, JN.1 மற்றும் NB.1.8.1 தொடர்களைச் சேர்ந்தவை ஐசிஎம்ஆர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சுகாதாரத்துறை அமைச்சகம் தனது இணையத்தில் வெளியிட்ட தகவலின்படி, கொரோனா தொற்றால் இந்தியாவில் 4,302 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 7 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிராவில் 4 பேரும், தமிழ்நாடு, டெல்லியில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.




இவர்களின் மூன்று பேர் 22 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களும், மற்றவர்கள் சுவாச பிரச்னை, நீரிழிவு போன்றவற்றை கொண்டிருந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் 276 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தொற்று எண்ணிக்கை 4,302 ஆக உயர்நதுள்ளது.
மாநில வாரியான பாதிப்பு விவரம்
இதில், அதிகபட்சமாக கேரளாவில் 1,372 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்ததாக, மேற்கு வங்கத்தில் 432 பேரும், மகாராஷ்டிராவில் 510 பேரும், கர்நாடகாவில் 324 பேரும், குஜராத்தில் 461 பேரும், டெல்லியில் 457 பேரும், தமிழகத்தில் 216 பேரும், உத்தர பிரதேசத்தில் 201 பேரும், புதுச்சேரியில் 22 பேரும், ஆந்திராவில் 31 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று இப்படி அதிகரித்து வருவதை அடுத்து, கேரளா, கர்நாடகா, தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா பொது இடங்களில் முகக் கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சுகாதார வழிகாட்டு நெறிமுறைகள் மக்கள் கடைபிடிக்க வேண்டும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பரவி கொரோனா வைரஸ் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று மத்திய சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பரவி வரும் கொரோனா தொற்று விரீயம் இல்லாதது என்றும் இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.