Kamal Haasan: ஆஸ்கர் விருது குழுவில் கமல்ஹாசனுக்கு இடம்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!
உலக சினிமாவின் மிகப்பெரிய விருதான ஆஸ்கர் அகாடமி விருதுகளுக்கு தேர்வாகும் படங்களுக்கு வாக்களிக்கும் உறுப்பினர்கள் குழுவில் 2025 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் கமல்ஹாசனும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் உலக நாயகன் அழைக்கப்படும் கமல்ஹாசனின் (Kamal Haasan) கலைப் பெருமையை போற்றும் வகையில் அவருக்கு மீண்டுமொரு சிறப்பு கிடைத்துள்ளது. அதாவது உலக சினிமாவின் மிகப்பெரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் அகாடமி விருதுகளுக்கு (Academic Awards) வாக்களிக்கும் உறுப்பினராக அவர் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் உலகம் முழுவதும் இருந்து ஆஸ்கர் விருதுக்கு பல்வேறு படங்கள் பரிந்துரைக்கப்படும். அதனை இறுதி செய்து விருதுக்கு தகுதியான படம் எது என்பதை 534 உறுப்பினர்கள் கொண்ட குழுவானது முடிவு செய்யும். இறுதிப்பட்டியலில் பங்கேற்கும் படங்களுக்கு இவர்கள் தங்கள் வாக்குகளை அளிப்பார்கள். இதன்மூலம் விருது பட்டியல் இறுதி செய்யப்படும். அந்த உறுப்பினர்கள் குழுவில் தான் கமல்ஹாசனுக்கும் இடம் கிடைத்துள்ளது. கமலுக்கு கிடைத்த இந்த பெருமை தமிழ் சினிமாவுக்கே பெருமையான தருணம் என அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உள்ளார். தயாரிப்பாளர், நடன இயக்குநர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் என அவர் அத்தனை துறைகளிலும் பங்களிப்பை நிகழ்த்தியுள்ளார். புதிய திரைப்பட தொழில்நுட்பங்கள் இந்தியாவில் அறிமுகமாகும் முன்பே அவர் அதனைக் கற்று தன்னுடைய படங்களில் செயல்படுத்தி காட்டியுள்ளார். அதனால் தான் கமல்ஹாசனை ரசிகர்கள் உலக நாயகன் என அழைக்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில் அவருக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியா தரப்பில் இடம் பெற்றவர்கள்
2025, ஜூன் 26 ஆம் தேதி ஆஸ்கர் விருதுகள் வழங்கும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் அமைப்பு இதற்கான பட்டியலை அறிவித்தது. இதில் பிரபலங்களான கில்லியன் ஆண்டர்சன், அரியானா கிராண்டே, செபாஸ்டியன் ஸ்டான், ஜெர்மி ஸ்ட்ராங் ஆகியோரின் பெயரும் இடம் பெற்றிருக்கிறது.




இந்தியா தரப்பில் பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரோனா, இயக்குநர் பாயல் கபாடியா ஆகியோருக்கும் இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆவணப்படத் இயக்குநர் ஸ்மிருதி முந்த்ரா, பிரபல ஆடை வடிவமைப்பாளர் மாக்சிமா பாசு, ஒளிப்பதிவாளர் ரணபீர் தாஸ் ஆகியோர் இந்த ஆண்டு பட்டியலில் இந்தியாவிலிருந்து பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இடம்பெற்ற கலைஞர்களை குறிப்பிட்டு இவர்கள் உலகளாவிய சினிமாவுக்கு அழியாத பங்களிப்பை செய்துள்ளதாக ஆஸ்கர் அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரி பில் கிராமர் மற்றும் தலைவர் ஜெனட் யாங் ஆகிய இருவரும் புகழ்ந்தனர்.
2025 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 534 பேரில் 41 சதவீத உறுப்பினர்கள் பெண்களாவர். இவர்களில் பாதிக்கும் மேல் அதாவது 60 சதவிகிதம் அமெரிக்காவிற்கு வெளியே உள்ள பிற 60 நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கௌரவிக்கப்பட்ட உறுப்பினர்கள் எண்ணிக்கையுடன் இதனைச் சேர்த்தால் மொத்தம் 11 ஆயிரம் இருப்பார்கள் எனவும் அகாடமி விருதுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
2026ல் ஆஸ்கர் திருவிழா எப்போது?
2026 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா மார்ச் 15 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும். கோனன் ஓ’பிரையன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளம். முன்னதாக விருதுக்கு பரிந்துரை செய்யப்படும் படங்கள் மீதான வாக்களிப்பு 2026, ஜனவரி 12 ஆம் தேதி முதல்2026, ஜனவரி 16 ஆம் தேதி வரை நடைபெறும். இதன் பின்னர் பரிந்துரைக்கப்பட்டவர்களின் இறுதிப் பட்டியல் ஜனவரி 22ஆம் தேதி அன்று வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.