தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை தொடர் ரத்து… என்ன காரணம்… முன்பிருந்ததை விட விஜய்க்கு வேகம் குறைந்ததா?
Tvk Leader Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த பரப்புரை பயணங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு என்ன காரணம். கட்சி தொடங்கிய புதிதில் விஜய்க்கு இருந்த வேகம் மெல்ல மெல்ல குறைய தொடங்கியதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் உச்சபட்ச நடிகராக இருந்து வந்த விஜய் தனது பெயரில் இருந்த மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றிக் கழகம் கட்சியாக மாற்றம் செய்து 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக வைத்து அரசியல் பணிகளை முன்னெடுத்து வருகிறார். அதன்படி, வி.சாலையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் இருந்து கட்சியின் தலைவர் விஜய்யின் அதிரடி அரசியல், அதிரடி அரசியல் பேச்சு, கட்சியின் மாநில மாநாடுகள், கட்சி நிகழ்ச்சிகள், கட்சி சார்பில் வாக்குச்சாவடிகள் அமைத்தல், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நியமித்தல் என்பன உள்ளிட்ட பணிகளை தவெக தலைவர் விஜய் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றார். இந்த நிலையில், சமீப காலமாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொள்ளவுள்ள பரப்புரை பயணம் தாமதமாவதும், ரத்து செய்யப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.
வில்லிவாக்கத்தில் விஜய் பரப்புரை திடீர் ரத்து
அதன்படி, கடந்த மார்ச் 30- ஆம் தேதி (திங்கள்கிழமை) தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தாக்கல் செய்துவிட்டு, பெரம்பூர், கொளத்தூர் உள்ளிட்ட 5 தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். அதற்கான முன் அனுமதியும் காவல்துறை தரப்பிலிருந்து பெறப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் வில்லிவாக்கம் தொகுதியில் விஜய்யின் பரப்புரை பயணம் திடீரென கட்சி தரப்பில் இருந்து ரத்து செய்யப்பட்டது. இதற்கு, போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்க: எழும்பூர் தேர்தல் களம் 2026.. இளம் ரத்தம் பாயும் நான்கு முனைப் போட்டி.. ஒரு சிறப்புப் பார்வை!!




போதிய நேரம் வழங்காததால் பரப்புரை ரத்தா
இதேபோல, வில்லிவாக்கம் மற்றும் டி. நகர் சட்டமன்ற தொகுதிகளில் மீண்டும் பரப்புரை மேற்கொள்ள விஜய் திட்டமிட்டிருந்தார். ஆனால், இந்த தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு போதிய நேரம் வழங்கவில்லை என்று கூறி விஜய் தனது பரப்புரையை திடீரென ரத்து செய்தார். இதேபோல, சைதாப்பேட்டையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால், இந்த பரப்புரையும் திடீரென ரத்து செய்யப்பட்டது.
சென்னையில் முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல்
இதில், சுமார் 1 மணி நேரம் மட்டுமே பரப்புரை மேற்கொள்வதற்கு போலீசார் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், பிரச்சாரத்தை ரத்து செய்ததாக தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் சைதாப்பேட்டை, டி. நகர் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 10 நிமிடங்கள் பிரச்சாரம் செய்தாலே அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவிடும். ஆனால், தவெக தலைவர் விஜய்க்கு 1 மணி நேரம் வழங்கியும் அந்த நேரம் போதாது என்று பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளார்.
14 நாள்களில் தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொள்ள முடியுமா
முன்னதாக, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் 234 சட்டமன்ற தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்ய வருவதாக தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார். ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும், தேர்தலுக்கு 14 நாட்களே உள்ள நிலையில், அனைத்து தொகுதிகளிலும் எவ்வாறு பிரச்சாரம் செய்ய முடியும் என்ற கேள்வி அந்த கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது. மொத்தத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஆரம்பத்தில் இருந்த வேகம், தற்போது மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளதாகவே தெரிகிறது.
மேலும் படிக்க: ஸ்டார் தொகுதியான பெரம்பூர் சட்டமன்ற தொகுதி… விஜய், திலகபாமா வேட்பு மனு ஏற்பு..