கூட்டணி கட்சிகளுக்காக விசிக சரியாகப் பணியாற்றவில்லை.. நிர்வாகிகளை விளாசிய திருமாவளவன்..
Tamilnadu Assembly Election: திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறது என்றால் அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுதியான நிலைப்பாடும் ஒரு காரணம். கூடுதல் இடங்களுக்கு ஆசைப்பட்டு, மாற்றம் என்ற பெயரில் நாம் வேறு ஒரு முடிவை எடுத்திருந்தால் தமிழ்நாடு அரசியல் தலைகீழாக மாறியிருக்கும்.
கூட்டணி கட்சியினர் போட்டியிட்ட இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒற்றுமையாக பணியாற்றவில்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தல் முடிந்து நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், திமுக கூட்டணியில் இடம் பெற்று இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வீடியோ பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றியை பெறவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம் என்று பேசியுள்ளார்.
இதையும் படிக்க: தமிழக காங்கிரஸுக்கு பெண் தலைவர்?.. டெல்லி மேலிடம் தீவிர ஆலோசனை.. மே 10-ல் வெளியாகும் முக்கிய அறிவிப்பு?
8 தொகுதிகளில் விசிக வெல்லும்:
மக்கள் திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரிக்கிறார்கள் என்ற உண்மையை களத்தில் காண முடிந்தது. மக்களின் பேராதரவோடு விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 8 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என நம்புகிறேன். ஒவ்வொரு ஆண்டும் அம்பேத்கர் பிறந்தநாளில் விருதுகள் வழங்கும் விழாவை நடத்தி வருகிறோம். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு விருதுகள் வழங்கும் விழா நடைபெறும். தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டையும் நடத்த இருக்கிறோம். இதற்காக ஓரிரு நாட்களில் தேதியை வெளியிடுவேன்.
ஒற்றுமையாக பணி செய்யவில்லை:
தேர்தலில் நம்முடைய கட்சியினர் ஒரு சில இடங்களை தவிர மற்ற தொகுதிகளில் கட்டுக்கோப்பாக இருந்து சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். நாம் போட்டியிடாத பிற தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு தேர்தல் பணியை ஒற்றுமையாக செய்யவில்லை என தகவல் வந்துள்ளது. விரைவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும். தேர்தல் பணிகள் குறித்து கலந்துரையாடல் செய்யப்படும்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நமது கூட்டணியை சிதறவைக்க வேண்டுமென பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள். குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேற்றினால் திமுக தலைமையிலான கூட்டணியை சிதறடித்துவிடலாம் என கணக்கு போட்டார்கள். அதற்கு நாம் கொஞ்சம் கூட இடம் கொடுக்கவில்லை. மதவாத, சாதியவாத சக்திகள் புகுந்து அழித்து கொண்டு அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். சதிசுத்தி அரசியலை முன்னெடுக்க தங்களால் முடிந்த முயற்சிகள் நடந்தது.
வெற்றிக்கு விசகவும் காரணம்:
திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறது என்றால் அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுதியான நிலைப்பாடும் ஒரு காரணம். கூடுதல் இடங்களுக்கு ஆசைப்பட்டு, மாற்றம் என்ற பெயரில் நாம் வேறு ஒரு முடிவை எடுத்திருந்தால் தமிழ்நாடு அரசியல் தலைகீழாக மாறியிருக்கும். அதை நாம் விரும்பவில்லை. கூட்டணியில் ஒரு தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டோம். தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: Tamil Nadu Election 2026 Results Live Streaming: தமிழ்நாடு தேர்தல் முடிவுகளை எங்கு, எப்போது பார்க்கலாம்?.. முழு விவரம்!!
ஆட்சியை கைப்பற்றும் வலிமை இல்லை:
திமுக, அதிமுகவுக்கு எதிரான வாக்குகளை அவ்வப்போது உருவாகும் புதிய கட்சிகள் பெற்றிருக்கிறது. இந்த முறை புதிதாக களம் கண்டுள்ள விஜய் திமுக, அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பிரித்திருக்கிறார். ஆனால், ஆட்சியை கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை. அதற்கான வாய்ப்பே கிடையாது. முடிவு எதுவாக இருந்தாலும் நம்முடைய அரசியல் களம் நீர்த்துப்போகாது. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.