தவெக தலைமைக்கு அடுத்த சிக்கல்… பெரம்பூர் தொகுதியில் விஜய் பெயரில் 4 சுயேட்சை வேட்பாளர்கள்!
Tvk Leader Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிட கூடிய பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் அவரது பெயரில் 4 வேட்பாளர்கள் உள்ளனர். இது வாக்காளர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்து என்று அந்தக் கட்சியினர், அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23- ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்பார்த்து காத்திருந்த அரசியல் கட்சிகள் தங்களுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு, பிரசாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அந்த வகையில், கடந்த மார்ச் 30- ஆம் தேதி முதல் ஏப்ரல் 6- ஆம் தேதி வரை பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடக்கூடிய தொகுதிகளில் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்து அதற்கான வேட்பு மனுக்களை இரு தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தாக்கல் செய்தார். இதில், பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தவெக தலைவர் விஜய், திமுக, பாமக, நாதக ஆகிய கட்சிகளை சேர்ந்த 40 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
தவெக தலைவர் விஜய் பெயரில் 4 வேட்பாளர்கள்
இதில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெயரில் ஜி. விஜய், கே. விஜய் என 2 நபர்களும், ஜோசப் என்ற பெயரில் எஸ். ஜோசப், எம். ஜோசப் என 2 நபர்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில், அவர்கள் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம், ஒரு சட்டமன்ற தொகுதியில் ஒரே பெயரில் பல்வேறு வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டால் அது வாக்காளர்களுக்கு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற குழப்பத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது. இது எதிர்க் கட்சிகளின் திட்டமிட்ட சதி திட்டம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க: தமிழகத்தின் பணக்கார வேட்பாளர் யார் தெரியுமா?.. அப்போ விஜய் இல்லையா?




ஓ.பன்னீர் செல்வம் பெயரில் சுயேட்சை வேட்பாளர்கள்
இதே போல, மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் முன்னாள் முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். அப்போது, அதே தொகுதியில் பன்னீர் செல்வம் பெயரில் சுயேச்சையாக 4 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து போட்டியிட்டனர். அதேபோல, தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடக்கூடிய பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் அவரது பெயரில் 4 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து போட்டியிட உள்ளனர்.
தவெக தலைமைக்கு மேலும் தலை வலி
ஏற்கெனவே, கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்துக்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு பிரசாரம், பரப்புரை, மக்கள் சந்திப்பு உள்ளிட்டவற்றுக்கு போலீசார் உரிய அனுமதி வழங்குவதில் தாமதமும், இடை நிறுத்தமும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், அவர் போட்டியிடக் கூடிய தொகுதியில் அவரது பெயரில் 4 வேட்பாளர்கள் இருப்பது தவெகவுக்கு மேலும் தலை வலியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: ஆதவ் அர்ஜுனா வேட்பு மனு பரிசீலனை நிறுத்தி வைப்பு.. தவெகவுக்கு வந்தது புதிய சிக்கல்!!